புண்ணியம் செய்து புகுந்தேனோ ?

யோகிராம்சுரத்குமார்

விசிறிசாமியார் என்ற பாலகுமாரன் கவிதை/கதைத்தொகுப்பு அதில்...

//பாவிகளை என்னிடம் வரவிடுங்கள்
அவர்களிடம் பரிவோடு இருக்க ஆசைப்படுகிறேன் என்றார் ஏசு...
என்னையும் நீ அழைத்தாய்
பாவி என்பதாலா ?
புண்ணியம் செய்து புகுந்தேனா?//

இதை இன்று படிக்கையில் அவரின் விஷாத மனமும் அவரின் விசார மனமும் ஆச்சரியம் தரும்.

ஆனால் எனக்கோ இன்றும் இதே கேள்வி உண்டு.

உருவம் இன்றி அருவம் தொட இயலாது. திசை நோக்கி தொழுவதும் ஒரு வகையான உருவ வழிபாடே....

யோகியின் சிலை ஒன்று வீட்டிற்கு வரவேண்டும் என்பது என் நெடுநாள் அவா...அதற்காக நான் முயற்சித்தப்போது கிடைக்காத ஒன்று.

முகநூல் நண்பர் மாம்பலம் விஸ்வநாதன் மூலம் எனக்கு ஒரு தொடர்பு எண் கிடைத்தது. சரஸ்வதியிடம் கேட்டேன். உன் இஷ்டம் உன்னால அதை வைத்து ஒழுங்கா பூஜை செய்ய முடியும்னா சரி என்றாள்.




மீண்டும் குழப்பம்.

அய்யன் பாலகுமாரன் அவர் மகன் சூர்யாவின் திருமண நிகழ்வுகளாக பதிவேற்றியவாறு இருக்க....

என் கேள்வி யோகியோடு...என் வீடு உன் விக்ரகம் தாங்குமா....எனக்கு தகுதியுண்டா....

இது அனைத்தும் ஏப்ரல் - 5 இரவில்...

கேள்விகள் தின்ன உறங்கிப்போனேன்...

அதிகாலையில் பாலகுமாரன் பதிவு சொல்கிறது....





குரு அருள் என்பது இவ்விதமே... உங்கள் கேள்வியும் உங்கள் தாகமும் சத்தியமாக இருப்பின் அவைகள் நீர் வார்க்கப்படும்...அந்த தாகம் போஷித்து வளரும்.

ஆனாலும் உறுதியான முடிவு எடுத்து வியாழன் அன்று ஹரி என்பவரை தொடர்பு கொண்டு முன் பணம் செலுத்தி ஆர்டர் செய்யப்பட்டது.

சுவாமிமலை மே - 1 இறங்கி ஹரி என்பவரை தொடர்பு கொண்டாகிவிட்டது.

காத்திருக்க ஹரி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார்....



வாங்க பட்டறைக்கு போவோம்...பாலிஷ் போட்டுகிட்டு இருக்காங்க என்றார்.

பட்டறையில் அமரவைத்து தண்ணீர் தந்தார்.

அவர் ஐந்தாம் தலைமுறையாம் சிலைகள் செய்வதில்...சுவாமிமலையில் இயங்கும் 254 பட்டறைகளில் இரண்டு இவருக்கும் இவர் பார்ட்டனருக்கும் உரியதாம்.

விரைவில் தனியே ஒரு பட்டறை போடப்போவதாக சொன்னார்.

சுவாமிமலை எங்கள் குலதெய்வம். அங்கே ஒரு தொடர்பு மூலம் எனக்கு யோகியின் சிலை என்ற பரவசம் சிறிது அடங்கி....

அது என்னங்க இந்த ஊர்ல இவ்வளவு பட்டறை என்று கேட்க....

காவிரியில் கிடைக்கிற வண்டல் மண் அதன் வாகு...அட பாரின்ல போய் சிலை செய்யணும் என்றாலும் இந்த மண் அவசியங்க....

பலபேர் வருவாங்க விலை குறைக்க பேசுவாங்க நீங்க சிலை பத்தி கேட்கறீங்க....

எனக்கு என் தாத்தா சொன்ன கதைங்க இதுக்கெல்லாம் ஆதாரம் எங்க என்று எனக்கு தெரியாதுங்க....

உலோக சிலை செய்யறதுக்கு முன்னாடி இங்க நிறைய கல் சிலை அதுவும் சிவ லிங்கம் செய்த இடங்க இது இந்த லிங்கடி தெரு....இங்க மலையெல்லாம் கிடையாது...ஆனா பாருங்க கல்லை லிங்கமாகவோ வேறு சிலையாகவோ மாற்றி இந்த காவிரி ஓடை வழியாக படகுகளில் பல இடங்களுக்கு போயிருக்கு அதுக்கு ஆதாரம் ஆங்காங்கே இருக்கிற சிவலிங்கம்னு சொலறாங்க.





சுவாமிமலை என்கிறது ஒரு கல் உடைத்து போட்ட கல்குவியல்ங்க பின்னாடி அந்த குவியல் குன்றாக இருக்க சுவாமிமலையாக மாறிடுச்சு என்பார் என் தாத்தா.

பக்கத்துல ஏராகரம் என்ற முருகர் கோயில்தான் இதைவிட காலத்தால முற்பட்டது.

இந்த மண் வளம் காவிரி வண்டல்மண் மோல்டின் எல்லா சின்ன டீடெயிலும் உள்ள போய் செட்டில் ஆகுங்க....

ஒரு இமேஜ் இப்ப.....அப்ப வரைபடம் இல்லன்னா ஓவியம் அதை வைத்து தேன்மெழுகு மூலம் ஒரு கையினால் ஒரு மாடல் செய்வோம் முக்கிய பெரிய டீடெயில் அதில் இருக்கும்.



அதுக்கு மேல் 3 mm திக்னஸ்ல ஒரு மண் கோட்டீங் இதுதான் முதல் லேயர். இது போல மூணு லேயர் உங்கள் யோகி சிலைக்கு போட்டோம். சிலையின் அளவே கோட்டிங் எண்ணிக்கைய முடிவு செய்யும்.



அப்புறம் முக்கியமாக ஒன்ணு சொல்ல மறந்துட்டேன். இங்க பக்கத்துல மௌன சாமின்னு ஒருத்தர் இருக்கார் அவர்கிட்ட இதுபோல யோகி சிலை ஆர்டர வந்திருக்கு என்று சொன்னேன் தலையசைச்சு ஆசி சொன்னார் உங்க மெழுகு மாடல் மூன்று மணி நேரத்துல ரெடியாச்சு...சாமி சிலைக்கே சில சமயம் மூணு நாள் ஆகும்.

இது நான் செய்த எட்டாவது ஞானி யோகி சித்தர் சிலை....யோகியின் இரண்டாவது சிலை...

மெழுகு மாடல் பூஜை அறையில் இரண்டு நாள் வைத்திருந்து அப்புறம்தான் அடுத்த ப்ராச்சஸ்.

மண் வைத்து ஒருபுறம் மூணு கோட்டிங் அப்புறம் காய்ந்த பிறகு மறுபுறம் இதேபோல் மூணு கோட்டிங் இதை அப்புறமா...நிழல்ல காய வைத்து உள்ள இருக்கிற மெழுகை மோலட் கீழே இருக்கிற ஓட்டை வழியாக பர்னஸ்ல சூடு பண்ணி எடுத்துருவோம்







அப்புறம் தானா குளிர வைப்போம்...

பஞ்சலோகத்தை உருக்கி இந்த பாத்திரத்தில் தயாரா வைத்து....மெழுகு இல்லாத மோல்ட் உள்ள இந்த உருக்கை ஊத்துவோம்....

ப்ப்புள்ஸ் இல்லாம...வராம இருக்கிறது மனிதனை தாண்டி இருக்கிறது இந்த உருக்கை ஊத்தறப்பதான் இதுக்கு அனுபவம் தாண்டி ஏதோ ஒண்ணு தேவையிருக்கு...

ஊத்தியாச்சு....குளிர்ந்தாச்சு....அப்புறம் மேல் மண்ணை தட்டி எடுக்கணும்....




இதுவரைக்கும் எல்லாமே கைவினைஞர்களின் வேலைதான் எங்களுக்கு விக்டோரியா மகாராணி காலத்துல நல்ல மரியாதை அங்கீகாரம் இருந்தது என்று சொல்வாங்க...

மோல்ட் எடுத்து தட்டி...அதை என்க்ரேவ் பண்ணி....சின்ன சின்ன டீடெயில் வைத்து....அதை ப்னிஷ் பண்ணி....கண் திறந்து பாலீஷ் பண்ணா சிலை ரெடி ஆனா இங்க எல்லாம் கைவேலைதாங்க....




இங்க இருக்கற பசங்க எல்லாம் பல சாதி பல மதங்க விஸ்வகர்மா மட்டும்தான் இதை செய்யுறாங்க என்ற காலம் ரொம்ப பழசு....

நான் ஐந்தாம் தலைமுறை இந்த தொழில்ல....

எனக்கு என் மண வாழ்க்கையில் சில பிரச்சினைக்ள வந்தப்போ....என்னை திசைதிருப்பி விட்டது பல சித்தர்களின் ஞானிகளின் ஜீவசமாதியே...

தெருவில் பல நூறுபேர் கடந்து செல்லும் பிச்சைக்காரனில்...பைத்தியம் என ஒதுக்கப்படுபவரில் யாரேனும் ஒரு ஞானி இருப்பின் அதை உணர்வது சிலராலேயே முடியும். 

என் பட்டறையில் மூன்று மணி நேரத்தில் மெழுகு மாடல் யோகியுடையது எப்படி செய்தேன் என்று கேட்கறாங்க...அது நானல்ல என்று சொன்னா அனுபவம் இல்லாதவங்களுக்கு புரியாது.

இன்னைக்கு நல்ல முகூர்த்தநாள் சிலை வாங்கிட்டீங்க...திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஆசிரமம் போற முதல் சிலை உங்களுடையதுதான்...

வாங்க கும்பகோணம் பஸ் ஸ்டேண்ட்டில் விடறேன் என்றார்.

கும்பகோணம் வந்தோம்....

ஆசிரமத்தில என்ன சொல்றாங்கன்னு சொல்லுங்க என்றார் ஹரி.

விழுப்புரம் பஸ்ஸில் ஏறினேன்....

ஹரி ஏனோ ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று தோன்றியது இவர் மேலும் பல உச்சம் தொட யோகியை மனம் பிரார்த்தனை செய்தது.

இந்த பதிவை முடிக்கும் நேரம் அவர் கோவை செல்ல வேண்டிய யோகியின் மற்றொரு மெழுகு மாடல் செய்திருப்பார்....

ஏகனே அனேகனாக....அனேகனே ஏகனாக... என்பது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் தாத்பரியம்.

ஒருமுகப்பார்ப்பட்ட அக்கறையே அன்பு... ஒருமுகப்பட்ட நிலையே தியானம்...பரவலான சுமையை விட....குவிக்கப்பட்ட புள்ளியில் சுமை வேறு....அதை பாயிண்ட் லோட் என்பர்.... பசுவின் மடியில் மட்டுமே பாலாகும் ரத்தம்...

யோகியின் சிலை என் தோள் பையில் பேப்பர் சுத்தப்பட்டிருப்பினும்...மனம் அதில் குவிந்து யோகியின் புன்னகையை ரசித்தது...

புண்ணியம் செய்து புகுந்தேனோ ?

என்று மனம் ? கேட்டது விடை அறியாத கேள்விகள் குறைவே....

யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.











Comments

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்