சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்
உ
யோகிராம்சுரத்குமார்
சத்தியம் என்ற சொல்
எழுத்துச்சித்தர் பாலகுமாரன்
( 01.12.2016 )
நல்லவர்களுக்கு ஏன் துன்பம் அதிகம் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இதற்கு பதில் மகாபாரத்தில் உண்டு. பஞ்சபாண்டவர்களில் ஏன் கிருஷ்ணன் அர்ஜூன்னைத் தேர்ந்தெடுத்தான் இதற்கு பதில் துன்பங்களில் மிகப்பெரியத்துன்பம் ஒரு ஆண்மகனை அவன் ஆணல்ல என்று சொல்லுதலே அத்தகைய துன்பத்தை அடைந்தவன் அர்ஜூனன். பிருங்நலை என்ற பெண்ணாக அஞ்ஞாத வாசகாலத்தில் இருந்த ஒரு வருடத்தில் அவன் கிருஷ்ணன் மீது கொண்ட நம்பிக்கையை விடவில்லை அதனாலேயே கிருஷ்ணன் அர்ஜூனன் மீது அன்பு கொண்டு அவனையே போரில் முன் நிறுத்துகிறார்.
கடவுள் என்ற சத்தியத்தை தொட அர்ஜூனன் போல் நம்பிக்கை வேண்டும். யோகிராம்சுரத்குமார் உடன் அய்யன் பாலகுமாரனுக்கு இருந்த அணுக்கம் போல் நமக்கும் கிடைக்காதா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கும் அவ்விதம் குருவை சத்தியத்தைப் பற்றிக்கொள்ள என்ன வழி என்று சொல்ல அய்யா பாலகுமாரனை மேடைக்கு அழைக்கிறேன் உங்கள் கரகோஷம் அவரை வரவேற்கட்டும்.
இதுவரை திருமதி.சம்பத்லட்சுமி பாலாஜி.
இனி அய்யன் பாலகுமாரனின் திருவுரை....
யோகிராம்சுரத்குமாரம்
யோகிராம்சுரத்குமாரம்
யோகிராம்சுரத்குமாரம்
தேவஜாதி மனிதரூபம்
யோகிராம்சுரத்குமாரம்.
திருவண்ணாமலை மகான் , அடியார்க்கு நல்லான் கடவுளின் குழந்தை யோகிராம்சுரத்குமார் பாதங்களில் என் சிரம்பணிந்து, அவைநிறைந்த , பக்தி மிகுந்த, மனம் நெகிழ்ந்த இந்த சபையோரின் பொற்பாதங்களில் என் சிரம் பதித்து என் உரையைத் துவக்குகிறேன்.
இந்த அடாது மழையில் தைரியம் விடாது இந்த பிறந்தநாளில் யோகியின் ஆசியைப்பெற இங்கு வந்திருப்பவர்களை நான் வணங்குகிறேன். இந்த விழா முடிந்தபிறகு ஒரு 100 பேர் மழையா இருக்கு வரவில்லை என்று சொல்வார்கள். இங்கு வந்திருக்கும் 300 பேருக்கு மழையில்லையா ? உள்ளுக்குள்ளே குருவைப்பற்றிய தாபம் வந்துவிட்டால், அவரை அறிய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால் அவர்களின் முன் எந்த உபாதையும் முன் நிற்காது.
அந்த குருவிற்கான ஏக்கம் வேண்டும். காசு, மனைவி, குழந்தைக்கான ஏக்கம் என்பதோடு எவருக்கு குருவிற்கான ஏக்கம் இருக்கிறதோ அவருக்கு குரு கிடைத்தவுடன் நல்ல வளமான வாழ்வு, நல்ல மனைவி, சிறந்த குழந்தைகள் என்ற செல்வமெல்லாம் தானே அமையும் அதற்கு ஒரே உதாரணம் பாலகுமாரன்.
ஒரே ஒரு குரு , சத்தியமான குரு , உண்மையான குரு கிடைத்தால் போதும் சகலமும் கிடைக்கும். குரு கிடைத்தால் போதும் என்றுதானே சொல்ல வேண்டும் அது என்ன பாலகுமாரன் சத்தியமான குரு கிடைக்க வேண்டும் என்கிறார். உணவிலும் , பொருட்களிலும் கலப்படம் உள்ளது போல் குருவிலும் கலப்படம் உண்டு.
நான் பார்த்துக்குறேன் என்பவர் குரு அல்ல. எங்கே நீங்கள் சென்று அமர்ந்தவுடன் உங்கள் மனம் அமைதியாகிறதோ அங்கே உங்கள் எதிரே இருப்பவர் சத்தியமான குரு. அட இதுதானா ? இவர்தானா ? என்று மனம் கூவும் அவரே குரு. கூட்டமாக பண்டரீபுரம் போகலாம் என்பவரல்ல குரு. பண்டரீபுரத்தை உன் உள்ளே கொண்டு வருபவர் குரு.
பண்டரீபுரத்தை உள்ளே கொண்டுவருவதா எப்படி ? யாருக்கு குரு வேண்டும் என்ற தாபம் இருக்கோ....தவிப்பும் நான் யார் என்று தெரியவேண்டும் என்று தவிப்பு இருக்கிறதோ அவரைத்தேடி குரு வருவார். விஞ்ஞானம் அறிவு எல்லாம் வெறும் கணிதம் குப்பை பிரபஞ்சத்தின் முன் தூசு யாருக்கு தன்னை யார் என்று தெரியவேண்டும் என்ற எண்ணம் உண்டோ அவருக்கு குரு கிடைப்பார். அவ்விதம் குரு கிடைக்க நான் என்ற எண்ணம் தடை. பாலகுமாரனுக்கும் நான் என்ற அகங்காரம் இருந்தது.
மகத்தான ரைட்டர் புகழ்பெற்ற ரைட்டர். யோகிராம்சுரத்குமார் என்ற ஞானியை சந்திக்கும் போது 30 நாவலும் 70 சிறுகதைகளும் எழுதி தெருவில் நடந்து சென்றால் சார் நீங்க ரைட்டர் பாலகுமாரன்தானே என்று அடையாளம் கண்டு பலர் கைக்குலுக்கும் காலம் அது. சார் நீங்க ரொம்ப நல்லா எழுதறேள் சார் என்று எவரேனும் கைகுலுக்கினால் கர்வக்கொம்பு முளைக்க துவங்கிவிடும். மெல்ல வளர்ந்து ஆகாயத்தை தொடும் அளவிற்கு அது வளரும்.
என்ன செய்தாய் கதை எழுதினாய். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். இதில் கர்வப்பட ஏதுமில்லை ஆனால் பாலகுமாரனுக்கு கர்வம் வந்தது. திருவண்ணாமலை நோக்கி பஸ்ஸில் பயணம் ஒருவர் சாமி நல்லாருக்கீங்களா ? என்று கேட்க, உலகிலேயே மனிதரை சாகடிக்கும் வார்த்தை சாமீ....நான் ஆசாமீ ஆனாலும் அவர் கேட்ட தொனியில் அவரிடம் பேச மனமில்லாமல்....என்ன நான் ஜெபம் பண்ணிட்டு இருக்கேன் போ என்று அவரை விரட்டினேன்.
திருவண்ணாமலை போய் இறங்கி வெள்ளை வேட்டி, சட்டை , விபூதி குழைத்து இட்ட நெற்றி, சன்னல் வழியே வந்து கண்ணாடியில் பட்டு எதிரொலித்த ஒளியில் என் முகம் பார்க்க அட தேஜஸ் வந்துவிட்டதே என்று தோன்றியது. கர்வப்பட்ட மனம் இவ்விதமே தன்னை உயர்த்தி கற்பிதம் செய்து கொள்ளும்.
கீழே இறங்கி வர பல கல்லூரி மாணவ மாணவிகள் அவர்கள் கையெழுத்து வாறங்க சூழ்ந்து கொள்ள அட இந்தநேரம் யோகிராம்சுரத்குமார் நம்மைப்பார்க்க பாலகுமாரன் எவ்வளவு பெரிய ரைட்டர் என்று தெரிந்து கொண்டால் இன்னமும் மதிப்பு நம்மீது அவருக்கு கூடுமே என்று தோன்றியது. தேஜஸ் வந்துவிட்டது என்ற நினைப்பு முதல் தவறு. நான் எவ்வளவு பெரிய ரைட்டர்னு யோகிக்கு தெரியவேண்டும் என்று நினைத்தது இரண்டாவது தவறு.
சந்நதி தெரு அடைவதற்கு முன் ஒரு நாற்பது பேர் வணக்கம் சொல்லியவாறு நகர அதை மனம் ஏற்றது மூன்றாவது தவறு. வணக்கத்தை ஏற்று கீழே போடக் கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்று தோளில் போட்டுக்கொண்டால் நடக்க இயலாது.
நான் சந்நதி தெரு செல்வதற்கு முன் எனது பர்சேஸ் டிபார்மெண்ட் அறிவு எவருக்கு எதை தந்து எதைப்பெற வேண்டும். We will help you என்று பேசி பலருக்கு லஞ்சம் தந்த புத்தி. மலைப்பழம்,ஆப்பிள், மல்லிக்கைப்பந்து, ரோஜாப்பூ மாலை என்று வாங்கி அழகான ப்ரசண்டேஷன் செய்யும் மனநிலையோடு கர்வத்தோடு நின்றேன்.
மாலைப்போட்டால் குரு மயங்கிவிடுவார் என்ற என் எண்ணம். திண்டு மாலை போட்டால் மயங்கும் குரு உண்டு....பளீரென பல்லிக்கும் குரு வேண்டும் ஆனால் சத்தியத்தைத் தேடி செல்கையில் இத்தகைய கர்வம் தவறு.
உள்ளே ஒரு ஆஷ்ட்ரே கீழே விழுந்து தரை முழுவதும் சிகரெட் துகள்கள். மாதேவகியிடம் இந்த இடத்தை நீ அழுக்காக்கிவிட்டாயே என்று யோகி கடிந்து கொண்டிருக்க....தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என்று நினைத்தேன்.
பாலகுமாரன் வந்திருக்கிறார் என்று மாதேவகி சொல்ல "கதவைத்திறப்போம்" என்றார் யோகி. கதவு திறந்தது.
பால்குமார் ஹவ் ஆர் யூ ? என்று கேட்டவாறே ஆஷ்ட்ரேவில் இருந்து கீழே விழுந்த துகள்களை தள்ளிய கையால் என் வலது தோள்ப்பட்டை தொட அவ்விடம் அழுக்காகியது. ஓ பால்குமார் உன் ச்ட்டையை அழுக்காக்கி விட்டேனா என்று பதட்டத்தோடு துடைக்க வலதுபுறம் முழுக்க கருப்பாகியது.
உள்ளே உதறல் துவங்கியது. நான் ஏதேனும் தவறு செய்திருப்பின் மன்னிக்கவும் என்று உள்ளே மன்றாடியது.
குரு எளிதல் விடுபவரல்ல. புலி வாயில் சிக்கிய மாமிசம் எளிதில் மீளாது. கடைசி துண்டுவரை உண்டுவிட்டுத்தான் முடியும். நல்ல குருவிடம் சிக்கிய சீடனும் மீள்வதேயில்லை.
வெளியில் இருப்பவர்களை உள்ளே வருமாறு யோகி உத்திரவிட ஒரு ஏழு பேர் உள்ளே வந்தனர். அதில் முதலில் வந்தவர் கையில் சாமந்தி மாலையோடு இருந்தார் அது காம்புகள் முழுமையாக கத்தரிக்கப்படாத மாலை. அந்த முதல் மனிதர் நான் ஜெபத்தில் இருக்கிறேன் உன்னிடம் பேச இயலாது என்று எவரை புறக்கணித்தேனோ அவர். இன்னும் பதட்டம் உள்ளே கூடியது.
முதலில் வந்தவரிடம் இடம் யோகி இவரை யார் என்று தெரியுமா என்று கேட்க தெரியும் மிகப்பெரிய ரைட்டர் என்றார். அப்படியா இந்த மாலையை அவருக்கு இந்த மாலையைப் அவருக்குப் போடுவோம் என்றார்.
நண்பர்களே அன்பும் தெளிவும் எவரிடமும் இருக்கும் நான் புறக்கணித்த கிராமத்தான் என் குருவின் சந்நதியில் என் குருவின் முன் இவர் பெரிய ரைட்டர், நல்ல எழுத்தாளர் என்று என்னைப்புகழ்ந்து குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு என் கழுத்தில் மாலையிடுகிறான் நானோ குரு என் புகழை அறிந்தால் நன்றாக. இருக்குமே என்று கல்லூரி மாணவர்களிடையே கையெழுத்து இடுகையில் இவரின் சந்நதிக்கு வெளியே யோசித்தேன்.
இவருக்கு போடுவோம்...இவருக்கு போடுவோம் என அடுத்து வந்து ஆறு பேர்களின் மாலையும் கழுத்தில் விழுந்தது. ஏழு மாலைகள் இருக்கும் முகம் எந்த தேஜஸ் இல்லாமலேயே இருக்கும். ஏழு மாலைகள் கொண்டது ஒன்று சவமாக இருக்கும் அல்லது பூம்பூம்மாடாக இருக்கும் நான் மாடுபோல் அமர்ந்திருந்தேன்.
இன்று சவுக்கடி இருக்கு என்று உள்ளே உணரத்துவங்கியது. We will go என்று யோகி சொல்ல மறுக்க இயலாமல் சந்நதி தெரு வாசலுக்கு யோகியோடு வந்தேன். சந்நதி தெரு கதவு பூட்டப்பட்டது. வெளியே வந்த என்னிடம் ஒரு கையில் விசிறி, சிரட்டை மறுகையில் கோல் கொடுக்கப்பட்டது. இரண்டு கைகளும் உயரே தூக்கச் சொன்னார் யோகி. கழுத்தில் ஏழு மாலை.
எனக்கு ஒரு ஆசை உண்டு அப்போது நான் எப்படி இருந்தேன் எனத்தெரியாது எனவே அதேப்போல் ஏழு மாலை அணிந்து கையில் விசிறி, சிரட்டையோடும், கோல் உடன் ஒரு போட்டோ எடுத்து எனக்கென வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு இதை என் உதவியாளர் திருமதி.பாக்கியலட்சுமியிடம் சொல்வதுண்டு.
சாந்தாவிடம் கேட்டு வாங்கிய பாலியஸ்டர் வேஷ்டி இடுப்பில் எந்த நேரம் அவழும் என்று தெரியாத நிலை....வீதியில் நடக்க என்னிடம் கையெழுத்து வாங்கியவர்களும், எனக்கு முகமன் சொன்னவர்களும் என்னைப்பார்த்து ஈ என்று சிரித்தவாறே சென்றனர். அதற்கு பொருள் இது தேவையா என்றோ....எத்தகைய ஆசீர்வாதம் என்பதாகவோ இருக்கலாம்.
குருவிடம் உள்ளே எதுவும் கேட்க தோன்றவில்லை என் வேஷ்டி அவிழாமல் காப்பாற்று என்றே கூவியது. நகர்வலம் முடிந்து மீண்டும் சந்நதி தெரு வீடு வரும்வரை மேலே உயர்த்திய கை கீழே இறக்கப்படவில்லை.
உள்ளே வந்து அவரிடம் மீண்டும் விசிறியும், சிரட்டையும், கோலும் கொடுத்து கழுத்தில் இருக்கும் மாலையைக் கழட்டிவிட்டு அவர் பாதம் பணிகையில் வேஷ்டி பிரிந்து என்னைப் போர்த்திக்கொண்டது.
ஒரு மனிதனுக்கு அவமானம் நேராமல் காப்பாற்று என்ற பிரார்த்தனை மிக முக்கியமானது அது நிறைவேறியது. யோகி என்னிடம் Its all over balkumar its all over என்றார் என்ன over கர்வம் முடிந்த்து. அழிந்தது.
இன்றுவரை அந்த கர்வம் நான் எழுத்தாளன் என்ற கர்வம் இல்லை. இனி வரவே வராது. என் எழுத்து எனக்கிடப்பட்ட பிச்சை. இது ஒன்றும் பெரிய வித்தையில்லை. கர்வம் இன்றி ஒரு வேலை செய்ய அது அழகானதாக வெளிப்படும். இப்படித்தான் பாலகுமாரனின் கர்வக்கொம்புகள் ஒடித்துப் போடப்பட்டன.
உங்களைச்சீடனாக ஏற்பதற்கு முன் உங்களை தயார் படுத்துவதே ஒரு சத்தியமான குருவின் வேலை.
குரு கர்வத்தை தண்டிப்பதோடு மட்டுமில்லாமல் உதவிகளும் செய்வார். என் முதல் மனைவி கமலாவோடு திருவண்ணாமலை சென்ற போது அன்று அதிக நேரம் கமலாவோடு யோகி பேசியவாறே இருந்தார். கமலாவின் அலுவலகம் அவரது பணி என சகலமும் விசாரித்தார். எப்போது ரிடையர்மெண்ட் என்று விசாரித்தார். எனக்கேனோ அது வித்தியாசமாகப்பட்டது.
வீட்டிற்கு திரும்பிய சில நாட்களில் கமலாவிற்கு காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட அது மெனஜிடிசிஸ் என்ற மூளைக்காய்ச்சல் ( பன்றியைக் கடித்த கொசு கடிப்பதால் வருவது ) என்றும் அதற்கு கபாலம் முதுகுத்தண்டு வயிறு என மூன்று இடங்களில் துளையிட்டு நடக்கும் பிழைக்க 50% வாய்ப்பு பிழைத்தாலும் cut vegetables போல் சுருங்கியே சகலமும் படுக்கையில் என்பதாக இருக்கும் என்று மருத்துவர் சொல்ல.
என் மனைவி சாந்தா யோகியிடம் சென்று சொல்ல....ask balkumar not to worry....kamala will walk...kamala will run என்றார். அன்றே சாந்தாவிடம் என் மகன் சூர்யாவிற்கு உபநயனத்திற்க்கு நாள் குறித்து காசு கட்டிவிட்டுச் செல்லுமாறு உத்தரவிட....சாந்தா அங்கிங்கும் அலைந்து அதை முடித்து திரும்பினார்.
அம்மா இல்லைன்னா கஷ்டம்பா என்று சொல்லும் மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த காலமது.
உபநயனத்துல் செய்யப்படும் நாந்தி என்கின்ற முன்னோர்க்கான சடங்கை யோகியே அருகே இருந்து நடத்தி வைத்தார். மெல்ல தேவகி மருத்தமனையில் கமலா தேறினார். கமலாவிற்கு ஏதேனும் நேர்ந்திருப்பின் நானும் என் இரண்டாவது மனைவியும் சேர்ந்து கமலாவை கொன்று விட்டதாக தீராப்பழி வந்திருக்கும் காப்பாற்றியவர் குரு.
எங்கள் குடும்பத்தில் கமலா நலமானார் அவர் நிற்க நடக்க சாந்தா உதவி செய்ய நான் இவர்களுக்காக பிரார்த்தனைச் செய்ய இன்று நலமாக பலமாக என் குடும்பம் நிற்க காரணம் யோகிராம்சுரத்குமார் என்ற சித்தப்புருஷர்டாக்டர்களை வழிநடத்தும் மாபெரும் பிரபஞ்சக்தி.
தண்டிப்பது மட்டுமா, காப்பாற்றுவது மட்டுமா, சூட்சம்மான விஷயங்களை தந்தவர், காட்டியவர் சத்தியமான குரு.
what you want Balkumar from me என்று ஒருமுறை யோகி கேட்க எனது நண்பர்கள் பலர் கடவுள் இல்லை என்ற தெளிவுடன் இருக்கிறார்கள் எனக்கு கடவுள் நம்பிக்கையோடு இருப்பினும் கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகமும் உண்டு கடவுள் இருப்பைப் பற்றிக் கேட்க....அருகில் இருந்த நண்பர் ஜெயராமன் இடம் மிகப்பெரிய கேள்வி பாலகுமாரன் கேட்டிருக்கிறார் I will try என்று சொன்ன பணிவே சத்தியமான குருவின் அடையாளம்.
மெல்ல என் தலையைத் தடவினார் , கழுத்தைத் தடவினார், முதுகைத் தடவினார், நடுமுதுகு தடவினார், அடி முதுகு தடவினார், மெல்ல உள்ளே பந்து சுழன்றது, வலி முதுகில் வலி, முதுகெலும்பை கட்டிங் ப்ளேயர் வைத்து முறுக்கிய வலி.
இவர் என்னவோ செய்கிறார் இதை ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்புக்கொடுத்து சரணாகதி அடைந்த நேரம்.
அடியில் இருந்து அந்த விஷயம் மேலே ஏறியது. இன்னும் மேலே ஏறியது. நெஞ்சுக்கு கீழே பளிச் என்று வெளிச்சம். கறுப்பு வெள்ளைப் புகை. ஹூம் என்று பெரும் சத்தம் காதுகளில். அது அனாகதம் என பின்னர் தெரிந்து கொண்டேன்.
எவன் கடவுள் என்று ஒன்று இல்லை என்று சொல்கிறானோ அவன்நிர்மூடன் கடவுள் என்ற மாபெரும் பிரபஞ்ச சக்தி ஒன்று உண்டு. அது எங்கே உண்டு. அது உங்கள் உடம்புக்குள் உள்ளது. வெளியேயும் உள்ளது. அதை அறியாமல் நாம் வேறுவேறு டைட்டில் வைத்துக் கொள்கிறோம்.அந்த சக்தியை நம்மால் உணர இயலாது. அதற்கு சக்தி வாய்ந்த குரு அவசியம்.
காட்டினால் யாரொருவர் காணாதாரே. அதற்கு குரு இடம் சரணாகதி அடைய வேண்டும். கடவுள் என்பது சங்கு சக்ரதாரி அல்ல. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஆனந்தப்பூர்த்தியாக இருக்கும் மணற் துகள். உங்களுக்கும் எனக்கும் இடையில் என்னுள் உன்னுள் அதே மணற்துகள் அதன் நடனம் அதன் அசைவு.
அதுவே பிரபஞ்ச நடனம்...தா...தித்தை ....தை..தை...என்ற நடனம் ...அதுவே நடராஜர். அந்த நிலையில் இருந்து பார்க்க எதிரே இருப்பவரின் ஆரம்பம் அதன் மொத்த ஜென்மங்கள் தெரியும். தரையில் இருந்து பார்ப்பது வேறு. மூன்றாவது மாடியில் இருந்து பார்ப்பது வேறு.
உயர்ந்த நிலையில் இருந்து பார்க்கையில் என்னென்னவோ தெரியும். வலி இருக்கு வா இங்கையா ஓ ரத்தக்கட்டு இருக்கா வலியோடு மனது வைத்து தடவ வலி காணாமல் போகும். இதை என் சத் சங்கத்தினர் பலர் உணர்ந்திருக்கின்றனர்.
உங்களால் எதும் பண்ணி புடுங்க இயலாது. என்னால் முடியும் என்ற எண்ணமும் நாத்திகம் இரண்டும் ஒன்றே. உன்னை ஒரு பிரபஞ்ச சக்தி ஆட்டி வைக்கிறது. நீ ஆடுகிறாய் .....ஆட்டி வைத்தால் யாரொருவன் ஆடாதாறே...என்பது சத்தியம். இதில் நெல் முனை அளவும் சந்தேகமில்லை.
இது எப்போதோ எழுதிவைக்கப்பட்டது...எப்போதோ முடிந்த காரியம்....இதை புரிந்து கொண்டால் எதன் மீதும் எவர் மீதும் ஒரு பொல்லாப்புமில்லை இது ஒரு மகாவாக்கியம் வந்தோம்....வாழ்ந்தோம்....போய்க்கொண்டே இருப்போம்.
இந்த மனநிலையை ஒரு சத்தியமான குரு தருவார் உன் குண்டலினியைத் தூண்டி....உன் அனாகதம் திறந்து உங்களுக்கு காட்டுவார்.
உங்களுடைய இரண்டாவது இடத்தை தியானிக்கும் குண்டலினி மெல்ல நகரும்.
ஒரு முறை யோகியுடன் வாசலில் அமர்ந்திருக்க இரவு ஒன்பது மணி டுடே இஸ் ஃபுல் மூன்... என்று நான் சொல்ல எஸ் ஃபுல் மூன் என்று யோகியும் ஆமோதிக்க எனக்கு உள்ளுணர்வு நெருடியது. வலது புறம் நிலவு பார்த்து இடது புறம் திரும்ப அங்கேயும் மற்றொரு நிலவு. யோகியை திகைத்து பார்க்க Balkumar there are seven என்றார். ஏழு இருக்கிறது நீ இரண்டுத்தான் பார்த்திருக்கிறாய் என்பதை உணர்த்திய என் சற்குரு யோகிராம்சுரத்குமார் எப்பேர்ப்பட்ட இடத்தில் இருந்திருக்கிறார்.
அவருக்கு அடிமையாகாமல் வேறு அடிமையாவேன். பிறப்பால் அந்தணன். எனக்கு ஜாதியில்லை. மதமில்லை. கட்சியில்லை. தலைவர்கள் இல்லை. யோகிராம்சுரத்குமார் மட்டுமே உண்டு.
பலமுறை என்னை உச்ச நிலைக்கு கொண்டு சென்றவர் என் குரு. என் மனைவி சாந்தா வின் தந்தையை பார்த்து its a soul என்றார் யோகி அதற்கு 18 ஆம் நாள் அவரது தந்தை காலமானார்.
ஒரு வாரம் பகவானுடன் தங்கியிருக்கையில் we will sleep என்றார் ஒருக்களித்து ஒரு திண்டில் கால் போட்டு சுகமாக தூங்கி பழக்கம் எனக்கு அன்று அவருடன் தரையில் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அவரின் மீது என் கால்களை போட்டு படுத்திருக்கிறேன். மறுநாள் ஜெயராமன் மகாபாவி அவர்மீது கால் போட்டு படுத்திருந்தே என்று சொன்னார். எழுப்பியிருக்கலாமே என்று ஜெயராமனிடம் வினவ....don't disturb என்று சொல்லியிருக்கிறார் யோகி.
மறுநாள் காலையில் காலை உணவு முடித்து யோகியிடம் நேற்று இரவு தூக்கத்தில் தெரியாமல் கால் போட்டிருக்கிறேன் மன்னிக்குமாறு கேட்க nothing wrong என்று சொல்லியிருக்கிறார் யோகி. you had your breakfast என்று கேட்டு ஏற்கனவே மிக பலமான முறையில் சாப்பிட்ட பாலகுமாரன் இடம் மேலும் சில தடிமனான சப்பாத்தி தந்து lets eat என்று சப்பாத்தி தயிர்சாதம் தொட்டுக்கொள்ள வத்தக்குழம்பு என சகலமும் தர பேண்ட் பட்டன் தெறிக்கும் நிலை வந்தது.
மறுநாள் காலை உணவு உண்ணாமல் வெறும் காபி மட்டும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப வெங்கடராமையர் ஏன் டிபன் சாப்பிடல என்று கேட்க யோகி நிறைய உணவு தருவதாக சொல்ல....அத நம்பியா போறே போ....என்றார்.
Have you taken your breakfast Balkumar ....no bhaghavan என்று சொல்லும் போதே போட்டா சாப்பிடலாம் என்ற என் ஆவல் இருந்தது . Balkumar lets skip it என்றார் யோகி. மாலை 5 மணி வரை எதுவும் உண்ணத்தரவில்லை. கடும் பசி கொல்ல பலரும் யோகியிடம் எதுவும் கேட்க தயங்கிக் கொண்டிருக்க யோகி ஒரு சிறிய டைமண்ட் கல்கண்டு ஒன்று தந்தார். அதை வாயில் இட்ட சில நிமிடங்களில் பசியின்றி போனது.
நண்பர்களே அன்று விட்ட பசி ஆர்வம் இன்றும் எதையும் விரும்பி உண்பதில்லை. கிடைப்பதை உண்கிறேன். அதில் உணக்கை இல்லை. ஒரு கடலை பருப்பு வறுபடலை என்று குறை கூறல் இல்லை.
இன்றும் அவர் உச்சியில் ஏற்றிய சிலிர்ப்பு என் சிரசை தொட கை எனது இதயம் தொட இன்னொரு கை உயர்ந்து கடவுளைத் தொடும் இதயம் தாமரை....இறை இங்கே ....உச்சத்தில் தொடும் தொலைவில் இதை பின்னர் ஶ்ரீராமகிருஷ்ணர் பரமஹம்சர் படங்களைப் பார்த்து பின்னர் தெரிந்துக் கொண்டேன். உடலில் இருந்து உயிர் கிளம்பி வெளியே நிற்கும். மரணத்தை பல முறை பார்த்தவனுக்கு மரணம் பயமில்லை.
எல்லோரும் சாகபயந்துதான் சாகிறார்கள் மரணத்தை உணர்ந்தவனுக்கு மரணத்தைக்கண்டு பயமில்லை அவனால் மரணத்தை தள்ளி வைக்கவும் முடியும்.
இந்து மத தர்மம் சொல்கின்ற சகலமும் உண்மை. சத்தியம். இத்தகைய விஷயம் எல்லா மதங்களிலும் உண்டு.
நண்பர்களே....
சத்தியம் என்ற ஒரு சொல்...
சத்தியம் என்ற சொல்லுக்கு குரு என்று பெயர்...
சத்தியம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பெயர்..
சத்தியம் என்ற சொல்லுக்கு உயிர் என்று பெயர்...
வெறும் தலைப்பாகை கட்டியவர் யோகிராம்சுரத்குமார் அல்ல...அவர் சத்தியம்....சத்தியம் உன்னுள் என்னுள் உண்டு....நம்மிடையே உண்டு...
நீ வணங்கும் போது நமஸ்காரம் பண்ணும் போது உன்னைப் பற்றி புரியும்.....
எதிரே இருப்பவர் மனதும் நமது தெளிவும் ஒன்றாக இருக்கும் போது நமது வாழ்க்கை அழகாக இருக்கும்...அதை எழுத்தாகும் போது சத்தியமாகும்....ஊசிக்காதில் குரு நினைக்க ஒட்டகங்கள் போகும்..
நண்பர்களே...
தயவு செய்து நாமஜெபம் செய்யுங்கள்...தியானம் செய்யுங்கள் என்றால் மனம் ஆளாய் பறக்கும்....மந்திரஜெபம் மயிலை யோகிராம்சுரத்குமார் நிறைய சொல்லும்....தயவு செய்து டிவி சீரியல் பார்க்க வேண்டாம்....நிறைய நாம ஜெபங்கள் சொல்லுங்கள்....மூல மந்திரம் சொல்லி மனதை அமைதி படுத்துங்கள்.
எவன் ஒருவன் தன்னைஅறிகிறானோ அவனே ஞானவான் ...அவனே அறிவாளி...அவனே சகலத்தையும் அறிந்தவன்.
நாமஜெபம் செய்ய உங்களுக்கு தெளிவு வரும்....இதை நான் உங்களுக்கு சொல்வதையும்....இதை நீங்கள் எந்த அளவில் உள்வாங்குகிறீர்கள் என்பதையும் இங்கிருந்து ஒவ்வொருவரையும் யோகிராம்சுரத்குமார் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
உங்களின் உடல் கோளாறுகள் நீங்க நல்ல டாக்டர் கிடைக்க நீங்கள் தபஸ் செய்திருக்க வேண்டும். உங்களிடம் சரியான டாக்டர் சேர்ப்பதும் குருவே.
குரு என்பவர் ஸ்தூலமல்ல. சூட்சுமம் . இடையறாது இருப்பவர். எவருக்கு பணிவு இருக்கிறதோ அவருக்கு கற்றுக்கொள்ள முடியும். பணிவு இருப்பவரிடம் குரு வருவார்.
வெடகத்தை விட்டு குருவிடம் கேளுங்கள்....என்னிடம் வராதீர்கள்....மனதோடு பேசுங்கள்...
இது நெஞ்சோடு புலத்தல்...உங்கள் தேவைகளை குருவிடம் கேளுங்கள்....கிடைக்கும்....வாழ்த்தி விடைபெறுகிறேன்.
யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
உரை- அய்யன் பாலகுமாரன்
எழுத்து - சரஸ்வதிசுவாமிநாதன்
படங்கள் - ராமச்சந்திரன்
Comments
Post a Comment