விசிறி சாமியாருடன் ஸ்ரீ எம்.
விசிறி சாமியாருடன் ஸ்ரீ எம்
திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்த்துமே, ஃபங்க்கா பாபா என்றும், விசிறி சாமியார் என்றும் அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தேடினேன்.
காஞ்சியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் இந்த விசிறி சாமியார் குழந்தை போலப் பழகுவதாகவும், அடிக்கடி பைத்தியக்காரர் போல நடந்து கொள்வதாகவும் கூறி இருந்தார்.
அவர் ஒரு காலத்தில் வட இந்தியாவில் எங்கோ ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார் என்றும், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை நன்றாக அறிந்தவர் என்றும் கூறியிருந்தார்.
அவரைக் கோவிலின் தேர் இருந்த இடத்துக்கு அருகில் சிறியதொரு குடிசையில் கண்டு பிடித்தேன். சிலர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர்.
அவர் அழகாகவும், பருத்தும், நீளமான சாம்பல் நிற முடியும், சாம்பல் நிற தாடியும் கொண்டிருந்தார். வேஷ்டி கட்டிக் கொண்டு, பல மாதங்களாகத் தோய்க்கப்படாத வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட ஒரு கோட்டையும் அணிந்து இருந்தார். என்னை அவர் உள்ளிருந்து கூர்ந்து பார்த்து கையை ஆட்டினார். " வா, வா....! இங்கே உட்கார்....! " என்று அன்பான தெளிவான குரலில் கூறினார்.
குடிசைக்குள் சென்று அமர்ந்தேன். " இன்னும் அருகில்....அருகில்..." என்று சொன்னார். நானும் அவருக்கு மிக அருகில் உட்கார்ந்தேன். " ம்ம்ம் ! என்ன பெயர்...? " என்று கேட்டார்.
" மது , பாபா ! " என்றேன்.
" மது....மது.." என்று சொல்லிப் பார்த்துக் கொண்டார். அந்தப் பெயரை உச்சரிப்பதில் அவர் மகிழ்ச்சி அடைந்தது போலத் தோன்றியது.
" மது, நீ நமாஸ் செய்கிறாயா ? "
" எனக்கு அது தெரியும். ஆனால் செய்வதில்லை. நான் தியானம் செய்கிறேன்."
" தியானம் , நமாஸ் எல்லாம் ஒன்றுதான் ! " என்று கூறினார். " தியானம் , மது , எம்....எம்....எம்....! யம் என்பதுதான் நீ ! நீதான் எம் ! ஹா ஹா ஹா...." என்று சிரித்தார். அது அவரது அடி வயிற்றிலிருந்து மேலெழும்பி பெருத்த குரலுடன் ஒலித்தது. " எம், எம் ஹா, ஹா ! "
உடல் குலுங்கச் சிரித்துக் கொண்டிருக்கும் போதே , அவரது வலது கையால் எனது தோளில் கடுமையாக அடித்தார். நான் வைத்திருந்த துணிப்பை பறந்து அவரது பாதங்களில் விழுந்தது. பையிலிருந்து சில பட்டாணிகள் வெளியே வந்து விழுந்தன.
" இந்தப் பிச்சைக்காரனும் பட்டாணிகளை விரும்புகிறான்...." என்று கூறி சில பட்டாணிகளை ஆர்வத்துடன் சாப்பிட்டார். " நல்லது , நல்லது....இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் ? "
" ரமணாசிரமத்திற்கு " என்றேன்.
பெருத்த குரலில் மீண்டும் சிரித்தார். " ரமணர் அங்கு இருக்கிறாரா ? சமாதிதான் இருக்கிறது. ரமணரை ஒரு இடத்தில் வைத்து இருக்க முடியாது. இங்கே, அங்கே, எல்லா இடங்களிலும்....சரி...சரி...போ...மகிழ்ச்சியோடு இரு..." என்று கூறி விட்டு எனது தோளில் இன்னுமொரு அடி கொடுத்தார்.
போவதற்காக எழுந்தேன். அங்கிருந்த யாரோ ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். " ஸ்வாமி , எனக்கு எதுவும் வேண்டாம். மன அமைதி இருந்தால் போதும்...."
" மன அமைதி...." விசிறி சாமி கத்தினார். அவரது முழு உடலும் சிரிப்பால் குலுங்கியது. " இவருக்கு மன அமைதி வேண்டுமாம், இந்தப் பிச்சைக்காரனின் மனம் சுக்குநூறாக ஆகி விட்டது. ஹா, ஹா...ஹா"
பையை எடுத்துக் கொண்டு, அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வெளியே நடந்தேன்.
" எம், எம் ! மனது சுக்குநூறாக ஆகி விட்டது. மனது ஒன்றும் நன்றாக இல்லை. ரமணரிடம் சொல்லு." என்று எனக்குப் பின்னால் கத்தினார் விசிறி சாமியார்.
- ஸ்ரீ எம் அவர்களின் ' இமய குருவின் இதய சீடன் ' என்ற நூலிலிருந்து......
குறிப்பு :
தயை கூர்ந்து தங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் இடவும்.
Comments
Post a Comment