இறையுணர்தலின் வனங்களில் - 2 - சுயத்தின் விரிவாக்கம்

 

யோகி ராம்சுரத்குமார்


சுவாமி ராமதீர்த்தரின் 7 தொகுதி ஆங்கில கட்டுரைகளின்  நூலின்  தமிழ்மொழிப்பெயர்ப்பு 

By 

சரஸ்வதி சுவாமிநாதன் 


சுயத்தின் விரிவாக்கம்


அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவின் அகாடமி ஆஃப் சயின்ஸ் – ல் டிசம்பர் 16, 1902 ல் ஆற்றப்பட்ட விரிவுரை.


எனது சுயத்தின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே, 


இன்றிரவு நாம் சுயத்தின் விரிவாக்கம் குறித்து சிறிது கேட்க இருக்கிறோம். நீங்கள் வாழ்க்கையின் அளவுகள் , ஆன்மீக முன்னேற்றத்தின் நிலைகள்  அல்லது இந்த தலைப்பை சுயநலத்தின் தூய்மையாக்கும் அளவுகள் என்றும் நீங்கள் அழைக்கலாம். ஒருவேளை இதன்மூலம் கிடைக்கும் முடிவுகள் உங்களை திடுக்கிடவும் வைக்கலாம். 


வட்டங்கள் 



உங்கள் முன் இருக்கும் படத்தில் ஒரு நேர்கோடும், சில வட்டங்களும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.  “ இதன் பயன்கள் என்ன ? இந்த வட்டங்கள் சுயத்தின் விரிவாக்கத்திற்கு என்ன செய்யும் ?” என்றும் நீங்கள் வினவக்கூடும். சிலர் தங்கள் இதயங்களில் இவைகள் வட்டங்களே அல்ல என்றும் கூறக்கூடும். அவைகளை வளைந்த நீள்வட்டங்கள் என்றும் கூறலாம். ஆனால் இந்த வட்டங்கள் வாழ்க்கையின் வகைகளைக் குறிப்பிடுகின்றன. அவைகள் மிகச்சரியான வட்டங்கள் அல்ல, அவைகள் வளைந்த நீள்வட்டங்களே , இவைகள் குறைபாடான வட்டங்களே. இவைகள் தங்களின் மாறுபாட்டையும், குறைப்பாட்டையும் குறிப்பிடுகின்றன. 


வாழ்க்கை குறித்தும், வாழ்க்கையின் அளவுகளையும் துவக்குவதற்குமுன் , நாம் இந்த வட்டங்கள் குறித்து மேலும் சில வார்த்தைகளை கூறவேண்டியதுள்ளது. 


இங்கே ஒரு சிறிய வட்டம் , ஒரு சிறிய புள்ளியாக உள்ளது. இதனைக் கட்டாயமாக இதைவிட சிறியதாக உருவாக்கியிருக்கலாம். ஆனால் மிகச் சிறியதாக இருப்பின் அதனை காண இயலாது. எனவே அதனை பார்க்குமளவிற்கு பெரியதாக வரையப்பட்டுள்ளது. இங்கே மிகச்சிறிய வட்டத்தைவிட இன்னொரு இரண்டாவது வட்டம் ஒன்று உள்ளது. அதற்கு வெளியே மூன்றாவது மற்றும் நான்காவது வட்டங்களும் உள்ளன. இந்த வட்டங்களின் முக்கிய அம்சம் என்னவெனில் இவைகள் பெரிதாகவும் , விரிவடைந்தும் காணப்படுகின்றன. இவையனைத்தும் A என்ற துவக்கப்புள்ளியில் இருந்தே துவங்குகின்றன. அனைத்து வட்டங்களுக்கும் பொதுவான தொடுகோடே உள்ளது. வட்டத்தின் ஆரமானது அதிகமாகையில் வட.டமானது பெரிதாகிறது. வட்டத்தின் மையமானது A என்ற துவக்கப்புள்ளிக்கு அருகே வருகையில் அந்த வட்டமானது புள்ளியாக ஆகிறது. அதேபோல் வட்டத்தின் மையமானது துவக்கப்புள்ளியைவிட்டு நகருகையில் அதன் ஆரமானது பெருகி அது முடிவிலியை நோக்கி நகர்ந்து அதுவும் ஒரு நேர்கோடாகிறது. எனவே நேர்கோடானது ஒரு வட்டத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. அதாவது மையமானது முடிவிலி வரை நகர்கிறது அல்லது அதன் ஆரமானது முடிவிலியாகிறது எனலாம்.


இன்னொரு சிறப்பம்சமாக நாம் கவனித்தது யாதெனில் வட்டமானது பெரிதாக இருக்கையில் அது தொடுகோட்டிற்கு அருகாமையில் உள்ளது. வட்டமானது பெரிதாகையில் அதன் வளைவானது குறைகிறது. அதனாலேயே D யின் வட்டத்தை நாம் A ல் வரைந்துள்ளோம், இது ஏறக்குறைய ஒரு நேர்கோடாகவே பிற வட்டமான C யை விட அமைகிறது. இதனாலேயே இந்த பூமியானது உண்மையில் கோளமாக இருந்தபோதும் , அதனை எங்கிருந்து பார்த்தபோதும் அது தட்டையாகவே காட்சியளிக்கிறது. இந்த பூமியின் எந்தவொரு பகுதியும் சாதாரணமாக நமது கண்களுக்கு முடிவில்லாத அளவில் பெரியதேயாகும். இது இந்த வட்டங்களுக்கும் பொருந்தும். 


வாழ்க்கை 


வாழ்க்கை ! வாழ்க்கையின் சிறப்பான குணாம்சம் என்ன ? வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் தேவைக்கும் இடையே என்ன வேறுபாடு ? அது ஒரு இயக்கம், ஆற்றல் அல்லது செயல். இதுவே இந்த கேள்வியை அணுக புகழ்பெற்ற வழி. வாழ்க்கை குறித்து அறிவியல் தந்த வரையறைகளை இங்கே நாம் இந்த வரையறைக்குள் தொகுக்கலாம். ஓர் உயிருள்ள மனிதன் நகரலாம், நடக்கலாம், அனைத்து விதமான செயல்களையும் மேற்கொள்ளலாம். ஒரு மரித்த உடல் எந்த விதமான செயலையோ , ஆற்றலையோ உயிருள்ள மனிதனைப்போல் வெளிப்படுத்த இயலாது. ஓர் இறந்த விலங்கு நகரவோ, ஓடவோ இயலாது. பட்டுப்போன தாவரம் வளராது, அதில் இயக்கம் இல்லை, செயல்கள் முற்றிலும் இல்லை. ஓர் உயிருள்ள தாவரம் வளரும், இயக்கத்தை வெளிப்படுத்தும். 


வாழ்க்கையின் நிலைகள் 


நாம் மீண்டும் வாழ்க்கையின் நான்கு அளவுகள் குறித்து பார்ப்போம் அல்லது இந்த அடிப்படை ராஜ்ஜியம் நான்கு கொள்கைகளால் பிரிக்கப்பட்டுள்ளது. தாதுக்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதன் இவ்வுலகில் மனிதன் மட்டுமே மிகுந்த இயக்கம், மிகுந்த ஆற்றல் போன்றவற்றை விலங்குகளைவிட கூடுதலாக வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். விலங்குகள் நடக்கும், ஓடும், மலைகளின் மீது ஏறும் ஆனால் மனிதன் இவைகள் அனைத்தையும் மிகச்சிறப்பாகவே செய்வான். இவைகளை தாண்டி பிற செயல்களையும் மேற்கொள்வான். மனிதனோ இயக்கம் மற்றும் ஆற்றலை அதிகமாக உயர் அளவுகளில் காட்டுவான். தொலைநோக்கியின் மூலம் மனிதன் நட்சத்திரங்களை அடைவான். விலங்குகள் இவைகளை செய்ய இயலாது. மனிதன் விலங்குகளை அடக்குவான். மனிதன் காலம் மற்றும் தூரத்தை நீராவி மற்றும் மின்சாரம் கொண்டு நிர்மூலமாக்குவான். அவன் விலங்கினை விட துரிதமாக ஒன்றை அடைவான். உலகத்தின் எந்த மூலைக்கும் செய்திகளை உடனுக்குடன் அவன் அனுப்புவான். அவன் காற்றில் பயணம் செய்வான். இதுவே மனிதனின் இயக்கம், மனிதனின் ஆற்றல், இவைகள் அனைத்தும் மனித ஆற்றல்களின் வெளிப்பாடு. விலங்குகள் மனிதனின் இந்த ஆற்றல்களுக்கு முன் சற்று கீழானவையே. விலங்குகள் மனித வாழ்க்கையின் அளவுகோல்களைவிட குறைந்தவையே. 


தாவரங்களின் ராஜ்ஜியத்தை நாம் விலங்குகளின் ராஜ்ஜியத்தோடு ஒப்பிடுவோம். அவைகள் நகரும், ஆனால் அவைகளின் இயக்கம் ஒரு பரிமாணத்தையே கொண்டது. அவைகள் மேல்நோக்கி மட்டிலுமே வளரும், அவைகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகராது. அவைகளின் இடம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். அவைகள் தனது கிளைகளை அனைத்து திசைகளிலும் பரப்பி, தனது வேர்களை மிக ஆழமாக செலுத்தும். ஆயினும் இவைகளின் ஆற்றலின் வெளிப்பாடு விலங்குகளின் ராஜ்ஜியத்தைவிட தாழ்ந்த ஒன்றேயாகும். தாவரங்களின் வாழ்க்கையின் அளவுகோல் விலங்குகளைவிட குறைந்தவையே. தாதுக்களுக்கு வாழ்க்கை என்பது இல்லை என்பது உயிரியல் அறிஞர்களின் கருத்தாகும். ஆனால் நாம் வாழ்க்கையின் நிலைகளை ஆராயும்போது , நாம் தாதுக்களும் ஒரு வகையான இயக்கத்தை வெளிப்படுத்தும் என்றும், மாற்றங்களுக்கு அவைகளும் உள்ளாகும் என்று அறிகிறோம். தாதுக்களுக்கும் மாற்றம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். 


தாதுக்களும் வாழ்க்கையின் மிகச்சிறிய அடையாளங்களை வெளிப்படுத்துகின்றன ஆயினும் அவைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல. வாழ்க்கையின் அளவுகோலில் கீழே இருக்கும் இதன் இயக்கம், செயல்கள் மற்றும் ஆற்றல் போன்றவை முக்கியத்துவமற்ற அளவில் சிறியவையாகும். இவைகளின் மூலம் நாம் அறிவது இயக்க நிலைகள் அல்லது ஆற்றல்களின் மூலமே வாழ்க்கையின் நிலைகள் நிர்ணயிக்கப்படுகின்றது. 


 இயற்கை தன்னை மீண்டும் திரும்ப உருவாக்கிக் கொள்கிறது


சூரியனுக்கு கீழுள்ள எதுவும் புதியதல்ல. பல்வேறுவிதமாக அதன் வகைகளை அவைகளின் வெளிப்புறத் தன்மைக்கேற்ப நாம் குறிப்பிடுகிறோம். இயற்கையோ அல்லது இந்தப்பிரபஞ்சமோ மிகுந்த பரிதாபத்திற்குரியது. காதலியின் கண்களில் வழியும் கண்ணீரையும், நட்சத்திரங்களின் சுழற்சி மற்றும் சூரியனையும் ஒரே விதியே ஆட்சிபுரிகிறது. சிறிய அணுவோ, தொலைதூர நட்சத்திரமோ ஒரே எளிய விதியே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இயற்கை தன்னை மீண்டும் திரும்ப உருவாக்கிக் கொள்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை நாம் ஒரு திருகு ( Screw ) அல்லது சுழல் உடன் ஒப்பிடுவோம். அதில் உள்ள ஒவ்வொரு திருகும் ஒரே மாதிரியானதே அல்லது இதனை ஒரு வெங்காயத்தோடு ஒப்பிடலாம். நாம் ஒரு உறையை நீக்கினால் அதே போன்ற இன்னொரு உறையானது இருக்கும். அதனையும் நீக்க இன்னொன்று அதேவிதமாக இருக்கும், உரிக்க உரிக்க அதேவிதமான உறைகள் வெங்காயத்தில் இருப்பதை பார்ப்பீர்கள். இதேவிதமாகவே இந்த முழுவருடத்தில் என்ன நமக்கு உண்டோ அதன் சிறிய வடிவமான அளவாகவே ஒவ்வொரு இருபத்து நான்கு மணிநேரமும் இருக்கிறது. காலை நேரம் என்பதை வசந்த காலம் எனலாம், மதிய நேரத்தை கோடைக்காலம் எனலாம், பகல் மற்றும் மாலையை இலையுதிர்காலம் என்றும், இரவினை குளிர்காலத்தோடும் ஒப்பிடலாம். இங்கே வருடத்தின் அனைத்து பருவங்களும் இருபத்து நான்கு மணிநேரத்தில் சுருங்கிய வடிவில் வெளிப்படுகிறது. மனிதனின் கருவானது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்குகிறது. மீன், நாய், குரங்கு மற்றும் பிறவற்றின் வடிவங்கள் போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி இறுதியாக மனித வடிவை அடைந்தன. பரிணாம வளர்ச்சி என்பது இவ்வுலகம் முழுவதிலும் ஒரு பொது விதியாகவே உள்ளது. எனவே நாம் மனித உடலின் வடிவத்தை தாதுக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் ராஜ்ஜியத்தின் மறு உருவாக்கமாகவே காணவேண்டியுள்ளது. 


தாதுக்களை போன்ற மனித வடிவமோ, தாவரங்களைப் போன்ற மனித வடிவமோ,  விலங்குகளைப் போன்ற மனித வடிவமோ இல்லாத போதும் மனித வடிவிற்குள் இவையனைத்தும் உண்டு. மனித வடிவில் கடவுள் உண்டா என்றும் இனி பார்ப்போம். 


தாது மனிதன் 


முதலில் நாம் ஒழுக்கம் மற்றும் ஆன்மீக தாதுக்களை எடுத்துக்கொள்வோம். தாது ராஜ்ஜியம் எந்தவொரு இயக்கத்தையும் வெளிப்படுத்துவதில்லை. அது ஆற்றலையும் வெளிப்படுத்துவதில்லை. ஆயினும் அதற்கு சில ஆற்றலும், செயலும், இயக்கமும் உண்டு, ஏனெனில் தாதுக்கள் மாற்றத்திற்கு ஆட்படுகின்றன. தாதுக்களிலும் ஒருங்கிணைவு மற்றும் முன்னேற்றம் போன்றவைகளும் ஏற்படுகின்றன. அவைகள் படிகமாக வளருகின்றன. கடலோடு ஒப்பிடுகையில் இந்த பூமியானது நிலையாகவும், உறுதியாகவும் உள்ளது. ஆயினும் அது உயர்வதும், தாழ்வதும் பல மாற்றங்களுக்கு ஆட்படுவதும் நிகழ்கின்றது. எனவே தாதுக்களிலும் சில இயக்கங்கள் நாம் அறியா வண்ணம் நிகழ்ந்தவாறே உள்ளது. 


இப்போது மனிதர்களில் தாதுக்களைப் போன்ற இயக்கம் கொண்டவர்கள் யார் என்று பார்ப்போம். குழந்தையின் தொட்டிலின் மேலே கட்டப்பட்டிருக்கும் சுழலும்  பம்பரத்தின் இயக்கத்தை கவனிப்போம். அது சுற்றி சுழல்கையில் குழந்தையானது ஆர்வத்தோடு கைகளைத்தட்டி ஆராவாரம் செய்வதோடு, அந்தக் குழந்தை மகிழ்வோடு, “ இது நிலையாக உள்ளது ! இது நகரவேயில்லை ! இது நகரவேயில்லை ! “ என்கிறது. இது சுயம் சார்ந்த இயக்கம். பம்பரத்தின் இயக்கமானது சுழலும் போதும் , சுழற்சியின் மையமானது உடலின் உள்ளிருக்கையில் , இயக்கமானது மிகுந்த வேகமாக இருக்கையில் இயக்கம் அற்ற நிலையாக அது தோன்றும். நாம் தாதுக்களின் இயக்கத்தை இந்த பம்பரத்தின் இயக்கத்தோடு ஒப்பிடலாம். அல்லது அதனை ஒரு கரும்பலகையில் சிறிய வட்டமாகவும், சிறிய புள்ளியாக இருக்கும் வட்டமாகவும் குறிப்பிடலாம். 


இந்த உலகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் வட்டத்தில் இருப்பவையே எந்த இயக்கமும் நேர்க்கோட்டில் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா. இந்தக் காரணத்திற்காகவே நாம் இயக்கத்தை வெளிப்படுத்த வட்டங்களை பயன்படுத்துகிறோம். கணிதத்தில் இயக்கம் என்பதை நேர்க்கோட்டில் குறிப்பிடுவார்கள். இதனைப் பொறுத்தவரை வட்டமே நமது தேவைக்கு உகந்ததாக இருக்கும். 


நீங்கள் மிகச்சிறிய வட்டமான புள்ளியை நினைவில் கொள்ளுங்கள் அதன் இயக்கப்பாதை ஒரு சிறிய புள்ளியாகும். இதுவே தாதுக்களின் வாழ்க்கை வார்த்தைகளின் மூலம் இதனை குறிப்பிடுகையில் சுயநலம் ஆனது எனலாம். பல்வேறு தளங்களில் பணிபுரியும் நபர்கள் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வறுமையை, பசியைப்பற்றி கவலைக் கொள்ளாமல் தங்களின் சந்தோஷத்தை மட்டிலும் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் அருகாமையில் வசிப்பவர்கள் இருக்கிறார்களா ? இல்லையா ? என்று கவலைகள் கொள்வதில்லை. இவர்கள் என்ன விலை தந்தாவது மது குடிப்பது, இன்பத்தை தேடுவது என்று இருக்கும் இவர்கள் தங்களின் தேவைகள் பூர்த்தி செய்ய அவர்கள் தங்கள் குடும்பத்தையே தியாகம் செய்வார்கள். இவர்களின் வட்டமானது அவர்களது சிறிய உடலையே மையமாக கொண்டது. இவர்களின் இயக்கம் அல்லது செயல் என்பது மரணித்த ஒன்றாகும். இதுவே தாது மனிதனின் வாழ்க்கையாகும். இந்த உலக வரலாற்றில் பல அழகிய மற்றும் முக்கிய தாதுக்கள் மனிதர்களை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன. உங்களுக்கு தெரியுமா , வைரம், முத்துக்கள் , பவழம் போன்ற பலவிதமான நகைக்கு பயன்படும் கற்களும் இந்த தாதுக்களின் ராஜ்ஜியத்தை சேர்ந்தவையே. 


ரோம் வரலாற்றில்  நீரோ , டைபீரியஸ் மற்றும் பிற சீசர்கள் போன்ற பல வலிமையான ஆட்சியாளர்களும், அரசர்களும் பல அரிய தாதுக்களை தங்களிடம் வைத்திருந்தனர், அரிய மனிதர்களை அல்ல. இந்த அரசர்கள் மொத்த உலகத்தையும் அறிந்திருந்தாலும் இவர்கள் தங்கள் அரசிகளுக்கோ, நண்பர்களுக்கோ என்ன நடந்தது, என்ன தேவை என்பதைப்பற்றி அறியாதவர்களாக இருந்தார்கள். நீங்கள் இவர்கள் இழைத்த பெரும் குற்றங்களைப்பற்றி அறிந்திருப்பீர்கள். இவர்களில் சிலர் நாள் முழுவதும் அறுசுவை உணவுகளை உண்பதையே வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் அனைத்தையும் உண்டுவிட்டு சில மருந்துகளின் துணையோடு அவைகளை வாந்தியெடுக்கும் வழக்கமும் கொண்டிருந்தனர், வயிறு ஓரளவு காலி ஆனவுடன் மீண்டும் உண்பதற்கு உணவு மேசைக்கு வந்தனர். இந்த செயல்முறையை  ஒருநாள் முழுவதும் மேற்கொள்வதே அவர்கள் வழக்கமாகவும் இருந்தது. இவர்களில் ஒருவர் பெரும் தீயை பார்க்கும் ஆர்வத்தில் ஒரு நகரத்தையே தீயிட்டு கொளுத்தியவர் ஆவார். இவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இவைகள் அரிய தாதுக்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் மனிதர்கள் அல்ல இவைகள் மனித சாம்ராஜ்ஜியத்தின் தாதுக்கள். 


தாவர மனிதன் 


இப்பொழுது தாவரநிலையில் உள்ள மனிதர்களைப்பற்றி நாம் பார்ப்போம். இவர்களின் வட்டமானது , சுயநலம் மிகுந்த தாது மனிதனைவிட சற்றே பெரிய வட்டம் தாவர மனிதனுடையது. இவர்களின் செயல்கள் ஒரு பந்தயக்குதிரையோடு ஒப்பிடக்கூடியது. பந்தயக்குதிரையின் வட்டமானது தொட்டிலின் மேலே கட்டப்பட்ட பம்பரத்தை விட பெரியது. இதனுடைய வட்டம் படத்தில் இரண்டாவது வட்டமாக காட்டப்பட்டுள்ளது. அதாவது இதனுடைய மையம் B யின் மையம். இந்த மக்கள் யார் ? இவர்கள் தங்களது புலன்களின் சுவையை பூர்த்தி செய்ய பிறருடைய தேவைகளை செலவிட விரும்பாதவர்கள். இவர்கள் பிறரின் நன்மைகளை கருத்தில் கொள்வார்கள். இவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் நெருங்கிய வட்டத்தினை கவனத்தில் கொள்வார்கள். இவர்கள் சுயநலமிக்க தாது மனிதனைவிட சற்று மேலானவர்கள். ஏனெனில் இவர்கள் தங்களின் உடல் முன்னேற்றத்தை மட்டும் எண்ணாமல் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளையும் நினைப்பார்கள். இரண்டாவது வட்டம் பல சிறிய வட்டங்களைக் கொண்டது. இவர்களை நாம் சுயநலமற்றவர்கள் என்று அழைக்கலாமா ? இல்லை இவர்களின் சுயம் ஒரு சிறிய அளவே விரிவடைந்தது. தாது மனிதர்களிடம் சுயம் உடலோடு சுருங்கிய ஒன்றாக இருக்கும். சுயநலம் என்பது சிறிதளவு சுத்திகரிக்கப்பட்டிருக்கும். இவர்களை அறிய இரண்டாவது வட்டத்தைப் பாருங்கள் இது உட்பறத்தில் குழிவானதாக இருக்கிறது. இணக்கம் என்னும் பண்பு அன்பின் அணைக்கும் கரங்கள். நமது நீட்டப்பட்ட கரங்களைக் கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்குங்கள். இந்த வட்டமானது அனைத்து குடும்ப உறுப்பினர்களை மட்டுமின்றி வெளியே இருக்கும் பிரபஞ்சத்தையும் தழுவக்கூடியது. இவர்களின் அன்புக்கரங்கள் நீளும் வரை இவர்கள் சிறந்தவர்களே. இவர்களின் சுயநலமானது வேறொரு குடும்பத்துடன் மோதல் ஏற்படுகையில் தங்களது குடும்பத்திற்காக மட்டிலுமே வெளிப்படுகிறது. 


விலங்கு மனிதன் 


அடுத்ததாக நாம் மூன்றாவது வட்டத்திற்கு வருவோம். இதில் விலங்குகள் மனித வடிவில் உள்ளன. இவர்கள்  மூன்றாவது வட்டமான C மூலம் குறிப்பிடப்படுகிறார்கள். இது இரண்டாவது வட்டத்தை விட பெரியது. இவர்களை மழைக்காலத்தோடு ஒப்பிடப்படுகிறார்கள். இவர்களின் சுயமானது ஒரு சிறிய பையனைவிட உயர்ந்தது அல்லது உள்வட்டத்தைவிட பெரியது. இவர்கள் தங்கள் சுயத்தை தங்களின் பிரிவு , வர்க்கம் அல்லது நிலைகளின் மூலம் அடையாளம் காண்கிறார்கள். இந்தக் குழுவினர், தங்களை தங்களின் ஜாதி அல்லது தொழில் மூலம் அடையாளம் காண்கிறார்கள். இவர்கள் மிகுந்த நல்லவர்கள் மட்டுமல்ல உண்மையில் பயனுள்ளவர்களும் கூட இவர்கள் தாவர மனிதர்களைவிட பயனுள்ளவர்கள். இவர்களின் மையம் தாவர மனிதர்களைவிட விரிவடைந்த ஒன்றாகும். இவர்களின் சுழற்சி ஆரம் பெரியது. இவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இவர்களின் பயன்பாடுகள் பல குடும்பங்களுக்கு மட்டுமன்று பல தனிப்பட்ட மனிதர்களிடமும் நீட்டித்திருக்கிறது. இவர்கள் தங்கள் கரங்களுக்குள் இருப்பவர்களை அன்பினால் தழுவிக்கொள்பவர்களைவிடவும் மிகுத்த பயனுள்ளவர்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தினர் தவிர்த்து மொத்த குழு மற்றும் பிரிவினர்க்கும் இணக்கமானவர்கள். இவர்கள் சுயநலமானவர்களா ? ஆம். இவர்கள் தங்கள் சுயத்தை தங்களின் இனத்தோடும், ஜாதீய குழுவினரோடும் அடையாளப்படுத்திக்கொள்வார்கள். இவர்கள் குழுக்களுக்கிடையே பகைமையைக் கொண்டு, தங்களைப்போல் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள மாட்டார்கள். இங்கே ஒரு வகுப்பு, என்பதைப்போல் அங்கே இன்னொரு வகுப்பு என்ற இரண்டாவது வட்டம் உண்டு என்பதை ஏற்காமல், இருவரும் பரஸ்பரம் எதிரெதிராக போரில் ஈடுபட்டு தங்களைத் தாக்கிக் கொள்வார்கள். இவ்விதமாக சண்டையிட்டுக் கொள்ளும் இந்த விலங்கு மனிதர்கள் முந்தைய தாவர மனிதர்களைவிட உயர்ந்தவர்களே. 


இயற்கையின் விதி நீ ஓரிடத்தில் தேங்கி நிற்கக்கூடாது என்பதேயாகும். நீங்கள் நகர்ந்துகொண்டே பயணிக்க வேண்டும். மாற்றத்திற்கும் , முன்னேற்றத்திற்கும் எதிரான வெறுப்புணர்வை கொண்டிருக்காதீர்கள். தாது மனிதர்களாக இருந்தவர்களுக்கு அடுத்த உயர்நிலை என்பது தாவர மனிதர்களாக மாறுதல், தாவர மனிதர்களுக்கான அடுத்த உயர்நிலை என்பது விலங்கு மனிதர்கள் ஆகும். ஒரு மனிதன் மேல் நோக்கி உயர்கின்ற வளர்ச்சியில் விலங்கு மனித நிலை என்பது நல்ல உயர்நிலையே. விலங்கு மனிதநிலையை அடைதல் என்பது தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றல்ல. அதில் தவறொன்றுமில்லை. நாம் வளராமல் தேங்கி ஒரே இடத்தில் நிற்பதே தவறாகும். ஒருவன் அடிமையாக ஒரே நிலையில் நிற்பதே வருந்தக்கூடிய விஷயமாக இருக்கும். சோடோம் மற்றும் கோமோரா போன்ற நகரங்கள் அழிக்கப்படும் போது பலரின் மனைவியர்கள் அங்கிருந்து  வெளியேறினர்.ஆனால் ஒருத்தி தான் அந்த நகரத்தைவிட்டு நகர விரும்பாமல் அங்கேயே இருக்க விரும்பினாள். அவள் அங்கேயே ஒரு உப்புப்பாறையாக மாற்றப்பட்டாள். மேல்நோக்கி நகர விரும்புவர்கள் வளர்கிறார்கள் அதனை மறுப்புவர்கள் காணாமல் போகிறார்கள். தேக்கமே துயரத்தின் மூலமாகும். இது நல்ல மனிதர்களான விலங்கு மனிதர்களானாலும் அவர்களும் முன்னேற்றம் அடைய வேண்டியவர்களே. 


நிலவு மனிதன் 


இப்பொழுது நாம் நான்காவது வட்டத்திற்கு வந்திருக்கிறோம். இது D என்ற மையத்தோடு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மனிதனுள் இருக்கும் மனிதனைக் குறிக்கிறது. இவனது வட்டமானது நிலவோடு ஒப்பிடப்படுகிறது. நிலவானது பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. நிலவு மனிதன் என்பவன் யார் ? அவர் விவரிக்கும் மிகப்பெரிய சுற்றுப்பாதையில் அவர் மகிழ்வோடு இருக்கிறாரா ? அவர் தனது சுயத்தை மொத்த தேசத்துடனோ அல்லது மொத்த இனத்துடனோ அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவரை நீங்கள் ஒரு தேசபக்தர் என்றும் அழைக்கலாம். அவரது வட்டம் மிகப்பெரியது. அவர் ஒரு குறிப்பிட்ட மதம், இனம் குறித்து மட்டும் கவலை கொள்பவரில்லை. ஜாதி, இனம், நிறம் போன்ற பிரிவுகளையெல்லாம் கடந்து இவர் தன்னோடு தனது நிலத்தில் வாழும் அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே இவரது எண்ணம். இவர் வரவேற்கத்தக்கவர், மிகுந்த நல்லவர். ஆனால் நிலவு என்பதன் சுழற்சி கடலில் முன்னோக்கி மற்றும் பின்செல்லும் அலைகளையும் உருவாக்கும். இது தவிர்த்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நிலவினாலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது நல்ல வட்டம் என்பதில் சந்தேகமில்லை ஆயினும் இந்த மக்கள் சுயநலம் மிக்கவர்களே. இவர்களின் சுயநலம் என்பதன் பொருள் தேசப்பற்றாக இருக்கும். இவர்களின் இந்த பைத்தியக்காரத்தனம் இருவேறு நாடுகளிடையே ரத்தம் சிந்த வழிவகுக்கும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களும், சில சமயம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணிக்கவும் வாய்ப்புண்டு. இந்த அழகிய பூமியின் முகத்தில் இரத்தக்கறையை பூசுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். அவர்களை தழுவிச் செல்பவர்களுக்கு நல்லவர்களாக தோன்றும் இவர்கள், அவ்விதம் அல்லாதவர்களுக்கு கொடுமையானவர்களாகவும் ஆகிறார்கள். அமெரிக்கர்களுக்கு வாஷிங்டன் ஏற்றதாக இருந்தாலும் ஒரு ஐரோப்பியருக்கு அது உகந்ததாக இருப்பதில்லை. ஆங்கிலேயர்களின் தேசப்பற்று உயரியதாக இருப்பினும், அவர்களின் இந்த தேசப்பற்றே வாழ்க்கையையும், இரத்தத்தையும் உறிஞ்சக்கூடியதாகவும் அமைகிறது. 


சுதந்திர மனிதன் 


இறுதியாக நாம் ஐந்தாவது வட்டத்திற்கு வந்துவிட்டோம். இங்கே வட்டத்தின் மையம் முடிவிலி வரை நகர்கிறது. இதன் ஆரம் முடிவிலியாக இருக்கிறது. அப்படியெனில் இதன் வட்டம் என்னவாக இருக்கும் ? இதன் ஆரம் முடிவிலியாக நகர்கையில் வட்டமானது நேர்கோடாகவே அமையும். அதில் அனைத்து வளைவுகளும் காணாமல் போகும். இந்த நேர்கோடானது சமமாக செல்லும். இதில் குழி, குவியங்கள் இல்லை. இவர்களை சூரியனே குறிப்பிடுகிறது. உங்களுக்கு தெரியுமா ? சூரியன் நேர்கோட்டிலேயே நகர்கிறது. இதன் வட்டத்தின் ஆரம் முடிவிலியாகும். சூரியனின் மையம் எங்கே இருந்தாலும் அதன் வட்டத்தின் பரப்பினை எங்கும் காண இயலாது. இதுவே கடவுளின் வட்டம் இவர்களே சுதந்திர மனிதர்கள் இவர்கள் அனைத்து துயரங்களில் இருந்தும் , பயங்களில் இருந்தும், உடல் சார்ந்த ஆசைகள் மற்றும் சுயநலத்தில் இருந்தும் விடுதலைப்பெற்ற சுதந்திர மனிதர்கள். இவர்கள் சுயநலமானவர்களா ? இல்லை இதுவரை இருந்த சுயநலம் என்பது நேர்கோட்டில் பயணிக்கையில் அடிமைப்படுத்தல் எனும் புள்ளியே இல்லை. இது பிரபஞ்ச வெளியில் பயணிக்கும் போது சுயநலம் என்ற வளைவுகளே அற்றது. இங்கே சுயநலம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும். அல்லது இங்கே உண்மையான சுயம் என்பது பெறப்பட்டிருக்கும். 


நாம் ஒரு சிறிய புள்ளியாக இருக்கும் வட்டத்தில் துவங்கினோம் , அந்த சுயநலம் இங்கே சிறிய புள்ளியாக இருந்தது விரிவடைந்து, அதிகரித்து அது ஒரு நேர்கோடாக மாறும் வகையில் விரிவடைந்துள்ளது. இவர்களே கடவுள் மனிதர்கள். இவர்களுக்கு இந்த பரந்த உலகமே வீடு. இனம், மொழி, நிறம், ஜாதி, குலம் மற்றும் நாடுகள் என்ற வேறுபாட்டை கடந்தவர்கள். நீங்கள்  ஆங்கிலேயேனோ, அமெரிக்கனோ, முகமதியனோ, புத்தமதமோ அல்லது ஒரு ஹிந்துவோ நீங்கள் என்னவாக இருந்தாலும் நீங்கள் ராமாவின் சுயம். நீங்கள் அவரது சுயம். இங்கே சுயநலம் அபூர்வமாக அதிகரித்துள்ளது. இதுவொரு புதிய விதமான சுயநலம். இந்த பரந்த உலகமே எனது எனும் சுயம். இந்த பிரபஞ்சமே இந்த மனிதனின் சுயம். இந்த பரந்த உலகம், மிகுந்த சிறிய படைப்பு, தாதுக்கள், தாவரங்கள் இவைகளின் அனைத்தின் சுயமும் இந்த மனிதனின் சுயமேயாகும். 


இந்த நிலையை அடைந்த மனிதர் முழுமையான சுதந்திரத்தில் இருப்பார். அங்கே சீடர்கள் அவரின் பாதங்களின் அருகே பல ஆண்டுகளுக்கு அமர்வார்கள். அந்த சீடன் குருவிடமிருந்து விடைபெறுகையில் குருவிடம் மண்டியிட்டு வணங்குவான். இது இந்தியாவில் வழக்கமான ஒன்று. குருவும் புன்னகையோடு எழுந்து கூறுகையில், “ அன்பே, நீ கற்க வேண்டிய அனைத்தையும் இன்னமும் கற்கவில்லை. நீ இன்னமும் பல விஷயங்களில் முழுமையடையவில்லை. நீ இன்னும் சிறிது காலம் இங்கே தங்கியிரு.” தனது புனிதமான குருவின் முன்னிலையில் சிறிது காலம் தங்கியவுடன், அவர் மேலும் சில தாக்கங்களைப் பெறுவார். சீடனின் இதயமானது இறை விழிப்புணர்வுக்கு மாற்றப்பட்டிருக்கும். அவர் புனிதம் நிரம்பியவராக இருப்பார். அவர் குருவின் முன்னிலையில் இருந்து நகர்ந்த அவர் , தான் சீடனா அல்லது குருவா என்பதை அறிவார். அவர் விலகிச் சென்று இந்த மொத்த பிரபஞ்சத்தையும், பரந்த உலகத்தையும் அவரது உண்மையான சுயத்தின் மூலமாகவே பார்ப்பார், மொத்தப் பிரபஞ்சமும் அவரது உண்மையான சுயமாகவே இருக்கும். அவரும், அவரது சுயமும் எங்கே சென்றது ? எப்பொழுது அவரது சுயம் அனைத்து அணுவிலும், மூலக்கூறிலும் ஊடுருவி எங்கே சென்றது ? அவரைப் பொருத்தவரை செல்வதும், வருவதும் பொருளற்றவையாகவே இருக்கும். நீங்கள் செல்ல விரும்பும் இடத்திலேயே இருக்கும்பொழுது  நீங்கள் ஏன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போக வேண்டும். இங்கேதான் அவன் தனது உண்மையான சுயத்தை அறிகிறான். தன்னுள்ளும், எங்கும் இறை இருப்பதை உணர்கிறான். பின்னர் எப்படி அவன் செல்வதைப்பற்றியும், வருவதைப்பற்றியும் சிந்திக்க இயலும் ? அவரைப்பொருத்தவரை செல்வதும் , வருவதும் அவரிடம் இல்லாமல் போகிறது. அவர் தன்னை உணர்ந்த நிலையில் இருக்கிறார். இந்த உடலைவிட்டு நீங்குதல் என்பது ஒரு வகையான எதிர் செயல். தன்னுள் இருப்பவன் செல்வதுமில்லை, வருவதுமில்லை. அப்பொழுதுதான் குருவானவர் திருப்தியடைகிறார். இவ்விதமாகவே ஒரு குரு சீடனின் உத்தமமான தகுதியை நிரூபிக்கிறார். இதற்கு சீடன் எந்த நன்றியறிவித்தலோ , மரியாதையோ குருவிற்கு தருவதில்லை. நன்றியுணர்வு என்பதை கடந்த நிலை அங்கே மலர்ந்திருக்கும். அப்பொழுதுதான் குருவானவர் தனது சீடன் தனது பாடங்களை முழுமையாக புரிந்து கொண்டுவிட்டதாக அறிவார். இந்த குருநிலையில் அவருக்கு நீங்கள் மரியாதை செய்கையில் , “ நான் இந்த உடலினால் கட்டுப்பட்டவன் அல்ல ; நான் இந்த சிறிய உடலில் மட்டுமில்லை. நான் இந்த உலகம் முழுவதிலும் பரந்திருப்பவன், நான் உன்னில் இருக்கிறேன், என்னுள் இருக்கும் உனக்கும் மரியாதை தருகிறேன்.” இந்த நிலையில் உள்ள மனிதன் உங்களிடம் எதையும் விற்பதில்லை. இந்த நிலையில் உடலுக்கான மரியாதை மற்றும் இழிவு என்பதும் பொருளற்றவையே. புகழோ , அவமானமோ இவர்களுக்கு ஒன்றுமில்லாதவையே. 


இந்தியாவில் ஒரு துறவியிடம் ஒரு மனிதனும், இளவரசனும் வந்து அவரை வணங்கினார்கள். அந்த துறவி இளவரசனிடம் தன்னை வணங்கியதன் காரணத்தை கேட்டார். அந்த இளவரசனும், “ ஓ ! புனிதமானவரே , நீங்கள் ஒரு துறவி , நீங்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த இந்த ராஜ்ஜியத்தை நீங்கள் என் ஆணையை ஏற்றுக்கொண்டு தந்தீர்கள். நீங்கள் துறவின் உன்னத அடையாளம். எனவே , நான் உங்களை கடவுளாக பார்க்கிறேன் , உங்களைத் தொழுகிறேன்.” இந்தியாவில் செல்வந்தர்களுக்கு மரியாதை செலுத்துவதைவிட துறவிகளையே அதிகம் மதிப்பார்கள். இந்தியாவில் டாலரைவிட எல்லாம் வல்ல இறையின் மீதே அதிக நம்பிக்கையை வைப்பார்கள். அதனாலேயே இளவரசன் துறவிக்கு பெரும் மரியாதையை தந்தான். துறவி இளவரசனுக்கு பதிலளிக்கையில், “ அதுதான் காரணமெனில் நீ ஏன் எனக்கு மரியாதைகளை செய்தாய். நான்தான் உனது பாதங்களை கழுவ வேண்டும். நான்தான் உன் முன் வணங்க வேண்டும். ஏனெனில் , நீ ஒரு அரசன் மட்டுமல்ல , இவ்வுலகில் உள்ள அனைத்து துறவிகள் ஒருங்கிணைந்தாலும் உனது துறவுக்கு இணையாகாது.” அது மிகுந்த விசித்திரமாக அனைவராலும் பார்க்கப்பட்டது. எப்படி அது சாத்தியம் ? என்று துறவியிடம் கேட்கப்பட துறவி விளக்கத் துவங்கினார், “ஒருவேளை , இங்கே ஒரு மனிதன் ஒரு அற்புதமான அரண்மனையைக் கட்டி அதில் படியும் தூசுகளையும், அழுக்கினையும் வெளியேற்றுகிறானா ? அல்லது அரண்மனையை கைவிடுகிறானா ? அந்த மனிதன் துறவியா ? “ என்று வினவ இளவரசன் பதிலளிக்கையில், “ இல்லை. இல்லை அவர் துறவி இல்லை” என்று கூற துறவி மேலும் தொடர்ந்து, “ இங்கே ஒரு மனிதன் தூசு மற்றும் அழுக்கை பொக்கிஷமாக கருதி , மொத்த அழகான வீட்டையும் அதற்கு தந்துவிட நினைக்கிறார். நீ இந்த மனிதனைப்பற்றி என்ன நினைக்கிறாய் ?” என்று வினவ இளவரசன் , “ இந்த மனிதன் தூசையும், அழுக்கையும் வைத்துக்கொண்டு அரண்மனையை துறக்கிறானெனில் இவனல்லவா துறவி.” மீண்டும் துறவி தொடர்கையில், “ இளவரசே, அப்பொழுது நீங்கள் தான் அந்த துறவி, ஏனெனில் உண்மையான சுயம், இறை, உண்மையான ஆத்மன் அதுவே அரண்மனை , வீடு, சொர்க்கம் சொர்க்கத்தைவிட உயர்வான ஒன்று என சகலத்தையும் கைவிடும், அந்த அரண்மனையில் இருக்கும் தூசும், அழுக்கும் இந்த உடல் மற்றும் மிகச்சிறிய அளவிலான சுயநலமே, அதனையே நீயும் வைத்திருக்கிறாய். நான் எதையும் கைவிடவில்லை. நானே தெய்வங்களின் கடவுள் , இப்பிரபஞ்சத்தின் இறைவன்.” 


சிலசமயம் இந்த மக்கள் , அதாவது உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்த மக்கள் , சுதந்திர ஆன்மாக்கள், இவர்கள் கீழிருக்கும் சிலரைப் பார்த்து அவர்களை பைத்தியம் என்பார்கள். ஆனால் சில கணங்களேனும் அவர்கள் தங்களது இறை ஆனந்தத்தை பரிமாறி கொள்வார்களா என்று அவர்களிடம் கேட்டால் , அவர்கள் ஒருபோதும் அதனைத் தரமாட்டார்கள். இவர்கள் கீழிருந்து கேட்பவர்களை பரிதாபமாக பார்த்து தங்களைச் செல்வந்தர்களாகவே கருதுவார்கள். இன்பம் உன்னில் உள்ளது. அதனை அங்கேயே நீ பெற இயலும். மொத்த பொக்கிஷமும் உன்னில் உள்ளது. பின்னர் ஏன் பிச்சைக்காரனைப்போல் பங்கினைக் கேட்கிறீர்கள். வாருங்கள். உங்கள் உண்மையான சுயத்தை உணருங்கள், சர்வ வல்லமை கொண்ட கடவுளர்களே இந்தப்பாடல் உங்களிடமிருந்தே மகிழ்ச்சியோடு வெடிக்கிறது.


“ நானே சூரிய ஒளியின் துகள் 

             நானே தகிக்கும் சூரியன் 

இங்கே ஓய்வெடு!” நான் அணுக்களிடம் கிசுகிசுக்கிறேன் 

             நான் கோளத்தை அழைத்து, “உருளுங்கள்!” 

நானே காலையின் முகச்சிவப்பு 

             நானே மாலையின் இளந்தென்றல்; 

நானே இலைகளின் முணுமுணுப்பு 

             பெருங்கடல்களின் உப்பு. 

காதலர்களின் கனிவான கெஞ்சல்

              கன்னிப்பெண்களின் அச்சம்; 

போர்வீரன், அவனைத்தாக்கும் வாளின் கூர்முனை

              அவனது தாயின் இதயத்தை பிசையும் அச்சம். 

ரோஜா , கவிஞனின் பாடும் பறவை

                அதன் தொண்டையிலிருந்து எழும் பாடல்,

தீப்பெட்டி, தீப்பொறி, மெழுகுத் திரி

                 பறக்கும் விட்டில்பூச்சி. 

நானே போதை, திராட்சை 

                 மதுக்குடம், வாசனை திரவியம்,

விருந்தினர், புரவலர், பயணி,  

                  அழகான மதுக்கோப்பை. 


ஓ !  உங்கள் சுயத்தின் அற்புதமும், மகிமையும் ஆடம்பரமான மன்னர்களையும் அபத்தமாக்குகிறது. 

அத்தகைய அற்புதமான சொர்க்கம், இருப்பு, அறிவு மற்றும் பேரின்பம் நீயே. 


ஓம் ! ஓம் !! ஓம் !!! 






























Comments

Post a Comment

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்