திரு. பெருமாள் சடையன் எனும் 'விதையின் உயிர்ப்பு'


திரு. பெருமாள் சடையன் அவர்களின் நினைவு நாள் மீள் பதிவு. 



சிவனணைந்த பெருமாள் - ஒரு அறிமுகம் 



1966 ஆம் ஆண்டு சிவனணைந்த பெருமாள் சடையன் என்பவர் யோகிராம்சுரத்குமாருடன் தொடர்பில் வந்தார். இவர் நாடார் இனத்தைச் சேர்ந்தவர். முத்துக்குட்டி சாமி என்ற பெயரில் கன்னியாக்குமரியில் 300 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவரை வழிபடுபவர்.


நமது பெருமாள் சடையனும் நாடார் இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் தாமரைக்குளத்தில் பிறந்து திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். அவர் ஒரு பித்தளை பாத்திர வியாபாரி. ராஜகோபுரத்திற்கு எதிரே இருந்துள்ளது இவரது கடை. அவருக்கு இயல்பிலேயே சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் உதவும் உள்ளமும் பக்தியும் இருந்து வந்துள்ளது. 


பெருமாள் சடையனை முதல் பார்வையில் வசீகரித்த யோகியார், அவர் கடைக்கு அவ்வப்போது செல்வதை வழக்கமாக கொண்டார். அவர் எங்கு அழைத்தாலும் அவரைப் பின் தொடர்வது பெருமாளின் வழக்கமானது. தன் வீட்டில் இருந்து வரும் உணவை இருவரும் பகிர்ந்து கடையிலேயே அமர்ந்து உண்டனர். 


பெருமாளின் கவனம் மெல்ல வியாபாரத்தில் இருந்து நழுவி யோகிராம்சுரத்குமார் பக்கம் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் கடையையே மூட வேண்டிய காலமும் வந்தது. பின்னர் அவரின் கடை மூடப்பட்டு ஒரு நடைப்பாதை வியாபாரி ஆனார். ஆனாலும் யோகிராம்சுரத்குமார்க்கு அவரின் முழுநேரச் சேவை தேவைப்பட்டதால் அதுவும் மூடப்பட்டது. அதன்பின் பெருமாள் சடையன் யோகிராம்சுரத்குமாரின் நிழல் ஆனார். 


காலைமுதல் மாலைவரை யோகிராம்சுரத்குமார் உடன் திரிவதும் , அவரை பலரின் தொல்லைகளில் இருந்து காத்தலுமே முக்கிய கடமையாக இருந்து வந்துள்ளது. இருவரும் செஞ்சி பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள புன்னை மரத்தடியில் பல நேரங்களில் அமர்ந்திருப்பர்.


பெருமாளின் மனைவி யோகியின் மீது பக்தியும் மரியாதையும் வைத்திருந்தப்போதும் , இரவில் மட்டும் வீட்டிற்கு வரும் பெருமாளுடம் அவரது வீட்டில் அவரது மாறிய குணங்கள், அக்கறைக்குறித்த விவாதம் நடைப்பெற , பெருமாள் வீட்டிற்கு செல்வதையும், குழந்தைகளை கவனிப்பதையும் அறவே தவிர்த்தனர். 


எப்போதேனும் கிடைக்கும் பணத்தை யோகி பெருமாளிடம் கொடுத்து அதை அவர் வீட்டிற்குச் சென்று தருமாறு வற்புறுத்துவார். அப்போது பெருமாள் மட்டும் தனித்தே அவர் இல்லத்திற்கு போவார். 


சிலநாட்களில் மூவரும் உணவின்றி பட்டினியோடு இருப்பார்கள். உடுப்பி பிருந்தாவன் ஓட்டலில் உண்ணும் வாய்ப்பும் , அனுமதியும் யோகிக்கு இருந்தப்போதிலும் தன் மற்ற இரு நண்பர்கள் உண்ணாதபோது தான் மட்டும் உண்ணுதல் தவறென யோகி கருதினார். 


எப்போதெல்லாம் இந்த மூவருக்கும் பசி தாக்குகிறதோ , அப்போதெல்லாம் ஜார்ஜ் கூலி வேலை செய்து சிறிதளவு பொருள்ஈட்டி உணவைப் பெற்று யோகியின் பாதங்களில் வைப்பார். யோகியும் அதில் உள்ள அன்பை உணர்ந்து மெல்ல மூவரும் இரவில் உண்பார்கள். 


யோகிக்கு நாளிதழ் படிக்கும் ஆர்வம் உண்டு. அவர் தி ஹிந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களை அவ்வப்போது படிப்பார். அவைகளை சேர்த்து வைத்து ஒரு சணல்  கோணியில் திணித்து சேகரிக்கச் சொன்னார். 


காலப்போக்கில் பல நாளிதழ்கள், பல பழைய துணிகள் என அவைகளை சுமந்து வருவதை ஜார்ஜ் பெருமாள் சடையனின் முக்கிய வேலையாக இருந்து வந்தது.


இந்த அறிமுகம் 'அமரகாவியம்' என்ற எஸ். பார்த்தசாரதி அவர்களின் நூல் தருகிறது. 


இந்த அறிமுகம் தாண்டி இனி...பெருமாள் சடையன் அவர்கள் குறித்து மேலும் ஆழமாக தேடுவோம்.


யோகிராம்சுரத்குமார் 

'விதையின் உயிர்ப்பு'

அன்பெனப்படுவது யாதெனின் பகிர்வதில் பிழைபடாமை. இதுவே பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களின் வழி.  ஆனால் திருவண்ணாமலை பகவான் யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் பல பிரிவினைகள்,  ஆக்கிரமிப்புகள், அதிகாரமையங்கள், சடங்குகள், புறக்கணிப்புகள் அத்தகைய புறக்கணிப்புகளில் மிக முக்கியமானது. 


ஆசிரமம் அமையக் காரணமாக அமைந்த யோகியின் கருவி அல்லது, யோகி அவர்களின் சங்கல்பத்தை நிறைவேற்றிக்கொள்ள 'ஆசிரமம்' என்ற விதையை பகவான் யோகிராம்சுரத்குமார் மீது கொண்ட பேரன்பின் காரணமாகவும் , யோகியின் அகத்தூண்டல் மூலமாகவும் முதன்முதலில் பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களுக்கு ஆசிரமம் தேவை என்பதை முன்மொழிந்தவர் திரு. சிவனணைந்த பெருமாள் என்பவர் ஆவார். 


எனவே அவர் எழுதிய " நெஞ்சம் சுமந்த நினைவுகள் மறக்க முடியுமா நீ  யோகிராம்சுரத்குமாரனை" என்ற மூல நூல் தந்த தாக்கமே இந்த சிறிய அறிமுக நூல்.


பல காரணங்களால் இதுவரை எந்த முன்னெடுப்பு எடுக்கப்படாமலும்,  எடுக்கப்பட்டாலும் மறுபதிப்பு செய்யப்படாததே இந்த நூல் இது. இதற்கும் " பகவான் பார்த்துப்பார்" என்று இருக்க இயலாத தன்மையினால் " விதையின் உயிர்ப்பு " என்ற தலைப்பில்  இச்சிறு நூலை என்பதை எழுத துவங்கிவிட்டேன். இத்தலைப்பையும் வழக்கம் போல் தந்தவர் கவிஞர். மகுடேஸ்வரன் அவர்களே.


அன்று, இன்று, நாளை, என்றும் இருக்க கூடிய ஒரே சத்தியமான குரு பகவான் யோகிராம்சுரத்குமார் மட்டிலுமே. குருஜி, அன்னை, மா போன்ற அடைமொழிகள்  வெறும் வெளிவேஷங்கள் அவைகள் கலைந்து போகும் மேகங்கள். ஆனால் பிரபஞ்சத்தின் சத்தியம் பகவான் யோகிராம்சுரத்குமார் மட்டிலுமே. அவரை வணங்கியே வழக்கம்போல் தொடங்கியது இப்பணி. இனி முடிப்பது அவர் திருவுள்ளம். 


யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுருராயா.


என்றென்றும் அன்புடன்,

சரஸ்வதி சுவாமிநாதன்

08/09/2018.



அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. திருவண்ணாமலை கிழக்கு கோபுரத்திற்கு எதிரே இருந்த ஒரு பாத்திரக்கடையில் இருந்து அண்ணாமலையையும், கோபுரத்தையும் உற்று நோக்கியவாறு இருந்திருக்கிறார் சிவனணைந்த பெருமாள், அவர் முன் நாமம் அற்ற ஒரு பிரபஞ்ச அனாதியான, ஒரு திகழ் சக்கரம் போன்ற பெரும் சக்தி மனித வடிவத்தில் புன்னகையோடு வந்து எதிரே நின்றிருக்கிறது.  எப்போதும் மனிதமனம் இருப்பதை விட்டுவிட்டு வேறொன்றையே தேடுவதைப்போல அன்றும் பெருமாள் மலையையும், கோபுரத்தையும் பெருமாள் பார்க்க இயலாதவண்ணம் அவைகளை மறைத்தவாறு கையில் ஒரு விசிறி, நான்கு ஐந்து பேப்பர்கள், பச்சைநிற சால்வையோடு, விரிந்த சிகையோடு நின்றிருந்த அந்த மனித உருவம் கொண்ட பெரும் சக்தி. அவரின் பச்சை நிறச்சால்வை போன்றவை பெருமாள் மனதில் சம்மணமிட்டு அமர்ந்தது கொண்டிருக்கிறது. 


தன்னருகே அவரை அமரச்செய்த  பெருமாள் அவரிடம் " ஐயா ! காப்பி சாப்பிடுங்களேன் " என்று கேட்க, அவரும் " ஆம் , சரி " என்றிருக்கிறார். 


பெருமாள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை கைத்தட்டி  அழைத்து காப்பி வாங்கிவருமாறு உத்தரவிட அழைக்க, இடைமறித்தது அவரின் குரல், " அவர்கள் வேண்டாம், நீங்கள் போய் வாங்கி வாருங்கள் ! " என்று உத்தரவிட்டிருக்கிறார்.


அகங்காரம் என்பதை தொடர்ந்து நசுக்கும் நண்பரே 'குரு' என்பவர் அல்லவா ?அன்றைய ஞாயிற்றுக்கிழமையிலும் அதே அரங்கேறியது.


" என்ன தயங்குகின்றீர்கள் ? " என கேட்டதோடு " இரண்டு காப்பி வாங்கி வாருங்கள் " என பெருமாள் அவர்களை விரட்டியிருக்கிறார் அவர். 


இரண்டு காப்பிகளை வாங்கிய பெருமாள் அந்த பெரியவரை நோக்கி நடந்திருக்கிறார். காப்பிய ஆறவைப்பது போல் மெல்ல திரு. பெருமாளின் மனதை சமனப்படுத்திய அந்த பெரியவர் பெருமாளிடம் சிறிது காப்பியை தந்துவிட்டு கையில் இருந்த சிரட்டையில் ஊற்றி குடிக்கத்துவங்கியிருக்கிறார்.


குடித்தப்பின் காப்பியின் டம்ளர், மற்றும் டபராக்களையும் பெருமாளையே எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார் அவர்.


திரும்பி அவரிடம் வந்த போது 2 1/2 அணாவிற்கு 'சார்மினார்' சிகரெட் ஒரு பாக்கெட்டும், 1/2 அணாவிற்கு ஒரு தீப்பெட்டியும் வாங்கி அவருக்கு பெருமாள் சமர்ப்பிக்க முதலில் , " யார் இதை வாங்கி வரச் சொன்னது " என்று அவர் அதட்டியபோதும்  , அதனை பின்னர் புன்னகையோடு ஏற்று பெருமாளை அவர் அன்போடு இரண்டு தட்டு தட்டினார். 


( 04/01/1998 ல் நண்பன் பாலசந்திரன் உடன் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு சிகரெட் சமர்ப்பித்த எனக்கும் ( சுவாமிநாதன் ) அதே ஞாயிற்றுக்கிழமையில் யோகிராம்சுரத்குமார் அவர்களின் தரிசனம் கிடைத்தது ஒரு  உத்திரட்டாதி நட்சத்திரத்தில்தான்,  சுவாமிநாதன் ஜனன நட்சத்திரம் உத்திரட்டாதி. இத்தகைய தரிசனம் கிடைத்தது என்பதை யோகிராம்சுரத்குமார் அவர்களின் இன்றைய நாளுக்கான அன்றைய  ஆசிர்வாதமாகவே இப்பொழுது உணர்கிறேன். ) 


அவர் தொடர்ந்து பெருமாள் அவர்களின் வசிப்பிடம், கடை விவரம், பாத்திரக்கடை திறக்கும் நேரம் , பெயர் என்ற விவரம் கேட்க, " சிவனணைந்த பெருமாள் " என்ற அவரது பதிலுக்கு பெரும் சிரிப்பையே பதிலாக தந்தார் அவர். 


அப்போது திரு. பெருமாளின் நண்பரான திருப்பதி. ஆர்.ஜி் பாலகிருஷ்ணன் அங்கே வர , பெருமாள் தனது கடையை அந்த பெரியவரிடம் காட்டிவிட்டு " நாளைக்கு காலையில் வாருங்கள்"  எனக்கூறி நண்பரோடு அண்ணாமலையார் கோவிலுக்குள் நுழைந்தார்.


அன்றைய அண்ணாமலையாரின் தரிசனம் பெருமாளின் கண்களில் ஆனந்த கண்ணீரை பொழிய வைத்தது. 


அன்றைய விதையின் உயிர்ப்பே இன்று பல பறவைகள் கூடு அடையும் பெரும் ஆலமரமாய், ஆசிரமமாக இருக்கிறது.



"எங்கெங்கு காணினும் சக்தியடா" என்ற பாரதியின் பரிதவிப்பே அன்றைய நாளில்  பெருமாளுக்கும் இருந்திருக்கிறது.  


பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா


என்ற பாரதியின் பரவசத்தைப்போல் உண்ணாமுலை அம்மன் சன்னதிக்குச் சென்ற பெருமாளுக்கு அந்த மூலஸ்தானமே பச்சை நிறமாக தோன்றியதோடு அங்கே அந்தப்பெரியவர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்ததைப் போன்ற ஒரு காட்சியும் தோன்றியிருக்கிறது. 


அவரின் நினைவென்னும்  பறவை இடைவிடாது பெருமாளுக்குள் அந்தப்பெரியவரை வட்டமடித்தே சிறகடிக்கத்துவங்கியிருக்கிறது. 


" சபரி அம்மாள் " என்ற ஒரு உக்கிரமான சாதுவிடமும் அச்சமயம் பெருமாள் நெருக்கமாக இருந்த காலக்கட்டமது. 


பெரியவருக்கு காபி மட்டும்தானே கொடுத்தோம் அது அவர்க்கு போதுமா ? என்ற சிந்தனை பெருமாளை ஆக்கிரமித்திருந்தது.  ஆயினும் அச்சமயம் அவரோடு கூடிய சில  நண்பர்களோடு ஓட்டலுக்குச் சென்று உணவருந்திவிட்டு அன்றைய நாளில் சிவ சிந்தனையோடு உறங்கிப்போனார்  பெருமாள். மறுநாள் காலை குல தெய்வங்கள், பெற்றோர்கள், சூரியன் என சகலரையும் வணங்கி தனது பாத்திரக் கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் மீண்டும் முதல்நாள் வந்த அதே பெரியவர் 'மெய்ப்பொருள்' ( பெருமாளின் யோகிராம்சுரத்குமார் குறித்த விளிப்பு )  கடையை தேடி வந்தார். பெருமாள் அவரை கடையில் அமருமாறு கோர அவரும் அமர்ந்திருக்கிறார்.


டீ கடைப்பையன் டீ வாங்கிவர அதனை அந்த மெய்ப்பொருளான பெரியவருக்கு  பெருமாள் தந்திருக்கிறார். சிறிது நேரத்தில் கேரியரில் காலை உணவாக இட்லி வர அதனை இருவரும் தலா மூன்று இட்லி என பகிர்ந்து உண்டிருக்கின்றனர். காலை உணவு கொண்டு வந்த பையனை நோக்கிய அந்த பெரியவர் " இவர் யார் ? " என்று கேட்க பெருமாள் " இவர் பெயர் ராஜூ " என்று கூற, அவரைத்தன் அருகில் அழைத்த அந்தப் பெரியவர் " இந்தப்பிச்சைக்காரன் பெயர் என்ன என்று தெரியுமா ? " என்று ராஜூவிடம் கேட்டதோடு அந்த பரம்பொருள் " யோகி ராம்சுரத்குமார் " என்று கூறியதோடு உங்கள் பெயர் என்ன என்று பெருமாளிடம் கேட்க " சிவனணைந்தபெருமாள்" என்று பதிலுக்கு 

சிரிப்பு என்ற யோகி ராம்சுரத்குமாரின் தொடரலை விடாது அடித்திருக்கிறது. 


அச்சமயம் பெருமாள் உணர்ந்த உணர்வுகள் உயிர்ப்பானவை, எழுத்தில் விவரிக்க இயலாதவை.



சிரிப்பலைகள் ஓய்ந்தப்பின் அன்றைய வியாபாரிகளின் சங்கத்தலைவராக இருந்த என்.ஜி. சுப்பிரமணிச் செட்டியார் உன் கடையில் இருந்து யானையின் பிளிறல் போல் சிரிப்பு சத்தம் கேட்டதே யாருடையது என்று கேட்க, யாரோ ஒரு பரம்பொருள் ஓரிரு நாட்களாக இங்கே வருகிறார் என்று கூற, அவர் பெருமாள் மீது கொண்ட அக்கறையால் இது போன்ற சிலரின் தொடர்பால் நீங்களும் ஏதேனும் ஒருநாள் சன்னியாசியாக போக வேண்டியது வந்து விடும் என்று கூறியிருக்கிறார். அதனை சிரித்தவாறே பெருமாள் கடந்தாலும் அச்சமயம் அவரின் வார்த்தைகள் " அப்படியே ஆகட்டும் " என்று இறையால் ஆசிர்வதிக்கப்பட்டதென்னவோ பின்னாளின் நிஜம். 


ஆயினும் அன்றைய பெருமாளின் இரவு உறக்கத்தை செட்டியாரின் வார்த்தைகள் தின்றிருக்கின்றன.  காலையில் மகள் காப்பி டம்ளர் நீட்டிய விநாடி மீண்டும் யோகிராம்சுரத்குமார்  நினைவு பெருமாளுக்குள் வர , கடை சாவியோடு கடைக்கு சென்றபோது, அங்கே யோகிராம்சுரத்குமார் கடைவாசலில் காத்திருந்திருந்திருக்கிறார். பெருமாள் அவரின் பாதம் தொட்டு வணங்க " போதும் ! கடையைத் திறப்போம் " என்றாராம் யோகிராம்சுரத்குமார். 


கடையில் வேலை செய்யும் ராஜூ வந்து யோகிராம்சுரத்குமார் அவர்களை வணங்கியப்பின் , யோகிராம்சுரத்குமார், " இந்தப்பிச்சைக்காரன் உடன் வாருங்கள் " என்று அழைக்க, மறுப்பேதும் இன்றி அவரைப் பின்தொடர்ந்திருக்கிறார் பெருமாள். 


அண்ணாமலையார் ஆலயத்தின் பிரம்மதீர்த்த குளத்திற்கு அவரை அழைத்துச் சென்ற யோகி ராம்சுரத்குமார் மலையை உற்று நோக்கியவாறே அண்ணாமலையாரிடம் எதையோ கேட்பது போல் பார்த்து விட்டு, படிக்கட்டில் இறங்கி தனது கை, கால்களை கழுவிக் கொண்டதோடு, கையில் கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் முகர்ந்து மூன்று முறை பெருமாள் முகத்தில் அடித்திருக்கிறார்.


அவ்விதம் தண்ணீரடித்தப்பின் பெருமாளுக்கேனோ அச்சமயம் பசிப்பது போல் உணர்வு தோன்ற , அதனை அறிந்த பரம்பொருள் அவருக்கு சிரட்டையில் தண்ணீர் முகர்ந்து அவர் கைகளில் வார்க்க, அந்த பச்சைநிறத்தோடு பாசிப்படிந்திருக்கும் குளத்தின் தண்ணீர் பால் போல் பெருமாளுக்கு இனித்திருக்கிறது.


அதன்பின் யோகிராம்சுரத்குமார் பெருமாள் கையைப்பிடித்து நடந்த வேகமான நடையானது, பெருமாளிற்கேனோ அவரைப்பின் தொடரும் ஓட்டம் போல் தோன்றியது. 


தெற்கு கோபுர வாயிலைக் கடந்து மேற்கு முகமாக நடந்த போது எதிர்ப்பட்ட சில பெண்மணிகள் " இன்று கடை உண்டா ? " என பெருமாளை விசாரிக்க, " கடை உண்டு நீங்கள் போங்கள் நான் வந்து விடுவேன் " என்றிருக்கிறார்.


ஆனால் யோகிராம்சுரத்குமார் அக்கினி தீர்த்தம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், காளியம்மன் கோவில், தட்சிணாமூர்த்தி ஆலயம் கடந்து எதிர்புறம் தென்பட்ட ஒரு ஓடையின் அருகில் இருந்த பங்களாவைச்சுற்றிப் போடப்பட்டிருந்த வேலியைக்கடந்து உள்ளேச் சென்று ஒரு பூட்டிய அறையைக் காண்பித்து " பாருங்கள் பெருமாள் இது தான் இந்தப்பிச்சைக்காரன் தங்கிய இடம் பாருங்கள்" என்று கூற, பெருமாள் அந்த அறையை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தவுடன் அதிர்ந்திருக்கிறார்.



விஷஜந்துக்கள் அந்த வீட்டில் தங்கள் வசிப்பிடம் சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தன என்று சுலபமாக கூறிவிடலாம்.  ஆனால் அன்று அங்கே பெருமாள் கண்டவை கருந்தேள், செந்தேள், பூரான், ஓணான் , இவைகளுக்கு தீனியாக அமையும் கரையான்கள் அவைகளில் அச்சமூட்டும் புற்று. பழைய பேப்பர் , ஆடைகளுக்கு இடையே உலவிய சிறிய பாம்பு இவைகளை கண்டவர்களின் மரணபரியந்தம் வரையிலும் மறக்க இயலாத காட்சிகள் இவை. இந்த காட்சிகள் குருபீடத்திற்கும், ஆசிரமத்திற்கும், யோகிராம்சுரத்குமார்  பேரன்பால் கட்டி வைத்திருக்கும் பக்தர்களையும் ஆக்கிரமிக்க நினைக்கும் இன்றைய குருஜிக்கள் / மா மற்றும் அன்னையர்கள் என எவரும் ஒரு விநாடியும் வாழத்துணிய இயலாத சூழலின் நிஜ சாட்சியமே பெருமாள் அந்த வீட்டு ஜன்னல் வழியே கண்ட காட்சிகள். 


இறை மீதும் தன் குரு உபதேசித்த ராமநாமத்தின் மீதும் யோகிராம்சுரத்குமார் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையே இத்தகைய சூழலில் அவர் வசிக்கத் தேவையான துணிவை தந்தது என்பதை நாமும் உணர வேண்டும்.


மழை நீரையும், சூரிய வெளிச்சத்தையும் வெகுவாக வீட்டிற்குள் தரும் மக்கிய , பலமற்ற ஓலைக்கூரை வீடே அன்றைய யோகிராம்சுரத்குமாரின் வசிப்பிடம். சன்னலில் கைவைத்தவாறு வேடிக்கைப்பார்த்த பெருமாளை குறிவைத்து நெருங்கிய இரண்டு கருந்தேள்களை அன்று  ஹூங்காரம் செய்து விரட்டியிருக்கிறார் யோகிராம்சுரத்குமார். 


குரு என்பவர் தனது வாழ்வை எடுத்துக்காட்டி உணர்த்துவதும் ஒரு பாடமேயன்றி, அதுகுறித்த உங்களின் எத்தகைய கருத்தும் அவரை பாதிப்பதில்லை. 


'போவோம்' என பெருமாளிடம் உத்தரவிட்டு அவரது கரங்களைப்பற்றி நகரத்துவங்கியிருக்கிறார். 


அக்கினி தீர்த்தம் தாண்டி இருக்கும் தாமரைக்குளத்தின் மேற்பக்கம் உள்ள ஒரு முஸ்லீம் கல்குதிரை தர்க்கா அருகே பச்சைத்துண்டு, வெள்ளைத்தொப்பி அணிந்த கருத்த நிறம் கொண்ட ஒரு இஸ்லாமிய நண்பர் யோகிராம்சுரத்குமார் அவர்களைக் கண்டதும் ஓடோடி வந்து அணைத்துக் கொள்வாராம். அவர்கள் இருவரிடமும் இனிய உறவு மலர்ந்திருந்ததை அவர்களது சிரிப்பும், தழுவலும் உணர்த்தியிருக்கிறது. 


" கடையில் ஆள் இல்லை பெருமாள் ! கடைக்குப் போவோம் " என்று யோகிராம்சுரத்குமார் கூறியப்பின்னரே பெருமாளுக்கு அவரது கடையின் நினைவு வந்திருக்கிறது. 


இருவரும் கடைக்கு விரைந்து வந்த நேரத்தில் பத்திரகாளியம்மன் என்கிற பத்மாவதி என்ற அம்மையார் ( பெருமாளின் மனைவி )  பெருமாளிற்காக காலை, மற்றும் மதிய உணவைக் கொண்டுவந்திருக்கிறார் அந்த உணவை யோகிக்கும்,  பெருமாளுக்கும் அவர் பரிமாற யோகி இட்லி நான்கு காரச்சட்டினியோடும், பருப்பு ரசம் , பருப்பு, கூட்டு போன்றவற்றை ரசித்து, அனுபவித்து உண்டதோடு அவர்களின் அன்பையும் ஏற்றார். உணவு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு விடைபெறும் முன் அந்த அம்மையார் யோகிராம்சுரத்குமார் பாதங்களைத் தொட்டு வணங்கியபோது " கவலை வேண்டாம் அம்மா ! சந்தோஷமாக இருப்பீர்கள் ! " என்று கூறி ஆசிர்வதித்ததோடு அவரது சட்டைப்பையிலிருந்து வாடிய சாமந்திப்பூவை எடுத்துக் கொடுத்தனுப்பினார். 


பாத்திரக்கடைக்கு வந்திருந்த பெருமாளின் திக்குவாய் குறைபாடு உள்ள நண்பரிடம் யோகிராம்சுரத்குமார் , " இந்தப் பிச்சைக்காரனுடைய பெயரைச் சொல்லுங்கள் நாக்கு சரியாக பேச வந்துவிடும் " அவரும் யோகிராம்சுரத்கமால் என யோகியின் பெயரை மந்திரம் போல் உச்சரிக்கத்துவங்கினார். 


அன்றிரவு பெருமாள் கடை மூடும் வரை உடன் இருந்த யோகிராம்சுரத்குமார் " அகில இந்திய காபி பார் " கடையின் முதலாளியான திரு. தங்கவேலுப்பிள்ளை யோகியோடு பெருமாளைக்கண்டவுடன் , " நீங்கள் எப்படி இவரோடு சேர்ந்தீர்கள் ? இப்போது கடை இல்லையா ? " என்ற கேட்க யோகி மீண்டும் தனக்கே உரித்தான அலைஅலையான சிரிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் தங்கவேலுப்பிள்ளை பேசிய பல வார்த்தைகள் மூழ்கிப்போகும் அளவில் யோகியின் சிரிப்பு ஒலித்திருக்கிறது.


அன்றைய இரவின் பயணவழியில் ஒரு நாயரும் இணைந்துக்கொள்ள நெருஞ்சிகள் நிறைந்த இடுகாட்டில் வெறும் காலுடன் மூவரின் பயணமும் தொடர்ந்திருக்கிறது.


கடமைகளை முடித்து மீண்டும் நாயரின் கடைக்கு மூவரும் திரும்ப, " பெருமாள் ! போவோம் ! " என்று யோகிராம்சுரத்குமார் கூற நாயரிடம், விடைப்பெற்று யோகியும் பெருமாளும் கிளம்பினர்.



இரவில் இரயில் நிலையத்தை நோக்கி பயணிக்கத்துவங்கியிருக்கிறார்கள்.வழியில் புளியமரத்தின் அருகில் இருந்த பிள்ளையார் கோவில் சமீபத்தில் இருக்கும் ஒரு நண்பர் வீட்டை அணுகும் போது அவர் யோகியை வரவேற்றார் அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்தப்பின் யோகி பெருமாளுக்கு விடைதந்து, " வெகுநேரம் ஆகிவிட்டது பெருமாள் ! நீங்கள் வீட்டிற்குப் போங்கள். அம்மாவிடம் சொல்லுங்கள். பிச்சைக்காரனிடம் இருந்து விட்டேன் என்று சொல்லுங்கள் " என்றார் பெருமாளும் விடைப்பெற்றுச் சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்று உறங்கிய பெருமாள். மறுநாள் கடைக்குச் சென்றபோது அன்றும் யோகி பெருமாளின் கடைநோக்கி வந்தாராம்.


யோகிராம்சுரத்குமார் அவர்களின் நண்பரனான காங்கிரஸ் தியாகி , " சுபான் பாய் " எதிர்புறமாக கடையை நோக்கி வர, இரண்டு டீ யோகிக்கும், பெருமாளுக்கும் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் சுபான் பாய்க்கு மூன்றாவது டீ ஆர்டர் செய்ய பெருமாள் எத்தனித்த போது யோகி, " வேண்டாம் பெருமாள் இரண்டு டீயை மூன்றாக்குவோம். இன்னொரு டம்பளரை எடுங்கள் " என்றாராம். மூவரும் டீ அருந்தியப்பின், சுபான் பாயோடு யோகி உருது மொழியில் தொடர்பு கொண்டாராம்.


பின்னர் பெருமாளை யோகி அழைத்துச் சென்று தான் தவமியற்றிய இடமான புளிய மரத்தை காட்டியிருக்கிறார். அங்கு அவருக்கு தொல்லையிழைத்த சிலரைப்பற்றி குறிப்பிட்டபோது யோகியிடம் பெருமாள் இனிமேல் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்ற போதிலும் யோகி, " துன்பத்தை அனுபவித்தவனுக்குத்தான் அச்சம் புரியும் அதைச் சொல்லி கேட்பவர்களுக்குப் புரிய வைக்க முடியாது " என்று வருந்தியிருக்கிறார். யோகியின் இம்மொழிகளை சற்றே உள்வாங்கி அசைபோடுதல் அவசியம்.


கார்முகில் சித்தன், யோகிராம்சுரத்குமார், சுபான்பாய் போன்றோர் பெருமாள் கடையில் கூடி சிரிக்கும் போது சத்தம் விண்ணைப்பிளக்கும். அப்போது அச்சத்தம் கேட்டு விசாரிப்பவர்களிடம் கார்முகில் சித்தன் என்பவர் , " இது தேவர்கள் மூவரும் கூடிய இடம் ஆதலால் இங்கு சிரிப்புதான் இருக்கும் அழுகை இருக்காது " என்று கூறியிருக்கிறார். மேலும் பெருமாள்சாமியின் கடையில் ஆன்மீகத்தேன் பொங்கிப் பாய்வதால் உயர்ந்த உன்னதமான ஞானிகள் சீரும், சிறப்புமான பல ஆத்மஞானிகள் இங்கே கூடுகின்றனர் என்றாராம். 


பெருமாள் தான் ஆத்மஞானிகள் கூடும் அளவிற்கு எதையும் செய்ததில்லை என்று கூறியபோது , சுபான்பாய் பெருமாள் எதையும் எதிர்பாராமல் ஞானிகளுக்கு ஏதோவொன்றை செய்வதாலேயே பெருமாளின் தேவைகளை மகான்கள் பூர்த்தி செய்வதாகவும், யோகிராம்சுரத்குமார் போன்ற அருளாளர்கள் பெருமாளைத் தேடி வருவதாகவும் விளக்கம் கூறியிருக்கிறார். 


கார்முகில் சித்தன், சுபான்பாய், யோகிராம்சுரத்குமார், பெருமாள் தவிர்த்து ஐந்தாவது ஆளாக 'தேவுடு' சுவாமி என்ற தெலுங்கை தாய்மொழியாக கொண்டவரும் அங்கே இணைந்திருக்கிறார். கார்முகில் சித்தன் அவரது வருகையை " ஐந்தாவது தாடி வந்தாகிவிட்டது" என்றார். இத்தகைய கூட்டணியைக் கண்ட பக்கத்து கடைக்காரர்கள் இத்தகைய பைத்தியக்கார கூட்டத்தோடு இணைந்து இருப்பதன் மூலம் உன் கடை என்ன ஆகப்போகுதோ என்ற தனது அச்சத்தை பெருமாளிடம் வெளியிட்டிருக்கிறார்.



ஒருநாள் பெருமாளை அழைத்த யோகிராம்சுரத்குமார் ஒரு வெள்ளைப்பேப்பரை வாங்கி அதில் குங்குமத்தால் பிரம்ம எழுத்தைப்போன்ற ஏதோ ஒன்றை எழுதிவிட்டு அதனை கொண்டுச்சென்று உடனே கண்ணாடிச்சட்டமிட்டு கடையில் வைக்கச்சொல்லியிருக்கிறார். அவ்விதம் வைக்கப்பட்ட படத்திற்கு தினமும் ஊதுபத்தியும் காட்டச்சொன்னாராம் யோகி. அவ்விதம் காட்டத்துவங்கிய சில நாட்களில் பெருமாளுக்கு திருப்பதி செல்ல வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மெல்ல மெல்ல பெருமாளுக்கு வியாபாரத்தில் நாட்டம் குறைந்திருக்கிறது. மேலும் பாத்திரக்கடையின் வியாபாரம் குறைந்து போயிருக்கிறது. 


யோகிராம்சுரத்குமார் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பெருமாள் ஆசைப்பட " அருணா ஸ்டூடியோ" விற்கு யோகி பெருமாளை அழைத்துச் சென்றதோடு அவரை தன் அருகில் சமதையாக நிறுத்தி புகைப்படம் எடுக்க யோகி அனுமதித்த போதிலும், பெருமாள் அவரது காலடி அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவே விரும்பினார். அதனையும் யோகிராம்சுரத்குமார் நிறைவேற்றியிருக்கிறார்.


பசித்தால் யோகிராம்சுரத்குமார் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிடைத்த பட்டை சாதம் வாங்கி நண்பர்களோடு பகிர்ந்து சாப்பிட்டிருக்கிறார். இவ்விதம் வாழ்க்கையை பெருமாள் நகர்த்தியிருக்கிறார். 


மணலூர்ப்பேட்டையில் நடைபெறும் ஆற்றுத்திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று பாத்திரக்கடை போடும் வழக்கம் உடையவர் பெருமாள்.  அந்த ஆண்டும் அதற்காக 20,000 ரூபாய் மதிப்புள்ள சரக்குகளைக் கடைப்போட ஒருவருக்கு  கொடுத்த பெருமாளை,  அந்த நபர் பாத்திரங்களை மணலூர்ப்பேட்டைக்கு கொண்டுச் செல்லாமல் சிதம்பரம் நோக்கி எடுத்துச் சென்று ஏமாற்றியிருக்கிறார். அந்த பொருளை மீட்க செய்த பெருமாளின் முயற்சிகளும் அவருக்கு பெரும் செலவையும் நஷ்டத்தையுமே தந்திருக்கிறது. 


திருவண்ணாமலையில் ஒருசமயம் ஆறு நாட்கள் தொடர்ந்து பெய்த பெருமழையில் ரமணாச்சரமம் அருகே விசிறி ராம் சுவாமி மழையால் மலையில் மரித்துவிட்டார் என்ற வதந்தி பெருமாள் மனதை பெருமளவில் பாதித்திருக்கிறது.  ஆனால் மீண்டும் யோகிராம்சுரத்குமார் அவர்களை காந்திசிலை அருகில் பெருமாள் சந்தித்ததும்  யோகியின் பாதங்களை வணங்கி பெருமகிழ்வு கொண்டாராம் பெருமாள். 



பெருமாள் யோகிராம்சுரத்குமாருடன் தொடர்பு கொண்டிருப்பதைக் கண்டு பலர் பரிகசித்தாலும்,  பெருமாள் யோகிராம்சுரத்குமார் இடம் அவரது இறப்பு பற்றிய வதந்தி குறித்த கேட்க அதற்கு யோகி , " அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். எல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார்கள். நான் அப்பா வேலை பார்க்கிறேன். இந்த கஷ்டமான வேலை பார்க்கிறேன். இது அப்பாவுடைய வேலைதான் சொன்னாலும் கேட்டாலும் பார்த்தாலும் அப்பாவினுடைய வேலைதான். எல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார்கள். " என்று யோகிராம்சுரத்குமார் வாய்மொழிந்திருக்கிறார். 


பெருமாள் பணத்திற்கு அடிமை ஆவதுபோல் தான் கண்ட ஒரு கனவைப்பற்றி  யோகிராம்சுரத்குமார் இடம் பகிர அவ்விதமாக ஏதும் நிகழாது என யோகி உறுதியளித்திருக்கிறார்.


ஒருமுறை கடையில் அமர்ந்திருந்த பெருமாளிடம் சிலர் ஓடிவந்து, துர்க்கையம்மன் கோவில் அருகே ராம் ராம் சுவாமியை ( யோகிராம்சுரத்குமார் அவர்களை ) யாரோ இரண்டு பேர் அடிக்கிறார்கள் அய்யா என்ற தகவலைக் கேட்டு அவ்விடம் விரைந்திருக்கிறார் பெருமாள். அவரை துன்புறுத்திய முரடனை விரட்டிப்பிடிக்க முயன்ற பெருமாளையும் யோகிராம்சுரத்குமார் தடுத்திருக்கிறார். மீண்டும் அவன் வந்து துன்புறுத்தினால் என்ன செய்வது என்று கேட்ட பெருமாளிடம், " வந்தால் வரட்டும். நாம் அதைத் தாங்கிக் கொள்வோம். அப்பா கொடுத்த வேலையைச் செய்வோம் " என்று கூறியிருக்கிறார் யோகிராம்சுரத்குமார். 


பெருமாளோடு அன்றைய காலக்கட்டத்தில் யோகிக்கு ஆதரவாக இருந்தோர் முருகன், குருசாமி போன்றவர்கள் ஆவார்கள்.


யோகிராம்சுரத்குமார் ஒரு சாது என்பதால் அவரை அமாவாசை திதிக்கு உணவு உண்ண ஒரு வீட்டில் அழைத்தப்போது அவர் பெருமாளையும் அந்த வீட்டிற்கு உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.  ஆனால் அந்தப் பெண் உங்களை மட்டும் தானே வரச்சொன்னேன் நீங்கள் ஏன் இன்னொருவரை அழைத்து வந்தீர்கள் என்று கூச்சலிட,  அதனைக்கேட்ட யோகிராம்சுரத்குமார் தான் நின்றிருந்த இடத்திலேயே அசையாது நின்றிருக்கிறார். அப்பெண்ணின் கூச்சலைக்கேட்டு பலரும் தங்களது வீட்டிற்கு வெளியில் வந்து எட்டிப்பார்த்திருக்கின்றனர். அதில் பெருமாளின் நண்பரான இராஜரத்தினம் பிள்ளை - கலா என்ற சகோதர - சகோதரிகள் அடங்குவர். அவர்கள்  பெருமாளை கண்டு எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்றழைக்க யோகியின் அனுமதியோடு அவர்கள் இல்லம் சென்று உணவும், தட்சணையும் பெற்று பெருமாள் வந்திருக்கிறார். ஆனாலும் யோகிராம்சுரத்குமார் முதலில் ஏன் இன்னொருவரையும் அழைத்து வந்தீர்கள் என்று உரக்க கத்தியப் பெண்மணியின் வீட்டிற்கு செல்லாமல் அங்கே நின்றிருந்து,  பின்னர் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவர்கள் பாதபூஜை செய்தப்பின் உணவு உண்டாரா இல்லையா என்று எவரும் அறியாதவகையில் விரைவாய் அங்கிருந்து திரும்பி வந்தாராம். யோகிராம்சுரத்குமார். 


உரிக்காமல் கொள்ள முடியாது .உரித்தால் தள்ள முடியாது என்பதைப்போல் பலாப்பழம் போல் முட்களோடு கடினமாகவும் அன்பெனும்  சுளையோடும் இருப்பவரே யோகிராம்சுரத்குமார்.


ஏன் இன்னொருவரை அழைத்து வந்தீர்கள் என்று கேட்டப்பெண்மணியும் யோகிராம்சுரத்குமாரிடம் அவ்வப்போது கோயிலில் அவரைச்சந்தித்து ஆசிப்பெற்ற நாளில் இருந்து நலமாக இருப்பதை பெருமாளிடம் பின்னொரு சமயம் விளக்கியப்போது பெருமாள் வருத்தம் நீங்கி பெரும் மகிழ்ச்சியடைந்தாராம்.


பெருமாள் ஒருமுறை காசிக்கு போகவேண்டும் என்ற தனது ஆசையை யோகிராம்சுரத்குமாரிடம் வெளியிட சுவாமிகள் உடனே " இந்தப்பிச்சைக்காரன் இருக்கான் " என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டாராம் யோகி.


பெருமாளின் தாயாரை ஒருமுறை யோகி சந்தித்து ஆசிர்வதித்தது மட்டுமில்லாமல் அவரது தாயார் கொண்டு வந்த பட்சணத்தையும் உண்டார். ஒருமுறை யோகியிடம் சொல்லாமல் திருப்பதிக்கு மேற்கொண்ட பயணம் தடைப்பட்டு பாதியில் திரும்பிய பெருமாள் மீண்டும் யோகியிடம் வந்து தனது பயணம் நண்பரோடு நடந்த மனமுறிவால் தடைப்பட்டதையும் அதற்கு காரணம் யோகியிடம் சொல்லாமல் கிளம்பியதாகவும் தெரிவிக்க யோகி, " அப்படி இல்லை  பெருமாள் ! இந்தப்பிச்சைக்காரனுக்கு ஒன்றும் தெரியாது " என்று பெருமாளை அணைத்துக் கொண்டிருக்கிறார். 


பெருமாள் நஷ்டமடையும் பாத்திரக்கடை வியாபாரத்தை தொடர்ந்து நடத்துவதைவிட அதனை மூடிவிடலாம் என்றே பெருமாள் நினைத்தார்.


திருவண்ணாமலை குறித்த பல சிறப்புகளை எழுதிய ஸ்ரீ பரணிதரன் அவர்கள்  யோகிராம்சுரத்குமாரை 'அருட்குழந்தை' எனக்குறிப்பிட்டு எழுதிய அந்த நூலை பத்திரமாக யோகிராம்சுரத்குமார் வைத்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார் பெருமாள். 


மேலும் ஸ்ரீ பரணிதரன் எழுதிய வரிகளான " திருவண்ணாமலையில் ஒரு குழந்தை கருவாகி, உருவாகி, உயர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது " என்ற வரியை திரும்ப திரும்ப பெருமாளிடம் படிக்குமாறும் யோகி கூறியிருக்கிறார். 


பலத்திருத்தலங்களுக்கு பயணித்து திருவண்ணாமலை திரும்பிய பெருமாளிடம் யோகிராம்சுரத்குமார் , " இந்தப்பிச்சைக்காரன் பெருமாள் கூட இருக்கிறான் " என்றிருக்கிறார். விசிறிசாமியார் தொடர்பே பெருமாளின் வியாபாரத் தொய்விற்கு காரணம் என்று பலர் கூறியபோதும், அவர்களிடம் பெருமாள், " இன்று நம் நகரத்துக்குள்ளே பல இன்னல்களை கடந்து வாழும் இவருக்கு உபகாரம் செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது சாலச் சிறந்த தருமம் " என்று பெருமாள் உறுதியாக அவர்களுக்கு பதில் அளித்திருக்கிறார்.



பெருமாளுக்கு விசிறிசாமியாருடன் இருந்த நட்பை முறிக்க நெருக்கடி அவரது குடும்பத்து பெண்கள் மூலமும் வெளிப்பட்டிருக்கிறது.  மேலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அதில் கிடைத்த 14000 ரூபாயில் புதிய தொழில் ஒன்றை நண்பரோடு சேர்ந்து துவக்கியிருக்கிறார் பெருமாள். அந்த வியாபார நண்பரும் விசிறிசாமியாரை பார்க்க கூடாது. பார்த்தாலும் பேசக்கூடாது என்று கட்டளை விதித்திருக்கிறார் அதையும் மீறி யோகிராம்சுரத்குமார் பெருமாள் முன் எதிர்பட அவரின் தாள்பணிந்த பெருமாளை விட்டு அந்த வியாபார நண்பரும் நீங்கியிருக்கிறார்.


கிராமங்களில் கமிஷன் முறையில் செய்ய நினைத்திருந்த நெல், மணிலா வியாபாரமும் , யோகிராம்சுரத்குமார் வார்த்தைகளான " வேண்டாம் பெருமாள் இந்த கூட்டு வியாபாரம் இதை விட்டு விடவும். வேண்டாம். " என்று வாய்மொழிய அதனை மீறி அதனை நடத்த முயன்ற பெருமாளை அந்த நண்பர் ஏமாற்றியதோடு பலரிடம் கடன் பெற்று பெருமாளை இக்கட்டில் சிக்கவைத்தாராம்.


வியாபாரத்தில் தோற்ற பெருமாள் மீண்டும் யோகிராம்சுரத்குமார் அவர்களை சந்தித்து ஆறுதல் அடைந்திருக்கிறார். ஆயினும் மனைவி மற்றும் தாயார் அவர்களின் மனவேதனை தொடர்ந்திருக்கிறது.  சில நண்பர்கள் பெருமாளின் மனைவியிடம் பேசி அவரை திருவண்ணாமலையை விட்டு சென்னைக்கு  அழைத்துச்செல்ல நினைத்தனர் ஆனால் பெருமாள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. 


ஒருமுறை நண்பர் தங்கப்பாண்டியன்  50 ரூபாய்  தந்தபோது , அதில் 40 ரூபாய் பெருமாளின் மகளான 'தனவீரபாக்கிய லெட்சுமி'யிடம் தந்துவிட்டு யோகிராம்சுரத்குமாரை பார்க்காமல் சென்னை போகவேண்டும் என்று நினைத்ததோடு,  பதுங்கி பதுங்கி பஸ்நிலையம் நோக்கி விரைந்த பெருமாளை யோகிராம்சுரத்குமார் கண்டறிந்து தடுத்ததோடு, " பெருமாள் ! இனி இந்தப்பிச்சைக்காரனோடு இருப்போம். இந்தப் பிச்சைக்காரனை நம்புவோம். இனித் திருவண்ணாமலையை விட்டு எங்கும் போக வேண்டாம். இந்தப்பிச்சைக்காரனும் பெருமாளும் இங்கேயே இருப்போம் " என்றார். 


இந்நிகழ்வுக்குப்பின்பே நடந்திருக்கிறது ஜார்ஜ் -  பெருமாள் - யோகிராம்சுரத்குமார் இணைப்பு. 


சென்னைப்பயணம் தடைப்பட்ட அன்று மதியம் 2.30 மணிக்கு யோகிராம்சுரத்குமார் பெருமாளிடம் உணவை அவரது வீட்டில் இருந்து கொண்டுவருமாறு உத்தரவிட பல மனக்குழப்பங்களுக்கு இடையே வீட்டிற்குச் சென்ற பெருமாளிடம் , அவரது கோரிக்கைக்குட்பட்டு அவரது மனைவி, யோகிராம்சுரத்குமார் அவர்களுக்கும் கேரியரில் உணவை தந்து அனுப்பியிருக்கிறார். புளிக்குழம்பு, சாதம், சுண்டைக்காய் வத்தல் என சகலத்தையும் ஒன்றாக பிசைந்து தனது சிரட்டையில் போடுமாறு யோகிராம்சுரத்குமார் கேட்க அதனை பெருமாள் நிறைவேற்றியிருக்கிறார். 


உணவு உண்டப்பின் யோகிராம்சுரத்குமார் , " புறப்படுவோம் பெருமாள் ! ஆலயத்திற்கு போவோம் " என்று கூறிய தனது காலடியில் இருந்த பேப்பர்களை எடுத்து பெருமாளிடம் கொடுத்து " இதை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள் " என்று கூறி யோகிராம்சுரத்குமார் முன்னால் நடக்க ஜார்ஜ்ம், பெருமாளும் யோகிராம்சுரத்குமார் அவர்களை பின்தொடர்ந்திருக்கின்றனர். 


இவ்விதமே பெருமாள் என்ற விதை உயிர்ப்பானது. தடுத்தாட்கொள்ளப்பட்டது. இன்றைய அனைத்து யோகிராம்சுரத்குமார் பக்தர்களும் இத்தகைய தன்னலம் கருதாத தியாகத்தை கொண்டாட அறிந்திருக்க வேண்டும். 


இது மூலநூலின் சுருக்கமான ஒரு அறிமுகம் , மூல நூலை தேட ஒரு தூண்டல், கைகாட்டி மரம். தேடி பயணம் செய்வது உங்கள் முடிவு. உண்மைகள் மறைக்கப்பட்ட காலக்கட்டத்தில் இத்தகைய அறிமுகங்கள் அவசியம் என்பதாலேயே இது எழுதப்பட்டது.


கொஞ்சம் மெதுவாக இந்த அறிமுகநூலை ஆழ்ந்து படிக்க இதன் அடிநாதமாக இருக்கும் எளிய 'சரணாகதி' புரிந்துவிடக்கூடும்.


காலமே குரு

காலமே கடவுள்

காலமே சகலமும்.


யோகிராம்சுரத்குமார்

யோகிராம்சுரத்குமார்

யோகிராம்சுரத்குமார்

ஜெயகுருராயா.


- சுபம் -

Comments

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்