இறையுணர்தலின் வனங்களில் - 1 - உள்ளே மகிழ்ச்சி
உ
யோகி ராம்சுரத்குமார்
சத்தியம் உனது பிறப்புரிமை. அதனை வலியுறுத்தி இந்த பிரபஞ்சத்தின் தலைவனாயிரு. சத்தியத்தின் உருமாற்றம் - அது நீதான்.
- ராமா
தொகுதி – 1
சுவாமி ராமதீர்த்தரின் முழுமையான தொகுப்பு
ராமாவின் வாக்குறுதி
பல ஆன்மாக்களின் மூலமாக பணிபுரிந்தோ அல்லது தனித்து செயல் புரிந்தோ , ராமா மிகத்தீவிரமாக தனது சத்திய வாழ்வை உட்புகுத்தி இன்னும் பத்து வருடங்களுக்குள் இருள் மற்றும் பலவீனத்தை இந்தியாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதியளிக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதிக்குள், இந்தியா அதன் அசலான மகிமையைவிட கூடுதலான மகிமையோடு மீட்டெடுக்கப்படும். இந்த வார்த்தைகள் பதிவு செய்யப்படட்டும்.
சுவாமி ராமதீர்த்தர்
ஜனவரி 1, 1900
ராமா ஒரு அத்வைதி
தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள கிராமமான முராரிவாலா ( பஞ்சாப் ) என்ற தொலைதூர கிராமத்தில் 1873 ல் அக்டோபர் 22 ஆம் தேதி பிறந்து தீர்த்த ராமா என்ற முன்பு அழைக்கப்பட்டவரே சுவாமி ராமதீர்த்தர் ஆவார். அவர் 33 ஆண்டுகள் இவ்வுலகில் பளிச்சிடும் மின்னலாக தோன்றி, சத்தியம் மற்றும் அத்வைதம் போன்றவற்றின் மகிமையை எங்கும் பரவச்செய்ததோடு, ராமா ராமாவையே உருவாக்குவார் , அதிகமாகவோ, குறைவாகவோ வேறொன்றில்லை என்ற உரிமையை அவர் கோரிக்கொள்ளும் அளவிற்கு செயல்பட்டார்.
மிக கடுமையான வறுமையில் வாடிய அவர் தொடர்ந்து சில நாட்களுக்கு உணவு கிடைக்காமலும் செலவிற்கு ஒரு நாளுக்கு மூன்று பைசா என்ற வாழ்க்கை நிலையில் வாழ்ந்தபோதும் அவர் தனது கல்வியை தொடர்ந்தார். மன ஊக்கம் குறையாமலும், தணியாத தாகத்தோடும் தனது எம்.ஏ படிப்பின் இறுதி தேர்வு வரை தனது உயர்நிலை பாரம்பரியத்தை பாதுகாத்த அவர், தனது அனைத்து உலகியல் ரீதியான ஈர்ப்புக்களையும் உதறி சன்னியாச வாழ்வை தேர்ந்தெடுத்த அவர் ஒரு வேதாந்த அவதாரமாகவே வாழ்ந்தார்.
இறையுணர்தல் மகிமையின் போதையால் தொலைதூரங்களுக்கு பயணப்பட்ட ராமா தனது கரங்களில் ஒரு பைசா கூட வைத்திருந்ததில்லை, ஆயினும் ஜப்பான், யு.எஸ்.ஏ, எகிப்த் மற்றும் பிற நாட்டின் மக்கள் அவரிடம் மந்திரத்திற்கு கட்டுண்டதைப் போல் இருந்தனர். அவரிடமிருந்து கற்றலைவிட அவரோடு இயைந்திருந்த உணர்ச்சித்துடிப்பின் காரணமாகவும், அனைவரோடும் கலந்த அவரது ஒருமைத்தன்மை பண்பாலும் பலர் அவரிடம் நெருங்கியிருந்தனர்.
ராமாவின் முழுஉடலும் ஓம் - ல் மூழ்கிதிளைத்திருந்தது. அது சர்வ வல்லமை மற்றும் எங்கும் விரவியதன்மையை தவிர்த்தோ , கடந்தோ, வேறொன்றுமில்லை. சத்தியத்தை தன்னுளிருந்து வெளிக்கொணர அவர் மேற்கொண்ட போராட்டங்கள் , சந்தித்த தொல்லைகள் மிக அதிகம். வெறும் கால்களோடு ஹிமாலயத்தின் பனிச்சிகரங்களில் பயணிப்பதை அவர் மகிழ்ச்சியோடு மேற்கொண்டார், அல்லது மக்கள் அஞ்சும் புலிகள், பாம்புகள் மற்றும் பிற அச்சுறுத்தும் விலங்குகள் வசிக்கும் குகைகளில் அவர் வசித்தார்.
ராமா அவரது குறுகிய 33 ஆண்டுகால வாழ்நாளில் பலவற்றை பெருமளவில் செய்தவர். ஆதி சங்கராச்சாரியார், கிறிஸ்து, சந்த் ஞானேஸ்வர் அல்லது சுவாமி விவேகானந்தர் போன்ற சிலரையே நாம் மேற்கோள் காட்டமுடியும். வேறொருவரை ராமாவோடு ஒப்பிட முடியாது. அது பயனற்றதுமாகும்.
அனைவரும் ராமாவே, ஓம்.
பகவான் ஸ்வரூப்
செயலாளர்
சுவாமி ராமதீர்த்தா பிரதிஷ்டான்.
உள்ளே மகிழ்ச்சி
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவின் அகாடமி ஆஃப் சயின்ஸ் – ல் டிசம்பர் 17, 1902 ல் ஆற்றப்பட்ட விரிவுரை.
எனது சுயத்தின் வடிவமாயிருக்கும் பெண்மணி மற்றும் கனவான்களே,
ராமா ஐரோப்பியர்களையோ அல்லது கிறிஸ்துவ நாடுகளையோ அவர்களது கூட்டாளிகள் மற்றும் படைகளையோ பிற நாடுகளை கைப்பற்றுவதன் காரணமாக குறை கூறவில்லை; ஒரு நாட்டின் ஆன்மீக வளர்ச்சியில் அதுவும் ஒரு நிலையே, அது ஒரு காலத்தில் அவசியமானதுமாகும். இந்தியா அந்த நிலையை கடந்து விட்டது; ஆனால் இந்தியா உலகநாடுகளால் விரும்பப்படுவதாகவும், மிகவும் பழமையானதாகவும் அறியப்பட்டுள்ளது. அதனையே இந்த வளமையான, பணக்கார நாடுகளும் உணர்ந்துவருகின்றன. ஏன் இந்த கூட்டாளி நாடுகள் அனைத்தும் பிற நாடுகளை கைப்பற்ற நினைக்கின்றன ? அந்த நாடுகளில் இருந்து எதனை அவர்கள் தேடுகின்றனர் ? ஒன்றே ஒன்றுதான் அது மகிழ்ச்சி, ஆனந்தம், இன்பம். இது உண்மையாக இருப்பினும் சில மக்கள் தாங்கள் மகிழ்ச்சியை தேடவில்லை ஆனால் அறிவை தேடுகிறோம் என்கிறார்கள். மற்றும் சிலர் தாங்கள் தேடுவது மகிழ்ச்சியை அல்ல செயலை என்கிறார்கள். அவையனைத்தும் நன்றே ஆனால் சராசரி மனிதர்கள் மற்றும் சாதாரண மனிதர்களின் இதயத்தையும், மனதினையும் ஆய்வு செய்கையில் அவர்களின் முன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அறிந்தோ அல்லது அறியாமலோ அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட இறுதி இலக்கான தேடல் மகிழ்ச்சியே. மகிழ்ச்சியைத் தவிர்த்து வேறொன்றுமில்லை.
இந்த மாலையில் எங்கே மகிழ்ச்சி வசிக்கிறது என்று நாம் ஆய்வு செய்வோமா ? மகிழ்ச்சி அரண்மனையில் வசிக்கிறதா அல்லது குடிசையில் இருக்கிறதா ? மகிழ்ச்சி பெண்களின் அழகில் உள்ளதா அல்லது நாம் வாங்கும் தங்கம் அல்லது வெள்ளியில் உள்ளதா ? மகிழ்ச்சியின் பூர்வீக இல்லம் எங்கே உள்ளது ? மகிழ்ச்சிக்கே ஒரு சுய வரலாறு உண்டு. இன்றைய நாட்கள் பெரும் பயண நாட்களை கொண்டவை, நீராவியும், மின்சாரமும் கால நேரத்தை நிர்மூலமாக்கிவிட்டது. அனைவரும் அவரவர் பயணம் குறித்து எழுதுகின்றனர். மகிழ்ச்சியும் உடன் பயணிக்கிறது. பயணங்களின் மூலம் நாம் அனைவரும் மகிழ்ச்சியை பெறுகிறோம்.
நாம் நமது குழந்தைப் பருவத்தின் போது மகிழ்ச்சியின் முதல் தரிசனத்தை பெறுகிறோம். குழந்தையின் அனைத்து மகிழ்ச்சியும் அதற்கு மிகவும் நெருக்கமான அன்னையின் அரவணைப்பிலோ அல்லது அவளின் மார்பகத்திலோ இருக்கிறது. மகிழ்ச்சியுடன் மனிதன் பயணிக்கும் முக்கிய பாதையின் முதல் நிலை இதுவாகும். அன்னையின் மார்பக முந்தானையில் இருந்தே மகிழ்ச்சியின் பயணம் துவங்குகிறது. ஒரு குழந்தைக்கு அதன் அன்னையின் மார்பகத்தைவிட மகிழ்ச்சித்தரும் இடம் வேறொன்றுமில்லை. குழந்தையானது அதன் அன்னையின் மார்பகத்தின் முந்தானையின் உள்ளே ஒளிந்துக்கொண்டு அக்குழந்தை, “ பார், பார் ! நான் எங்கிருக்கிறேன் என்று கண்டுபிடி “ என்று கூறுகிறது. அக்குழந்தையின் இதயமும், ஆன்மாவும் கலந்தே சிரிக்கிறது. அந்த குழந்தைக்கு புத்தகங்கள் வெறும் பொருளற்றவை, பெரும் புதையல்கள் அதற்கு பயனற்றவை. பழம் மற்றும் இனிப்புக்கள் பாலுட்டப்படும் குழந்தைக்கும் எந்த சுவையையும் தருவதுமில்லை. அந்த குழந்தையின் மொத்த உலக இன்பமும் முழுமையாக இருப்பது அன்னையின் மார்பகத்திலேயாகும்.
ஒருவருடம் கழிந்தவுடன் அந்தக்குழந்தையின் சந்தோஷம் அதன் மையத்தை மாற்றிக்கொள்கிறது. அது வேறொன்றில் மாற்றமடைகிறது. இப்பொழுது அதன் மகிழ்ச்சியின் வசிப்பிடம் அழகான பொம்மைகளாக இருக்கிறது. இந்த இரண்டாம் நிலையில் , குழந்தை அதன் பொம்மைகளை விரும்பும் அளவிற்குகூட தன் அன்னையை விரும்புவதில்லை. சிலசமயம் தனது பொம்மைகளுக்காக குழந்தையானது தனது அன்னையிடமும் சண்டையிடுகிறது.
சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அதன் மகிழ்ச்சி பொம்மைகளிலோ, விளையாட்டு பொருட்களிலோ இருப்பதில்லை. அந்த மகிழ்ச்சி அதன் மையத்தை மீண்டும் மாற்றிக்கொள்கிறது. நீண்டகாலம் இந்த பொருட்களில் மகிழ்ச்சி இருப்பதில்லை. மூன்றாம் நிலையில் குழந்தை சிறுவனாக வளர்கையில் அவனது மகிழ்ச்சி புத்தகத்தில் வசிக்கிறது. அதிலும் குறிப்பாக கதை புத்தகங்களில் இருக்கிறது. ஒரு புத்திசாலித்தனமான சாதாரண குழந்தைகளிடம் சில சமயங்களில் மகிழ்ச்சியானது வேறேதாவதொன்றில் இருக்கலாம். இப்பொழுது கதை புத்தகங்களே குழந்தையின் அனைத்து அன்பையும் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி என்பது தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
பள்ளிச்சிறுவன் கல்லூரிக்குள் நுழைகையில், அவனது மகிழ்ச்சி வேறொன்றில் காணப்படுகிறது. அறிவியல் புத்தகத்திலோ அல்லது தத்துவ புத்தகங்களிலோ அல்லது பிற விருப்பங்களிலோ பயணிக்கிறது. அவன் அவைகளை சிலகாலம் படிக்கிறான். ஆனால் , அவனது மகிழ்ச்சியோ புத்தகங்களில் இருந்து பயணித்து பல்கலைகழக விருது மற்றும் மரியாதைகள் பெறுவதற்கு ஏங்குகிறது. அவனது ஆசை அவனது மகிழ்ச்சியின் தலைமையகமான இருப்பிடத்தை அடைகிறது. அந்த மாணவன் பல்கலைகழகத்தை விட்டு பல வண்ணங்களுடன் வெளிவருகின்றான். பின்னர் அவன் கவர்ச்சிகரமான ஒரு வேலையை பெற்றவுடன் அந்த இளைஞனின் மகிழ்ச்சியானது பணத்தையும், செல்வந்தனாக ஆவதையும் மையமாக கொண்டதாக இருக்கிறது. அவன் பெரிய மனிதனாக மாறி பெரும் அதிர்ஷ்டங்களை குவிக்க விரும்புகிறான். சில ஆண்டுகளுக்கு ஒரு பணிபுரிந்து ஓரளவு பணம் சேர்த்தப்பின் அவனது மகிழ்ச்சியானது வேறேதோ ஒன்றுக்கு சென்று விடுகிறது. என்ன அது ? அதை சொல்லவும் வேண்டுமா ? அது பெண்.
இப்பொழுது அந்த இளைஞன் தனக்கொரு மனைவி வேண்டும் என விரும்புகிறான். மனைவிக்காக அவன் தனது செல்வத்தை செலவிடவும் தயாராக இருக்கிறான். அன்னையின் முந்தானை அவனுக்கு மகிழ்ச்சியை நீண்ட காலம் தரவில்லை, பொம்மைகள் எந்த வசீகரத்தையும் தரவில்லை, கதைப்புத்தகங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அவனது வாழ்வின் கனவு பெண் மட்டுமே. அவன் தனது செல்வங்கள் அனைத்தையும் பெண் தரும் மகிழ்ச்சிக்காக தியாகம் செய்யவும் தயாராகவே இருந்தான். அவளே இப்போது அவனுக்கு மகிழ்ச்சியின் தலைமையகமாக இருந்தாள். அவனது மனைவி குறித்த எண்ணங்களே அவனுக்கு இன்பத்தை தருவித்தன. இந்தியாவில் சாதாரண இளைஞனின் சந்தோஷமானது இப்பொழுது பெண்ணில் இருந்து பிறக்க இருக்கும் குழந்தைக்கு சென்றுவிடுகிறது. இப்பொழுது குழந்தையே அவனது வாழ்வின் கனவாகி விடுகிறது. அவன் ஒரு அழகு தேவதையோ, ஒரு தேவ தூதன் போன்ற இளவரசனோ தனது இல்லம் வரவேண்டுமென விரும்புகிறான். இந்த நாட்டின் விவகாரங்கள் அதிகமாக இந்த ராமாவிற்கு தெரியாது. ஆனால் இந்தியாவிலோ, திருமணத்திற்குப்பின் மக்கள் கடவுளிடம் குழந்தைக்காக ஏங்கி பிரார்த்தனைகள் புரிவார்கள். அவர்கள் தங்களின் அனைத்து சக்திகளையும் மருத்துவ உதவியை பெறவும், புனிதமான மகான்களை வழிப்பட்டு அவர்களின் ஆசியை பெறவும் செலவழிப்பார்கள். ஒரு குழந்தையை பெறுவதற்கான செயல்கள் அனைத்தையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.
தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இளைஞனின் மகிழ்ச்சி அனைத்தும் அதனைச் சார்ந்தே இருக்கிறது. அந்த குழந்தையின் மகிழ்ச்சி குறித்த பயணத்தில் இது ஆறாம் நிலை. அந்த இளைஞனுக்கும் இப்போது குழந்தை வரம் ஆசிர்வதிக்கப்பட்டு விடுகிறது. அவனது மகிழ்ச்சி எல்லையற்றதாக இருக்கிறது. அவன் மிகுந்த ஊக்கம் கொண்டு , ஆனந்த பரவசமாக இருக்கிறான். அவனது கால்கள் பூமியில் படாமல் நடப்பதைப்போன்ற உணர்வை பெறுகிறான். அவன் காற்றில் பறக்கிறான். அவனது ஆன்மா அவன் குழந்தையை பெற்றப்போது பெரும் மகிழ்ச்சியை அடைகிறது. இந்த ஆறாவது நிலையில், குழந்தையின் சந்திரனைப்போன்று பளிச்சிடும் முகத்தினைப் பார்க்கையில் அந்த இளைஞன் நிறைவெய்திய நிலையை அடைகிறான். குழந்தையின் முகத்தைப் பார்க்கையில் சாதாரண மனிதனின் மகிழ்ச்சியானது அதன் உச்சியை அடைகிறது. அதன்பின் அந்த இளைஞனின் ஆன்மாவானது வீழ்ச்சியடையத் துவங்குகிறது. அவனின் குழந்தையானது வளரத்துவங்குகையில் அதன் மீதான வசீகரமும் காணாமல் போகிறது. மனிதனின் மகிழ்ச்சியானது ஒவ்வொரு பொருளாக பயணப்பட்டவண்ணம் இருக்கிறது. சிலசமயம் ஒன்றில் இருக்கும் அந்த மகிழ்ச்சி இன்னொரு சமயம் வேறொன்றில் இருக்கிறது. ஆனால் மனிதனின் மகிழ்ச்சியின் தீவிரமானது அவனது சொந்தக் குழந்தையின் மீது இருப்பதைப்போல் வேறொரு பொருளில் இருப்பதில்லை.
இப்பொழுது நாம் உண்மையில் மகிழ்ச்சி என்பது இவ்விதம் வெவ்வேறு பொருள்களான அன்னையின் முந்தானை, பொம்மைகள், புத்தகம், செல்வம், பெண், குழந்தை அல்லது இவ்வுலகத்தில் உள்ள வேறேதேனும் பொருள்களில் உள்ளதா என்பதை நாம் ஆராய்வோம். மேலும் இதனை தொடரும் முன், மகிழ்ச்சியின் பயணத்தை சூரிய ஒளியின் பயணத்தோடு ஒப்பிடுவோம். சூரிய ஒளியும் இடம் விட்டு இடம் பயணம் செய்யும். இந்தியாவில் ஒளிரும் சூரிய ஒளியின் நேரம் வேறு, ஐரோப்பிய நாடுகளில் ஒளிரும் சூரிய ஒளியின் நேரம் வேறு. அது பயணப்படுகிறது. மாலையின் நிழலானது விழுகையில், சூரிய ஒளி எவ்வளவு வேகமாக இடம் விட்டு இடம் பயணிக்கிறது. சூரிய ஒளி கிழக்கு அமெரிக்காவில் ஒளிர்ந்து மேற்கு நோக்கி பயணிக்கிறது. எப்படி சூரிய ஒளி தயாராக நிலம் விட்டு நிலத்திற்கு தாண்டுகிறது என்பதைப் பாருங்கள். பின்னர் அது தனது பிரகாசத்தை ஜப்பானில் பரப்பி தொடர்ந்து பயணிக்கிறது. வெவ்வேறு இடங்களில் சூரிய ஒளி காணப்பட்டாலும் அதன் மூலத்தை அவ்விடங்கள் கண்டதில்லை. அதாவது சூரிய ஒளியின் இல்லத்தை கண்டதில்லை. சூரிய ஒளியின் இல்லம் என்ற மூலம் ஒன்று எங்கேனும் இருக்க வேண்டுமல்லவா ? அதன் இல்லமே சூரியன். அதேப்போல் நாம் மகிழ்ச்சியையும் ஆய்வு செய்வோம், அதுவும் பொருளைவிட்டு பொருளுக்கு சூரிய ஒளியைப்போல் பயணிக்கிறது. எங்கிருந்து அது துவங்குகிறது ? அதன் உண்மையான இல்லம் எது ? மகிழ்ச்சியின் சூரியன் எது என்பதை நாம் பார்ப்போம்.
குழந்தைப்பேற்றினால் ஆசிர்வதிக்கப்பட்ட கனவானின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். அந்த கனவான் தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு தனது அலுவலகப் பணியினை மும்முரமாக செய்து கொண்டு இருக்கையில் திடீரென அவர் ஒரு மணியோசையை கேட்கிறார். என்ன மணி ? அது ஒரு தொலைபேசியின் அழைப்பு, அதில் அவர் சேதியை கேட்பதற்கு முன்பே அவரது இதயம் துடிக்கத் துவங்கிவிடுகிறது. இயற்கைசீற்றம் வரும் முன்னரே அதன் கோரநிழலானது வருவதைப்போல், அவரது இதயம் துடிக்கத்துவங்கியது, இதற்குமுன் இதுபோன்ற உணர்விற்கு அவர் ஆட்பட்டதில்லை. அவர் டெலிபோனை அடைந்து அந்த சேதியை கேட்டார். ஓ, என்ன ஒரு துன்பம் அளிக்கும் சேதி அது, அந்த கனவான் வருத்தத்தோடு தனது இருக்கைக்கு வந்து தனது கோட் மற்றும் தொப்பியை அணிந்து கொண்டு, துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் தோட்டாவைப் போல கிளம்பினார். அவர் தனது மனதை இழந்தார் , அவரது கன்னங்கள் வண்ணங்களை இழந்து வெளிறியிருந்தன. அவர் தனது மேலதிகாரியிடம் கூட எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரது மேசையின் மீதிருந்த காகிதங்களைக் கூட அவர் எடுத்து வைக்கவில்லை. அவரது சக பணியாளர்களிடமும் அவர் எதுவும் பேசாமல் கிளம்பினார். அவருடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் திகைத்து போயினர். அவர் தெருவினை அடைந்து அங்கே ஒரு கார் விரைந்து செல்வதைக் கண்டார். அவர் அந்த கார் அருகே ஓடிச் சென்றார் அங்கே அவர் ஒரு போஸ்ட்மேனை சந்தித்தார். அந்த போஸ்ட்மேன் அவரிடம் கடிதம் ஒன்றை தந்தார். அந்த கடிதம் அவருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்திருந்தது. ( இந்த உலகியலின் பார்வையில் அது மகிழ்வான செய்தி ) அந்த மகிழ்ச்சியான சேதி அவருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்திருந்தது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு $ 10,000 ( டாலர் ) பரிசு விழுந்திருந்தது. அந்த பரிசு செய்தி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர் துள்ளி குதித்து கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அந்த பரிசு சேதி எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. ஏனெனில் டெலிபோனில் அவர் கேட்ட சேதி அவரது இதயத்தை கனக்க செய்திருந்தது. அவர் பயணம் செய்த அதே காரில் அந்த மாநிலத்தின் உயர் அதிகாரியும் அவரது எதிரே அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த அதிகாரியை நேர்காணல் காண்பதே ஒரு காலத்தில் அவனது வாழ்வின் ஒரு கனவாக இருந்தது. ஆனால் இப்பொழுது பாருங்கள், அந்த கனவான் ஒரு பார்வையைக்கூட அந்த அதிகாரியிடம் பகிர்ந்துகொள்ளாமல் அவரது தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். அந்த கனவான் அங்கே தனது பெண் நண்பர் ஒருவரின் முகத்தையும் அதே காரில் சந்தித்தார். அந்த கனவானுக்கு அந்த பெண்ணிடம் சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்பதும் வாழ்நாள் லட்சியமாக இருந்தது. ஆனால் அவரால் இப்பொழுது ஒரு புன்னகையைக் கூட சிந்த இயலவில்லை. சரி, ராமா மிக நீண்ட நேரம் இது குறித்து வேறெந்த பீடிகையையும் போட விரும்பவில்லை. மேலும் இது குறித்த மர்மத்தையும் ராமா நீட்டிக்க விரும்பவில்லை.
அவர் தனது இல்லம் இருக்கும் தெருவை அடைந்தார் அங்கே பெரும் இரைச்சலும், கொந்தளிப்பும் காணப்பட்டது. அங்கே அவர் புகைமண்டலம் கிளம்பி ஆகாயத்தையும் சூரியனையும் மறைப்பதைக் கண்டார். தீயின் கோரமான நாக்குகள் சொர்க்கம் வரை உயர்வதைக் கண்டார், தனது மனைவி, பாட்டி, அன்னை மற்றும் பிற உறவினர்கள் அங்கே துக்கத்தோடு அழுதவாறு , பெருந்தீயானது அவர்களது இல்லங்களை ஆவலோடு நுகர்வதைக் கண்டவாறு இருந்தனர். அவர் தனது அனைத்து உறவினர்களையும் அங்கே கண்டபோதும் அவனது சிறிய மகன் அங்கே காணாமல் இருந்ததைக் கண்டான். அங்கே அவர்கள் தனது இனிய சின்னஞ்சிறிய சிறுவனை தவறவிட்டிருப்பதை அறிந்தான். அவன் தனது மனைவியிடம் பிள்ளையைப் பற்றி கேட்டான். அவள் வருத்தத்தோடு, அழுதாள் ஆனால் அவள் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் , தனது குழந்தையை வீட்டில் அவர்கள் விட்டுவிட்டு வந்துவிட்டனர் என்ற உண்மையை கண்டறிந்தார். தீப்பிடித்த சமயத்தில் குழந்தை ஒரு செவிலித்தாய் உடன் இருந்திருக்கிறான். அவள் குழந்தையை தொட்டிலில் கிடத்தியிருக்கிறாள். குழந்தை ஆழ்ந்து தூங்கும்போது அந்த செவிலித்தாயும் அந்த அறையை விட்டு வெளியே வந்திருக்கிறாள். தீப்பிடித்த தகவல் அறிந்தவுடன் அனைவரும் குழந்தையானது தனது குடும்பத்தின் வேறொரு உறுப்பினரோடு இருக்கும் என்ற நினைப்பில் பதட்டத்தோடு அனைவரும் குழந்தையை விட்டுவிட்டு தப்பித்து வெளியேறி வந்தபின்னரே குழந்தை அறையில் இருப்பதை உணர்ந்தனர். பலர் உதட்டை கடித்துக் கொண்டும், பற்களைக் கடித்துக்கொண்டும், மார்பிலடித்துக் கொண்டும் அழுதவாறே இருந்தனர். அவர், அவரின் மனைவி, தாயார், பாட்டி மற்றும் செவிலித்தாய் போன்றோர் காவல் அதிகாரியிடம் அழுதவாறே தங்கள் அன்புக்குழந்தையை காக்குமாறு கூறினர். “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள். நாங்கள் எங்களது அனைத்து செல்வங்களையும் தங்களுக்கு தருகிறோம். அவைகளை இன்றிலிருந்து அடுத்த பத்து வருடங்களுக்குள் சேர்த்து விடுவோம். நாங்கள் அனைத்தையும் தருகிறோம், எங்கள் குழந்தையைக் காப்பாற்றுங்கள். எங்கள் குழந்தையைக் காப்பாற்றுங்கள். எங்கள் குழந்தையைக் காப்பாற்றுங்கள்.”
அவர்கள் தங்களின் குழந்தைக்காக அனைத்தையும் தர தயாராக இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு அந்த சிறிய குழந்தை ஒரு இனிய விஷயம். அதற்காக தங்களது வளங்களை விட்டுத்தருவதும் , தியாகம் செய்வதும் பலனுள்ள செயலாகும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் ராமா இங்கே ஒன்றைக் கேட்க விரும்புகிறான், “ இந்த குழந்தைதான் மகிழ்ச்சியின் மூலமா, இந்த உலகின் இனிப்பான விஷயமா, அல்லது வேறெங்கேனும் இது மகிழ்ச்சியின் மூலமா ?” இங்கே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் குழந்தைக்காக தியாகம் செய்யப்படுகிறது , ஆனால் குழந்தை அதைவிட உயர்ந்த ஒன்றுக்காக தியாகம் செய்யப்படுமா ? செல்வம், செழிப்பு அனைத்தும் குழந்தைக்காக விட்டுத்தரப்படுகிறது ஆனால் குழந்தையானது அதைவிட உயரிய ஒன்றிற்காக விட்டுத்தரப்படுமா ? ஆனால் உண்மையில் மகிழ்ச்சியின் மையம் எது ? சிறிது பாருங்கள். அவர்கள் யாரும் தீயில் குதித்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் துணிகர முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் அந்த சிறிய இனிய குழந்தை எதற்காகவோ தியாகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில் வேறேதோ ஒன்று உண்மையான மகிழ்ச்சியின் மையமாக இருக்கிறது. அந்த ஏதோவொன்று என்ன ? சிறிது பாருங்கள். அவர்கள் நெருப்பில் குதிக்கவில்லை, அப்படியெனில் அந்த ஏதோவொன்று என்பது சுயம் ஆகும். அவர்கள் நெருப்பில் குதித்திருந்தால் அவர்கள் தங்களை தியாகம் செய்த நிகழ்வாக அது இருந்திருக்கும். ஆனால் அவர்கள் தாங்கள் நெருப்பில் குதித்து தியாகம் செய்ய விரும்பவில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. ஆனால் குழந்தையின் வாழ்விலோ அனைத்தும் தியாகம் செய்யப்பட்டுவிட்டது, அந்தக் குழந்தையின் சுயமும் தியாகம் செய்யப்பட்டுவிட்டது.
இப்பொழுது நாம் மகிழ்ச்சியின் உயர்நிலையை பார்ப்போம். குழந்தை அழகாகவும், அன்பாகவும் அதன் மகிழ்ச்சியின் மூலமாக இருக்கிறது. ஏனெனில், அந்தக்குழந்தை சுயத்தில் இருந்து பிரகாசிக்கும் சூரிய ஒளியினால் ஆசிர்வதிக்கப்படுகிறது. மகிழ்ச்சியின் சூரிய ஒளி இயல்பாகவே குழந்தையிடம் உள்ளார்ந்து இருக்கிறது, அது எப்போதும் குழந்தையிடம் நீடித்திருக்கும். அந்த உள்ளிக்கும் சூரிய ஒளியே குழந்தையின் முகத்தை பிரகாசமாக வைக்கிறது. அந்தமூலம் சுயத்தின் உள்ளிருப்பதாகும்.
இங்கே நாம் மகிழ்ச்சியின் மூலத்திற்கு சற்று அருகே வந்திருக்கிறோம். குழந்தை தேவை என்பதற்காக குழந்தையின் அருகே வரவில்லை, சுயத்திற்கு நெருக்கமானது குழந்தை என்பதால் வருகிறோம். மனைவிக்கு விருப்பமானது குழந்தை என்பதால் அல்ல, கணவனுக்கு விருப்பமானது குழந்தை என்பதால் அல்ல, சுயத்திற்கு நெருக்கமானது என்பதால் மட்டுமே. இதுவே உண்மை. மக்கள் பொருட்களை தங்களின் சுய விருப்பத்திற்காகவே நேசிப்பதாக கூறுவார்கள். ஆனால் அவ்விதம் இருக்க இயலாது. செல்வத்தின் தேவைக்காக செல்வத்தை நேசிக்காமல், சுயத்திற்காக செல்வத்தை நேசிக்க வேண்டும். கணவனோ, மனைவியோ பரஸ்பரம் ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்தாலும், பரஸ்பரம் அடுத்தவருடைய ஆவல்களை பரஸ்பரம் விவாகரத்து செய்தபிறகு பூர்த்தி செய்வதில்லை. பணம் தன் நோக்கங்களுக்கு சேவை செய்யவில்லையெனில் அந்த செல்வம் கைவிடப்படுகிறது. நீங்கள் நீரோ மன்னன் பற்றி அறிந்திருப்பீர்கள் , அவன் ரோம் நகரத்தின் அழகை கண்டதில்லை, அவனது விருப்பம் பெருந்தீயை காணல், கவனியுங்கள், நீரோ அருகே இருக்கும் மலைக்குச் சென்று தனது நண்பர்களிடம் மொத்த நகரத்திற்கும் தீயிடுமாறு கூறினான். ஏனெனில் அவன் பெருந்தீயை ரசிக்க விரும்பினான். ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கையில் அவன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான். அதேப்போல் செல்வமானது நமது ஆவல்களை பூர்த்தி செய்யாதபோது அது கைவிடப்படவேண்டும்.
ராமா பல அரிய நிகழ்வுகள், ஆர்வத்தூண்டும் நிகழ்வுகளையும் நேரில் பார்த்த சாட்சியம். ஒருமுறை கங்கையாற்றில் பெரும் வெள்ளம் வந்து ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு மரத்தின் கிளைகளில் பல குரங்குகள் அமர்ந்திருந்தன. அங்கே சில பெண் குரங்குகளும் அதன் குட்டிகளும் இருந்தன. அனைத்து குட்டிகளும் அந்த பெண் குரங்கிடம் வந்தன. நீரின் மட்டம் அந்த பெண் குரங்கு இருக்கும் இடத்திலும் உயரத்துவங்கியது. அந்த பெண் குரங்கு சற்றே உயரமான கிளைக்கு தாவியது. அந்த உயரத்திற்கும் நீரின் மட்டம் உயர்ந்தது. அந்த பெண் குரங்கு மீண்டும் உயரமான கிளைக்கு தாவியது. அனைத்து குட்டிகளும் அம்மாவின் உடலை இறுக பற்றியிருந்தன. நீரின் மட்டம் தாய் குரங்கின் கால்களை தொட்டது, அப்போதும் அந்த தாய்குரங்கு தனது குழந்தையான ஒரு குட்டியை பிடித்துக்கொண்டது. இன்னொரு குட்டியை தனது கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது. நீரின் மட்டம் மேலும் உயர்ந்தது. மூன்றாவது குட்டியை கருணையின்றி எடுத்து தனது கால்களுக்கிடையே வைத்துக்கொண்டு அந்த தாய்குரங்கு தன்னை பாதுக்காத்துக்கொள்ள முயன்றது. இதைப்போலவே , மக்களும் தங்கள் நெருக்கமானவர்களும், விருப்பமானவர்களும் தங்கள் ஆவல்களுக்கு சேவை செய்யும் வரையிலும், தனது நோக்கங்களுக்கு உதவும் வரையிலேயே நம்மை வைத்திருப்பர். அவரவர் ஆவலாதிகள் ஆட்டம் காண்கையில் நாம் அனைத்தையும் தியாகம் செய்கிறோம்.
எனவே நாம் இறுதியாக, மகிழ்ச்சியின் இருக்கை, மகிழ்ச்சியின் மூலம் நமது சுயத்தின் உள்ளே எங்கோ இருக்கிறது என்ற முடிவிற்கு வரலாம். மகிழ்ச்சியின் இல்லம் சுயத்தில் எங்கோ இருக்கிறது, ஆனால் எங்கே அது இருக்கிறது ? அது கால்களில் இருக்கிறதா ? கால்களே மொத்த உடலையும் தாங்கும் ஆதாரமாக இருக்கிறது, எனவே அது கால்களில் இருக்கக்கூடும்.ஆனால் அது கால்களில் இல்லை. அப்படி கால்களில் இருந்திருப்பின் அதுவே இந்த உலகத்தில் அனைவருக்கும் நெருக்கமானதாக இருந்திருக்கும். இருப்பினும் , கால்கள் வெளியில் இருப்பவைகளில் நெருக்கமானது, ஆயினும் அது கைகளைப்போல் நெருக்கமானதல்ல. ஆனால் அதுவும் மகிழ்ச்சியின் இல்லம் அல்ல. அடுத்தாற்போல், மகிழ்ச்சியின் இல்லம் மூக்கு அல்லது கண்களாகவோ இருக்குமோ ? கரங்களைவிட கண்களும், மூக்கும் நமக்கு நெருக்கமானவையே ஆனாலும் அவைகளும் மகிழ்ச்சியின் இல்லங்கள் அல்ல. யோசியுங்கள், கண்களைவிட நெருக்கமானது என ஏதேனும் உண்டா என்று வினவினால், நீங்கள் அது வாழ்க்கை என்று சொல்லக்கூடும். ராமா கூறுகிறான் முதலில் மொத்த உடலையும் எடுத்துக்கொள்ளுங்கள், மொத்த உடலும் மகிழ்ச்சியின் இல்லம் அல்ல. நாம் இந்த உடல் ஒவ்வொரு கணமும் மாறுதலுக்கு ஆட்படுகிறது. பல்லாண்டுகளாக , இந்த உடலின் ஒவ்வொரு துகளும் ஒரு புதிய துகளினால் மாற்றப்பட்டுள்ளது. அது மூளை, மனதில் உள்ள அறிவாற்றலாக இருக்கலாம். அங்கும் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால் அறிவாற்றலைவிட வேறெதாவது நமக்கு இனிப்பானதும், நெருக்கமானதாகவும் இருக்கிறதா என ஆராய்வோம். நாம் வாழ்க்கை என்று சொல்வதை ஹிந்துக்கள் பிராணா என்று கூறுகின்றனர் அது மகிழ்ச்சியின் மூலமா ? ஆனால் பலர் தங்கள் வாழ்வில் பகுத்தறிவு சக்தியை தியாகம் செய்தும் வாழ்கின்றனர். இங்கே இரண்டு சாத்தியங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று அனைவரும் சாதல் அல்லது பைத்தியகாரனாக வாழ்தல். அனைவரும் வாழ்க்கையின் மாற்றுவழிகளையே பைத்தியமாக இருக்கும் நிலையிலும் தேர்ந்தெடுக்கின்றனர். அறிவாற்றல் என்பது நமது வாழ்க்கை எனும் பலிபீடத்தில் தியாகமாக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது. எனவே வாழ்க்கை என்பதில் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மகிழ்ச்சியின் இல்லமாக இருக்கலாம், அந்த சூரியனிலிருந்தே அனைத்து மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது. உண்மையில் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியின் இல்லமா ? இல்லையா ? என்பதை ஆராய்வோம். வேதாந்தம் கூறுகிறது, இல்லை ! இல்லை ! வாழ்க்கை என்பதும் மகிழ்ச்சியின் இல்லம் அல்ல என்கிறது, உள்ளிருக்கும் சொர்க்கம் இன்னமும் உயரத்தில் இருக்கும் ஒன்று, தனிப்பட்டவரையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் கடந்த அது எங்கே ?.
ராமா ஒருமுறை இளைஞன் ஒருவனை அவனுடைய மரணத்தருவாயில் கண்டான். அவன் மிகவும் கொடூரமான நோயால் பீடிக்கப்பட்டிருந்தான். அவனது உடலில் மிகவும் துன்புறுத்துகின்ற வலியானது இருந்தது. அந்த வலி அவனது கால்விரல்களில் துவங்கியது. ஆரம்பத்தில் அது பெரிதாக இல்லை, ஆனால் பின்னர் அது மெல்ல பரவத்துவங்கி அவரது உடல் வெறித்தனமான அசைவுகளை வெளிப்படுத்தியது. மெல்ல அந்த வலி முழங்கால்கள் வரை வந்து பின்னர் மேலும் உயர்ந்து , அந்த கடுமையான வலி அவனது வயிற்றை அடைந்தது, அந்த வலி இதயத்தை அடைந்தபோது அந்த மனிதன் இறந்து போனான். அந்த இளைஞன் உச்சரித்த கடைசி வார்த்தைகள் , “ ஓ ! எப்போது என் வாழ்க்கை என்னை விட்டு செல்லும், எப்போது எனது பிராணன் என்னை விட்டு போகும்!” இவையே அந்த இளைஞனின் வார்த்தைகள். இந்த நாட்டில் நீங்கள் சாத்தானிடத்தில் அவன் தன்னைக் கொடுத்துவிட்டான் என்பீர்கள். இந்தியாவில் நாங்கள் அவன் உடலை விட்டுவிட்டான் என்போம். இதுவே பெரும். வேறுபாட்டைக் காட்டும். இங்கே உடல் என்பது சுயமாகவும், சாத்தான் என்பது ஏதோ அதோடு இணைக்கப்பட்டதாகவும் பார்க்கிறீர்கள். இந்தியாவிலோ உடல் என்பது ஆன்மாவிற்கு ஒரு புற வஸ்து, சுயம் என்பது உண்மையாகவும் பார்க்கப்படுகிறது. இங்கே , உடல் மரிக்கையில் , யாரும் அவன் மரித்துவிட்டதாக நம்புவதில்லை, உடல் மாறுபாட்டை அடைகிறது , அவன் அழிவதில்லை. அதனாலேயே அந்த இளைஞனின் உதடுகள், “ ஓ ! எப்போது என் வாழ்க்கை என்னை விட்டு செல்லும், எப்போது எனது பிராணன் என்னை விட்டு போகும்!”
இங்கே வாழ்க்கையைவிட உயரிய ஒன்றும், பிராணனைவிட உயர்ந்த ஒன்றும் உண்டு, அந்த ஒன்றே “எனது வாழ்க்கை”, “எனது பிராணன்” என்று கூறுகிறது. அது பிராணன் மற்றும் வாழ்க்கையை விட உயரிய ஒன்று, அது தனிப்பட்ட மற்றும் அந்தரங்க வாழ்க்கையைவிட இனிமையானது. அந்த உயரிய சுயத்தின் மீது இந்த உடலோ, பிராணனோ எந்த ஆர்வத்தையும் காட்டுவதில்லை. ஆனால் அந்த பிராணன் மற்றும் வாழ்க்கையை நாம் அனாவசியமாக வீசியெறிகிறோம். இந்த சுயமே வாழ்க்கை மற்றும் பிராணனைவிட இனிமையான “ ஆனந்தம் “ அல்லது மகிழ்ச்சியாகும். அதுவே மகிழ்ச்சியின் மூலம் மற்றும் இன்பமாகும். ஏன் பிராணன் அல்லது வாழ்க்கை அறிவைவிட உயரியதெனில் அது சத்தியமான சுயத்திற்கு அருகாமையில் உள்ளது. ஏன் அறிவு என்பது உங்கள் கண்களைவிட இனிமையானது ? ஏனெனில் அறிவானது கண்களைவிட சத்தியமான சுயத்திற்கு அருகாமையில் உள்ளது. ஏன் அவரவர்களுக்கு தன் குழந்தையானது அடுத்தவர்களின் குழந்தையைவிட அழகானதாக தெரிகிறது ?. வேதாதங்கள் கூறுகையில் , “ ஏனெனில் அந்தக் குறிப்பிட்ட குழந்தையை நீங்கள் “எனது” என்றழைத்து உங்களின் சத்தியமான சுயத்தில் இருந்து சறுக்கிவிடுகிறீர்கள். ஏதேனும் ஒரு புத்தகத்தில் நீங்கள் சுயமாக எழுதிய ஒரு வரியோ, உங்களின் பேனாவின் மூலம் எழுதப்பட்ட ஏதேனும் ஒரு படைப்போ உங்களுக்கு வேறெந்த புத்தங்களைவிட உயரியதாகவே உங்களுக்கு தோன்றுகிறது. அது பிளேட்டோ எழுதிய புத்தகமானாலும் உங்கள் புத்தகமே உங்களுக்கு உயரியது. ஏன் இப்படி ? ஏனெனில் நீங்கள் “ எனது “ என்றழைக்கும் உங்கள் புத்தகத்தில் உங்கள் சத்தியமாக இருக்கும் சுயத்தின் சூரியவொளி அதிலுண்டு. அது சொர்க்கத்தின் சூரியவொளியால் ஆசிர்வதிக்கப்பட்டது. இதனையே ஹிந்து ஆனந்தம் என்கிறான் இதுவே உங்கள் உள்ளிருக்கும் மகிழ்ச்சியின் தலைநகரமாகும். அனைத்து சொர்க்கமும் உங்கள் உள்ளே உள்ளது, இன்பத்தின் மூலமும் உங்கள் உள்ளே உள்ளது. இவ்விதமாக இருக்கையில் மகிழ்ச்சியை வேறெங்கும் தேடுதல் காரணமற்ற ஒன்றாகும்!.
இந்தியாவில் ஒரு காதலர்கள் குறித்த கதையொன்று உண்டு. ஒரு காதலன் தனது காதலிக்காக தனது உடலை வருத்திக்கொண்டு மிகுந்த எலும்பும் தோலுமாக மாறி காணப்பட்டான். இந்த இளைஞனின் நிலையைக்கண்ட சிலர் அவனை அந்த நாட்டின் மன்னர் முன் அவனது காதலியோடு கொண்டுபோய் நிறுத்தினர். அந்த இளைஞனின் காதலியின் அவலட்சணமான முகத்தைக்கண்ட மன்னன், அந்த இளைஞன் முன் தனது அரசவையை அலங்கரிக்கும் பல திருமணமாகாத இளம் பெண்களை நிறுத்திய மன்னன் இவர்களில் யாரையேனும் ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு கூறினார். அந்த இளைஞனோ, “ ஓ ஷா ! ஓ அரசனே ! நீங்கள் உங்களையே முட்டாளாக்கி கொள்ளாதீர்கள். அரசனே ! காதல் ஒரு மனிதனை மிகுந்த குருடனாக்கும் என அறிவாய் அல்லவா ? அரசனான உங்களுக்கு அவளை காண கண்கள் இல்லை. அவளை எனது கண்களின் வழியே பாருங்கள். பின்னர் அவள் அழகியா , அவலட்சணமா என்பதை கூறுங்கள். “ இந்த உலகில் உள்ள அனைத்து வசீகரத்தின் ரகசியமும் இதுதான். அவ்வளவுதான். உலகின் கவர்ச்சிகரமான பொருட்களின் அனைத்து மோகத்தின் ரகசியமும் இதுதான். ஓ மனிதனே ! நீங்கள் பார்க்கும் பார்வையில்தான் அனைத்து பொருட்களையும் கவர்ச்சிகரமானதாக்க இயலும். அத்தகைய பார்வையினாலேயே நீங்கள் உங்கள் வசீகரத்தை அந்த பொருளில் செலுத்தி அதன்மீதான காதலில் வீழ்கிறீர்கள். நாங்கள் கிரேக்க புராணங்களின் எதிரொலியாக இந்தக்கதையை படித்தோம். அவள் தனது சொந்த உருவத்தை நேசித்தாள் எனவே அது அனைத்து வசீகரத்துடனும் காணப்படுகிறது. அது உங்களுக்குள் இருக்கும் சுயத்தின் தோற்றமே ஆகும். உள்ளுக்குள் இருக்கும் சொர்க்கம் ஆகும். அவைகள் உங்கள் நிழலன்றி வேறொன்றுமில்லை. இவ்வாறிருக்க நீங்கள் உங்கள் நிழலையே வேட்டையாடுவது அர்த்தமற்ற ஒன்றாகும்.
தவழுவதற்குக் கற்றுக்கொண்ட அச்சிறுக்குழந்தையை குறித்து இந்த ராமாவிற்கு தெரியும். அந்தக்குழந்தை அதன் நிழலைக் கண்டு அது ஏதோ வித்தியாசமான விஷயம் என்று நினைத்தது. குழந்தை அந்த நிழலின் தலையை பிடிக்க நினைத்து அதனை நோக்கி தவழத்தொடங்கியது. நிழலும் நகரத்துவங்கியது. அந்த நிழலை பிடிக்க இயலாமையால் அந்தக் குழந்தை அழத்துவங்கியது. அந்தக் குழந்தை விழுந்தால் நிழலும் விழுந்தது, எழுந்தால் நிழலும் எழுந்தது. இருப்பினும் அந்தக்குழந்தையின் நிழல்வேட்டை தொடர்ந்தது. இருப்பினும் அந்தக்குழந்தையின் மீது கருணைக்கொண்டு அதன் அன்னை அந்தக்குழந்தையின் தலையை அது பிடித்தால் அதன் நிழலையும் பிடிக்க இயலும் என கற்று தந்தார். சொர்க்கமும், நரகமும் உன்னுள் உள்ளது.வாழ்க்கையின் இன்பத்தின் மூலம் உன்னுள் உள்ளது. கடவுள், இயற்கை மற்றும் தேசங்களின் அனைத்து கடவுளர்களும் உன்னுள் உள்ளது. இந்த உலகத்தின் மக்களே , கேளுங்கள் , கேளுங்கள் பெரும் நகரத்திலும், உலகெங்கிலும் கூரையின் மீதேறி உரத்த குரலில் அறிவிக்கப்படுவதற்கான தகுதி கொண்டது இப்பாடம், நீங்கள் ஒரு பொருளை உணர விரும்பினால், நீங்கள் ஏதேனும் பெற விரும்பினால், நீங்கள் நிழலின் பின்னால் அதற்கான வேட்டையை மேற்கொள்ளாதீர்கள். உங்கள் சொந்த தலையை தொட்டு அதன் உள்ளே செல்லுங்கள். இதனை உணர்ந்து கொண்டால் , நட்சத்திரமும் உங்கள் கைவசமாவதை நீங்கள் உணர்வீர்கள், அனைத்து பொருட்களின் காதலையும் உணர்வீர்கள். உங்களை மயக்கும் மற்றும் கவர்ச்சிகரமான அனைத்தும் உங்கள் சொந்த பிரதிபலிப்பு அல்லது நிழல். அது எத்தனை அர்த்தமற்றதெனில்,
நாம் தொப்பி, மணிக்கூண்டிற்காக நமது வாழ்க்கையை செலவழித்து,
குமிழிகளையே நாம் நமது மொத்த ஆன்மாவின் பணியில் சம்பாதிக்கிறோம்.
இந்தியாவில் இருந்த ஒரு அழகிய பெண் குறித்த கதை ஒன்று உண்டு. அவள் தனது ஊசியை வீட்டில் தொலைத்துவிட்டாள். அவள் தனது வீட்டில் ஒரு விளக்கினை ஏற்றி தேடும் அளவிற்கு கூட வசதியற்றவள். எனவே அவள் தனது வீட்டிற்கு வெளியே வந்து தெருவில் ஊசியை தேடிக்கொண்டிருந்தாள். ஒரு கனவான் அவளிடம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என வினவினார். அவள் அவரிடம் தான் தனது ஊசியை தேடிக்கொண்டிருப்பதாக கூறினாள். அந்த கனவான், “ எங்கே நீ ஊசியை தொலைத்தாய் ? “ என வினவ, அவள் பதிலளிக்கையில், “ எனது வீட்டில் “ என்றாள். அவர் கூறுகையில், “ வீட்டில் தொலைத்த பொருளை வீதியில் தேடுவது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும்!” என்று கேட்க, அவள் தன்னால் ஒரு விளக்கை வீட்டில் ஏற்றி தேடும் அளவிற்கு கூட வசதி இல்லையென்றும் அதனால் தெருவிளக்கின் ஒளியில் தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறினாள்.
இதே வழியில்தான் மக்களும் இருக்கின்றனர். உங்களுக்குள் சொர்க்கம் இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் இன்பங்களை பொருட்களிலும், தெருக்களிலும் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதாவது அதனை வெளியே அதாவது உங்கள் புலன் உணர்வுக்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இது எவ்வளவு விசித்திரமானது!.
இந்தியாவில் இன்னொரு பைத்தியக்கார மனிதனின் கதையொன்றும் உண்டு. அவன் தெருவிற்கு வந்து ஒரு சிறுவனிடம் அந்த நகரத்தின் மேயர் ஒரு ஆடம்பரமான , அரச விருந்தினை தர இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள அனைத்து சிறுவர்களையும் அழைத்திருப்பதாகவும் கூறினார். உங்களுக்கு சிறுவர்களுக்கு இனிப்புகளுக்கும் , சாக்லேட்டுகளுக்கும் விருப்பம் என்று தெரியும்தானே?. சிறுவர்களும் அந்த பைத்தியக்கார மனிதனின் பேச்சைக்கேட்டு அந்த மேயரின் இல்லத்திற்கு சென்றனர். ஆனால் அங்கே எந்தவிதமான விருந்து ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அந்த சிறுவர்கள் அங்கேயே தடுமாறி முகம் வாடினர். அங்கிருந்த அந்தப் பைத்தியக்காரனிடம் ( சிரிப்பு ) அந்த சிறுவர்கள் , “ நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் , உங்களுக்கு எப்போது இந்த விருந்து நிஜமல்ல , கதையென்று தெரியும் ? “ என்று வினவினர். அவர் பதிலளிக்கையில், “ விருந்து உண்மையில் இருந்து, இந்தக்கதை உண்மையாக இருந்து நான் அதனை தவறவிடக்கூடாது.” என்ற காரணத்திற்காக தானும் சிறுவர்களைப் பின்தொடர்ந்தாக அவர் கூறினார்.
இதைப்போலத்தான் தங்கள் கற்பனைகளில் ஏதேனும் ஒன்றினை உருவாக்கி , அதன்மீதுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைத்தின் பின்பும் உங்கள் சொந்த கற்பனைகளின் காரணமாக அந்தப் பைத்தியக்கார மனிதனைப்போல அதன்பின்னால் ஒடி , அதனை தவறவிடக்கூடாதென நினைக்கின்றனர்.
முடிவுரை
சொர்க்கத்தை உங்களுக்குள் உணருங்கள், அதன் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், அனைத்து துன்பங்களும், துயரங்களும் ஒரு முடிவிற்கு வரும்.
வனங்களின் மரங்கள் எனது நெருங்கிய உறவினர்
உயிரோடுள்ள பாறைகளும் என்னுள் துடிக்கின்றன
களிமண் எனது சதை, நரி எனது தோல்
நான் வண்டுகளுக்கு கடுமையானவன், தேனீக்களுக்கோ இனிமையானவன்
மலர்கள் இல்லை, ஆனாலும் எனதன்பு மலரும்
எனது கனவின் சுருதிக்கேற்பவே தண்ணீர் ஓடுகிறது
சூரியன் எனது மலர், அது மேலே தொங்கவிடப்பட்டுள்ளது
நித்தமும் மரணமெனினும் , நான் மரணிக்கமாட்டேன்
என் போர் முன்னும் பின்னும் ஓடும் நெசவு
நான் ஒருபோதும் பிறக்கவில்லை, இன்னமும் நான் மூச்சின் பிறப்பு
உறக்கமில்லா கடலில் நெசவை போன்றது.
சொர்க்கம் உங்களுக்குள் இருக்கிறது., மகிழ்ச்சியை புலன்கள் உணரும் பொருட்களில் தேடாதீர்கள் ; மகிழ்ச்சியை உங்களுக்குள் உணருங்கள்.
ஓம் ! ஓம் !! ஓம் !!!
Great sir. Rama is speaking to us through you. Thank you so much
ReplyDelete