இறையுணர்தலின் வனங்களில் - 3 - வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்ற தன்மை
உ
யோகி ராம்சுரத்குமார்
வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்ற தன்மை
சான் பிரான்சிஸ்கோவின் க்ரேட் கோல்டன் ஹால் – ல்
ஜனவரி 10, 1903 ல் ஆற்றப்பட்ட விரிவுரை.
எல்லையற்ற ஒன்றின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே,
இந்த விஷயத்தை துவங்கும் முன் , நான் இந்த உலகத்தின் அன்பான பார்வையாளர்களிடம் சில வார்த்தைகள் பேசவேண்டும்.
மக்கள் பொதுவாக தங்களின் சொந்த காதுகளின் மூலமாக எதையும் கேட்பதில்லை, மற்றவர்களின் காதுகளின் வழியே மட்டுமே இங்கே அனைத்தும் கேட்கப்படுகிறது. அவர்கள் தங்களின் கண்களின் மூலம் எதையும் காணாமல் நண்பர்களின் கண்களின் வழியே காண்கின்றனர். அவர்கள் தங்கள் சுவைகளையும் தங்களின் சுவை மூலம் அறியாமல் அடுத்தவர்களின் சுவைகளின் மூலமே அறிகின்றனர். இது எவ்வளவு நியாயமற்றது ! இவ்வுலக மனிதர்களே , இனி கேட்பதற்கு உங்களுக்கு சொந்தமான காதுகளைப் பயன்படுத்துங்கள், அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு சொந்தமான கண்களைப் பயன்படுத்துங்கள். உங்களின் கண்களும், காதுகளும் பயன்படுத்துவதற்கேயன்றி வேறெதற்கும் அல்ல.
ஒருநாள் இந்த ராமா ஒரு தெருவின் வழியே சென்றார். ஒரு கனவான் அவரிடம் வந்து கூறுகையில் , “ இந்த உடையை அணிவதன் மூலம் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் ? ஏன் நீங்கள் இதனை அணிந்திருக்கிறீர்கள் ? நீங்கள் ஏன் எங்கள் கவனத்தை ஈர்க்கிறீர்கள் ? “ ராமா புன்னகைத்து சிரித்தார். இந்திய துறவிகளின் உடையை குறித்து நீ மகிழ்ந்தாயெனில் , ராமாவும் உனது மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்திக்கிறான். இந்த உடை உன்னை ஆனந்தம் மற்றும் புன்னகையால் நிரப்புமெனில், நாங்களும் புன்னகைப்போம். உங்களது புன்னகையே எங்களின் புன்னகை.
ஆனால் தயை கூர்ந்து நியாமாக இருங்கள். செய்திதாள்கள் ஒருவரை புகழ்ந்தோ அல்லது அவருக்கு எதிராகவோ எழுதினால், அனைத்து சமூகமும் அவ்விதமாகவே அதனை உணருகிறது. அவர்கள் இந்த செய்திதாள் அவ்விதம் கூறியது, அந்த செய்திதாள் இவ்விதம் கூறியது என்று கூறுகின்றனர். எது செய்திதாள்களின் வேர் ? பொதுவாக அந்தந்த செய்திதாள்களுக்காக செய்திகளை சேகரிக்கும் ஆண் அல்லது பெண் நிருபர்கள். அனைத்து தகவல்களும் தேர்ந்த விமர்சகர்களிடமிருந்து மட்டுமே வருவதில்லை , பெரும்பாலும் நான்காம்தர , சிலசமயம் பத்தாம்தர நிருபர்கள் மூலமாகவும் செய்திகள் வெளிவருகின்றன. ஒரு மனிதன் ஒரு மேயரை சிறந்தவன் என்று மரியாதை செய்வானெனில் , அனைத்து மக்களும் அந்த ஒரு மனிதனின் குரலையே எதிரொலிக்கின்றனர். இது சுதந்திரமல்ல. சுதந்திரம் என்பது உங்கள் சொந்த காதுகளையும், கண்களையும் அனைத்து நிகழ்வுகளிலும் பயன்படுத்துவதேயாகும்.
நீங்கள் ஏன் இந்த உடையை அணிகிறீர்கள் என்று கேட்ட மனிதருக்கு ராமா பதிலளிக்கையில், “சகோதரரே, சகோதரரே, ஏன் இந்த வண்ண உடையை அணிந்துள்ளேன், வேறு வண்ணத்தை ஏன் அணியக்கூடாது என்பதை இந்த ராமா அறிவான் இதனை அணியாமல் ஏன் ராமா கருப்பு அல்லது வெள்ளை உடையை அணியவில்லை ? காரணம் , பிரார்த்தனை! சில தவறுகளை இந்த உடையில் கண்டுபிடியுங்கள் , என்ன தவறை நீங்கள் காண்பீர்கள் ? என்னால் எந்த தவறையும் கண்டறிய முடியவில்லை என்று அவர் கூறினான். “எனக்கு சௌகரியமான நிறம் இது, இந்த துணி உங்களை / என்னை குளிர் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும், நீங்கள் அணியும் உடை எதுவானாலும் அதில் ஒரு நிறம் அல்லது வேறு ஏதேனும் ஒன்று இருக்க வேண்டுமல்லவா , அது கருப்போ, வெண்மையோ, இளஞ்சிவப்போ அது ஒரு நிறமாகவே இருக்கும். எனவே நாம் ஏதேனும் ஒரு நிறத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்க இயலாது.”
இப்பொழுது நீங்கள் கூறுங்கள் என்ன தவறை இந்த நிறத்தில் கண்டறிந்தீர்கள். அவர் எந்த தவறையும் காணவில்லை. பின்னர் ராமா அவரிடம் அன்போடு கேட்கையில் , அவரை அவரது சொந்தமான கண் மற்றும் காதுகளிடம் எப்போதும் அன்புடன் இருக்குமாறு கூறினான். அவைகளை பயன்படுத்தி முடிவுகளை எடுக்குமாறும், அடுத்தவர்களின் கருத்து மூலம் முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றான். அடுத்தவர்களின் கருத்துகளால் வசியப்படாமல் இருங்கள். பிறரால் வசியப்படுத்தப்படாது இருப்பவனே மிகுந்த சுதந்திரம் உடையவனாக இருப்பான்.
ராமா நீங்கள் இந்த விரிவுரைகளை உங்களது சொந்த காதுகள், கண்கள் மற்றும் அறிவினைக் கொண்டு கேட்க வேண்டும் என்று விரும்புகிறான். அவைகளைக் கொண்டு நீங்கள் உங்களது சொந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும் என நினைக்கிறான். இந்த விரிவுரைகளில் நீங்கள் சரியான முறையில் கலந்து கொண்டீர்கள் எனில் , இவைகளின் மூலம் பெரும் பலன்களை நீங்கள் அறுவடை செய்வீர்கள் என்று இந்த ராமா உறுதியளிக்கிறான். அதன்பின், நீங்கள் அனைத்து கவலை, பயம் மற்றும் அனைத்து பிரச்சனைக்களுக்கும் மேல் உங்களை வைத்திருப்பீர்கள்.
மக்கள் தாங்கள் செல்வந்தர்களாக விரும்புகிறார்கள். ஆனால் எதற்கு நீங்கள் செல்வந்தர்களாக விரும்புகிறீர்கள் ? நீங்கள் செல்வத்தை மகிழ்ச்சி தவிர்த்து வேறெதற்காகவும் விரும்புவதில்லை. ஆனால் செல்வம் மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. இங்கிருக்கும் ஏதோவொன்றே மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. சிலர் நாங்கள் அத்தகைய விரிவுரைகளையே கேட்க விரும்புகிறோம். அது எங்களைத் தொட்டு, எங்கள் இதயங்களின் வழியே ஓடும் எனவே அத்தகைய கனிவான விரிவுரைகளை வழங்குங்கள் என்கிறார்கள். அவைகள் நேரடியான மற்றும் உடனடியான விளைவுகளை ஏற்படுத்தும். தயவுசெய்து நீங்கள் குழந்தைகளைப்போல் இருக்காதீர்கள். குழந்தையிடம் ஒரு இனிப்பு மற்றும் டாலரை காட்டினால் , அந்தக்குழந்தை இனிப்பையே எடுத்துக்கொள்ளும். ஏனெனில் அதுவே உடனடியாக இனிப்பான விளைவினைத்தரும். எனவே அந்தக்குழந்தை ஒரு வெள்ளி அல்லது தங்கத்துண்டினை எடுக்காது. அந்தக் குழந்தையைப்போல் இருக்காதீர்கள்.
சிலநேரங்களில் விரிவுரைகளும் , பேச்சும் உடனடியான ஒரு விளைவை ஏற்படுத்தும் அவைகள் இனிப்பைப் போன்றவை, அதில் எதுவும் நிலைநிறுத்தப்படாது, எதுவும் நீடித்திருக்காது. இங்கே வேறு ஏதோவொன்றே நீடித்த தாக்கத்தை தரும். பல்கலைக்கழகத்தில் மற்றும் கல்லூரியில் மக்கள் பல மணிநேரங்கள் பேராசிரியர்களின் விரிவுரையை கேட்பார்கள். பேராசிரியர்களும் பொதுவாக தங்களது மாணவர்களுக்கு மெதுவாக, அமைதியாக உரையாற்றுவார்கள், ஆனால் மாணவர்கள் பேராசிரியர்களின் உதடுகள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்துக் கொள்வார்கள். அந்த பேராசிரியர் உடனடியான விளைவை ஏற்படுத்துகிறாரோ இல்லையோ , மாணவர்கள் பேராசிரியர்களின் உதடுகள் உதிர்க்கும் அனைத்து வார்த்தைகளையும் கவனிப்பார்கள்.
எனவே ராமா இந்த உலகத்திற்கு இன்று கூறுவது யாதெனில் , இந்த உலகம் நிச்சயம் இவனது வார்த்தைகளைக் கேட்கவேண்டும். கல்லூரி மாணவர்கள் எப்படி பேராசிரியர்களின் வார்த்தைகளை கவனத்தோடு கேட்கிறார்களோ அத்தகைய கவனம் தேவை. நீங்கள் இப்போது இந்த வார்த்தைகள் அதிகமானது எனலாம். ஆனால் நேரம் வருகையில்...**
( ** இங்கே ராமா முழுமையான அமைதியில் இருந்தார். தனது எண்ணங்களை இழந்து இந்த மொத்த உலகமும் ஒருநாள் இந்த மனிதனின் ஆன்மீக வாழ்வின் இலட்சியத்தை அடையும் என்பதை அதில் உணர்த்தினார். )
வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்ற தன்மை இதுவே இன்றைய இரவின் விவாதப்பொருள். தத்துவங்களை புகழ்பெற செய்வது மிகவும் கடினமான பணி. அதேபோல் அறிவையும் புகழ்பெற செய்ய இயலாது. ஆனால், சாக்ரடீஸ் மிகச்சரியாக குறிப்பிடுகிறார்.“அறிவு ஒரு நல்லொழுக்கம்“ இந்த கருத்தே மனிதகுலத்தை வழிநடத்தும். இதுவே செயலாக மாற்றம் அடைகிறது. மக்கள் உடனடியான செயல்களை விரும்புகிறார்கள். உடனடியான செயல்கள் நிலையாக இருப்பதில்லை. ராமா உங்களுக்கு கொண்டுவரும் அறிவு உங்களுக்கு எல்லையற்றசக்தி கொண்ட செயலைத்தரும். இதனை புகழ்பெற வைப்பது கடினம். நாம் நம்மால் இயன்ற அளவிற்கு இதில் மறைந்திருக்கும் பிரச்சனைகளைக் கடந்து அதனை எளிமையாக்கலாம்.
நீங்கள் இந்த உலகில் உணரக்கூடிய, பார்க்கக்கூடிய சிறிய பொருளில் இருந்தே துவங்குவோம். உதாரணத்திற்கு கசகசா விதை அல்லது கடுகு விதை அல்லது வேறேதேனும் நீங்கள் காணும் ஒரு மிகச்சிறிய விதையை எடுத்துக்கொள்வோம். அதனை நீங்கள் உங்களது உள்ளங்கையில் ஏந்துங்கள். அந்த விதையானது நீங்கள் உணரக்கூடிய மணம் மற்றும் எடையில் உள்ளது. அது விதையா ? அல்லது வேறேனும் சிறிய ஒன்றா ? அல்லது வேறெதாவது ஒன்றின் விதையா ? என நாம் ஆராய்வோம்.
அந்த விதையை நிலத்தில் விதையுங்கள். மிக குறுகிய காலத்தில் அந்த விதை ஒரு அழகிய தாவரமாகவோ, ஒரு முளைக்கும் தாவரமாகவோ மாறுகிறது. சில காலங்களில் அந்த விதையிலிருந்து ஆயிரக்கணக்கில் முதல் விதையைப் போன்று பல விதைகளை நாம் பெறுகிறோம். இந்த ஆயிரக்கணக்கான விதைகளை நாம் விதைக்கையில் பல லட்சக்கணக்கான அதேவிதமான விதைகளையும் பெறுகிறோம். இது எதை குறிப்பிடுகிறது ? மூலமாக இருந்த அந்த விதை , முதன்முதலில் விதைக்கப்பட்ட அந்த துவக்க விதை இப்பொழுது எங்கே இருக்கிறது ?
அது பூமியில் அழுகி இறந்து விட்டது இனி அதனை எங்கும் காண இயலாது, ஆனால் அந்த மூலமான விதையையே இன்று நாம் பல லட்சக்கணக்கில் அதேவிதமான விதையாக பெற்றுள்ளோம். என்ன ஒரு எல்லையற்ற ஆற்றல் , என்ன ஒரு எல்லையற்ற சக்தி, என்ன ஒரு எல்லையற்ற திறன் மூலமாக இருந்த அந்த முதல் விதையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது மீண்டும் கேட்கப்படும் கேள்வி இது தான் , இங்கே ஒரு விதை இருக்கிறது என நீங்கள் சொல்லும் போது என்ன கூற விரும்புகிறீர்கள் ? விதை என்பது வெறும் வடிவம், அளவு, எடை மற்றும் வாசனை மட்டுமா ? விதை என்னும் வார்த்தை உண்மையில் புற வடிவத்தின் மையத்தை மட்டுமா குறிப்பிடுகிறது ? இல்லை , இல்லை. நாம் செயற்கையாக உருவாக்கும் விதையில் உண்மையான விதையைப்போன்ற வாசனையும், சுவையும் இருக்கலாம். ஆனால் இந்த செயற்கை விதையை நாம் உண்மையில் விதை என்று அழைக்க இயலாது. அதனை ஒரு உண்மையான விதை என்றும் கூற இயலாது அது குழந்தைகளுக்கான ஒரு விளையாட்டு பொம்மையைப்போன்றது அது விதையல்ல.எனவே விதை என்பதற்கு வெளிப்படையான ஒரு பொருளுண்டு. அந்த வெளிப்படையான விதையின் பொருளானது அதன் வடிவம், அளவு, மற்றும் எடை பண்புகளை நாம் நமது புலன்கள் மூலம். உணரலாம். ஆனாலும், உண்மையான விதையின் அர்த்தம் என்பது எல்லையற்ற ஆற்றல், எல்லையற்ற திறன் மற்றும் சக்தியைக் குறிக்கும். விதை என்பதன் உண்மையான அர்த்தம் “ எல்லையற்றது “ என்பதாகும் அதன் புறத்தோற்றமல்ல.
இப்பொழுது இந்த எல்லையற்ற திறன், தோற்றம் மற்றும் வடிவம் மறைந்தவுடன் இறந்துவிடுமா ? விதையின் வடிவம் இந்த பூமியில் மறைந்த உடன் , உண்மையான விதை அதாவது எல்லையற்றதும் மறைந்துவிடுகிறதா ? இல்லை, இல்லை ஒருபோதும் இல்லை. எல்லையற்றது எப்படி மறையும் ? அது ஒருபோதும் மறைவதில்லை. இன்று நாம் பேசுகின்ற பொருளான விதை என்பது மீண்டும் அதன் எல்லையற்ற ஆற்றலின் காரணமாக இந்த பூமியில் அதன் முதல் விதையைப் போன்றே வெளிப்படும்.
நாம் விதை என்பதின் அர்த்தமாக எல்லையற்றது என்பதைக் குறிப்பிட்டோம். அதன் எல்லையற்றதன்மை மாறாமல் இருக்கிறது. நாம் மீண்டும் மூலமாக இருக்கும் விதையைப் பார்ப்போம். அதன் ஆற்றல் மாறாத ஒன்றாக இருக்கிறது. அதன் எல்லையற்ற திறன் அழியவில்லை. அதன் சக்தி ஆயிரக்கணக்கான விதைகளை உருவாக்கியப்பின்னும் அச்சக்தி மீண்டும் தோன்றுகிறது, மாறாமல் இருக்கிறது. உண்மையான எல்லையற்றது விதையின் உடலானது அழிந்தப்பின்பும் அதன் ஆன்மாவானது அழியாது. ராமா கூறுவது யாதெனில் உண்மையான எல்லையற்ற தன்மை ஒருபோதும் அழியாது , ஒருபோதும் மாறாது , அது நேற்று , இன்று மட்டுமல்ல எப்போதும் இருக்கும். விதையில் இருக்கும் எல்லையற்ற சக்தி முன்னேற்றம் மற்றும் விரிவாக்கம் ஆகிறது. மூலமாக இருக்கும் விதையின் சக்தியானது சிறிது கூட அதிகமாவதுமில்லை. குறைவதுமில்லை.
விதையின் உண்மையான அர்த்தத்தை தேடுவோம். ராமா கூறுகிறான் விதையின் ஆன்மாவானது அதிகமாவதுமில்லை, குறைவதுமில்லை. சுருங்க கூறுவதெனில் விதை என்பது நேற்று, இன்று மட்டுமல்ல எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அது எல்லையற்றது. அது அழிவில்லாதது. அது சிறிது கூட அதிகமாவதுமில்லை, குறைவதுமில்லை.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கூறுவதற்காக இந்த ராமாவை நீங்கள் மன்னியுங்கள். சிலசமயம் கூறுவது கூறல் அவசியம் என்பது இந்த ராமாவிற்கு தெரியும்.
நுண்ணுயிரிகளை நீங்கள் மோனாட்ஸ் ( Monads ) என்று அழைப்பீர்கள். அதன் மூலத்தை புரோட்டோசோவா என்றும் அழைப்பீர்கள்.அவைகள் எவ்விதம் வளருகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ? அவைகள் தங்களுக்குள் இரு சமக் கூறிடல் ( Bisection ) என்ற முறையில் வளருகின்றன என்று இயற்கையாளர்கள் கூறுகின்றனர். இந்த இரு சமக் கூறிடல் இயற்கையாகவே நடக்கின்றது. இத்தகைய ஏதேனும் ஒரு நுண்ணியிரி ஒன்றை நாம் எடுத்துக் கொள்வோம். அதனை இரண்டாக நாம் கூறாக்குவோம். அது என்னவாகும் ? என்னவொரு கொடுமையான செயல் இது, ஒரு மனிதனை நாம் இரு கூறாக்கினால் என்னவாகும் ? அவன் மரித்து போவான். அதேபோல் நாம் ஒரு நுண்ணியிரியை இருகூறாக்கினால் அது இறந்து போகும்தானே ஆனால் அது மரிப்பதில்லை, அது மேலும் பெரிதாகிறது. இந்த இரண்டையும் எடுத்து மேலும் இரண்டு கூறாக்கினாலும் அவைகள் மரிப்பதற்கு பதிலாக அவைகள் நான்கு வாழும் உயிரிகளாக மாறுகின்றன. அதே ஆற்றல், அதே சக்தி உடன் அதன் மூலமாக இருந்த நுண்ணுயிரியைப் போலவே இந்த நான்கும் இருக்கும். இந்த நான்கையும் மேலும் பிளவுப்படுத்த அவை எட்டாக மாறும். எனவே இதனை நீங்கள் எத்தனை மடங்கு வேண்டுமானாலும் பெருக்கலாம். எத்தனை விசித்திரமானது , எத்தனை விசித்திரமானது !
இங்கே நாம் மோனாட்ஸ் குறித்து பேசினோம். இதனை கொல்வதன் மூலம் அதன் உடலானது அழிக்கப்பட்டாலும் அது அழிவதில்லை அதாவது அதன் ஆன்மா அழிவதில்லை. அது அவ்விதமாகவே இருக்கும்.
மரணமற்ற தன்மையே உண்மையான இறைதன்மை அதுவே நீங்கள். உண்மையான மோனாட்ஸ் பல இலட்சக்கணக்கானவையாக மாறும். இதையே நாம் வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்ற தன்மை என்கிறோம்.
இப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம், உடல்கள் பெருகும் போது மோனாட்ஸ்களின் அதன் ஆற்றலும் பெருகுமா அல்லது குறையுமா ? இல்லை அது குறைவதுமில்லை, பெருகுவதுமில்லை. உண்மையான மோனாட்ஸ்களின் எல்லையற்றதன்மை மாறுவதில்லை, அது பெருவதோ, குறைவதோ இல்லாமல் ஒரேவிதமாக இருக்கிறது.
இந்த எல்லையற்ற தன்மையின் வேதாந்த விளக்கமானது இங்கே இனி விளக்கப்படும்.
ஒரு சிறிய குழந்தையானது ஒருபோதும் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்க அனுமதிக்கப்பட்டதில்லை. பாரதவருஷம் எனப்படும் , ஹிந்துஸ்தானில் , சிறிய குழந்தைகளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடிகள் காட்டப்படுவதில்லை. அந்த சிறிய குழந்தை ஒருமுறை தனது தந்தையின் அறைக்கு தவழ்ந்து சென்றான், அங்கே அந்தக்குழந்தை தரையில் ஒரு கண்ணாடி இருப்பதைக் கண்டான். அதன் ஒருமுனை சுவற்றிலும், மற்றொருமுனை தரையிலும் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது . அந்தக்குழந்தையும் அந்த கண்ணாடியை நோக்கி சென்று அதில் ஒரு சிறிய குழந்தையைக் கண்டது. குழந்தைகளுக்கு எப்போதும் குழந்தைகள் மீது ஈர்ப்பு என்பது உங்களுக்குத் தெரியும்தானே ? நீங்கள் உங்கள் குழந்தையோடு உங்களின் நண்பரின் இல்லத்திற்கு சென்றால், அங்கே நீங்கள் உங்கள் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில் உங்கள் குழந்தை உங்கள் நண்பரின் குழந்தையோடு நட்பு கொண்டு விட்டிருக்கும். அதேபோல் இந்தக்குழந்தையும், கண்ணாடியில் தன்னைப்போல் தோன்றும் ஒரு குழந்தையை அணுகியது. குழந்தை கண்ணாடியை நோக்கி நகர , அதன் பிம்பமும் நகரத்துவங்கியது. கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தை நட்போடு குழந்தை நோக்கியது. அவைகளின் மூக்குகள் சந்தித்துக்கொண்டன. அவைகளின் உதடுகள் தொட்டுக்கொண்டன. தனது கைகளை அதனோடு வைத்து குலுக்கத் துவங்கியது. அந்தக் கண்ணாடி தரையில் விழுந்து இரண்டு துண்டாகியது. இப்பொழுது அந்தக்குழந்தை தன்னைப்போல இரண்டு குழந்தைகளைக் கண்ணாடியில் கண்டது. அடுத்த அறையில் இருந்த குழந்தையின் தாய் சத்தம் கேட்டு தன் கணவனின் அறைக்கு ஓடி வந்தாள். அங்கே தனது கணவன் இல்லாதிருப்பதையும் , குழந்தையானது கண்ணாடியை உடைத்திருப்பதையும் கண்டாள். அவள் கோபத்தோடு குழந்தையை மிரட்டும் தொனியில் அடிப்பதற்கு ஓடி வந்தாள். ஆனால் குழந்தைகளுக்கு இது நன்றாகவே தெரியும். அம்மாவின் மிரட்டலிலும் விழிகளின் உருட்டலிலும் ஒன்றுமில்லை என்பதை அனுபவத்தில் அந்தக் குழந்தையானது அறியும். அன்னையின் வார்த்தைகளுக்கு பயப்படாமல் இருந்த குழந்தையிடம், “ நீ என்ன செய்திருக்கிறாய், நீ என்ன செய்திருக்கிறாய், இங்கே என்ன செய்கிறாய் ? “ இந்த வார்த்தைகளும் மிரட்டும் தொனியில் வெளிப்பட்டவையல்ல. அந்தக்குழந்தையோ, “ ஓ , அம்மா நான் இருவரை உருவாக்கிவிட்டேன், இருவரை உருவாக்கிவிட்டேன்.” என்றது. குழந்தை தன்னைப்போல் இருவரை உருவாக்கி விட்டேன் என்றது. அந்தக் குழந்தை உரிய வயதை அடையும் முன்னரே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டது. மீண்டும் மகிழ்வோடு, “ நான் இருவரை உருவாக்கி விட்டேன்” என்றது. தாயும் புன்னகைத்தவாறே அந்தக்குழந்தையை தனது கரங்களில் எடுத்துக்கொண்டு தனது அறைக்கு கொண்டு சென்றாள்.
இரண்டு துண்டாக உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடியை இப்பொழுது நாம் எடுத்துக்கொள்வோம். அதனை மேலும் உடைக்க பல முகம் பார்க்கும் கண்ணாடிகள் உருவாகும். குழந்தையானது கண்ணாடியை உடைக்க உடைக்க பல குழந்தைகள் தோன்றும். இதுபோல் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் இது உண்மையில் கடவுள்தன்மையா , கண்ணாடிகளை உடைப்பதன் மூலம் உண்மையான குழந்தைகளையா நாம் உருவாக்குகிறோம். உண்மையில் நாம் முகம் பார்க்கும் கண்ணாடிகளையே பெருக்குகிறோம் அல்லது குறைக்கிறோம். கண்ணாடியைப் பார்க்கும் குழந்தையின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை அது அவ்விதமாகவே இருக்கிறது. எப்படி எல்லையற்றதன்மை பெருக்கமடையும் ? முடிவிலியானது பெருக்கமடைந்தாலோ, குறைந்தாலோ அது முடிவிலியாகவே இருக்காதல்லவா?.
இதேப்போல் வேதாந்த விளக்கத்தின் மூலம் நாம் விளக்குகையில் ஒரு மோனாட் ஐ இருகூறாக்கி மைக்ரோஸ்கோப் மூலம் அதனை இரண்டாக்கினால் அதன் உடல் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைப் போலவே இருக்கும். அந்த உடல் இரண்டாக ஆனாலும், அதன் ஆற்றல் அதாவது உண்மையான எல்லையற்றதன்மை, உண்மையான ஆன்மா, ஆற்றல் அல்லது வேறு எந்த பெயரை நீங்கள் அதற்கு வைத்தாலும் அதன் உருவமானது பல மடங்கு பெருகினாலும் அந்த மோனாட்-ன் ஆற்றலானது ஒன்றாகவே இருக்கும். அதாவது மோனாட்கள் என்பவை முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றவை. மோனாட்களை எவ்வளவு முறை நீங்கள் பிரித்தாலும் அதன் ஆற்றல் மாறாத ஒன்றேயாகும். அது மாறாதது. அதற்கு பன்மையில்லை, இருமையில்லை, ஒன்றே ஒன்று. ஓ , என்ன ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ! என்ன மகிழ்ச்சி ! இரு கூறாக்கினாலும் உடலும் , நானும் மரிப்பேனா ? உண்மையான சுயமானது மரிப்பதில்லை. இந்த உடலை உயிரோடு எரித்தாலும், என்ன துன்பம் விளைவித்தாலும் நீ அறிவது என்னவென்றால், எல்லையற்றத்தன்மையே உள்ளிருப்பது. இதனை ஒரு மனிதன் அறிந்து கொண்ட மாத்திரத்திலேயே அவன் சுதந்திரமானவனாகிறான். அனைத்து அபாயங்கள், அனைத்து சிரமங்கள் மற்றும் அனைத்து துன்பங்கள் , சோதனைகள் மற்றும் வலிகளைக் கடந்தாவது அதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நீங்களாக இருங்கள் !.
ஓ , என்ன ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ஒரு எல்லையற்ற சக்தி தன்னை அனைத்து உடலிலும் காட்டுகிறது. அனைத்து காணும் ஆளுமை மற்றும் வடிவத்திலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. ஓ ! அதுவே ‘நான்' அந்த நான் எல்லையற்ற ஒன்று. இதுவே அனைத்து தலைசிறந்த பேச்சாளர்களின் உடலிலும் உள்ளது. அனைத்து மோசமான படைப்பிலும் உள்ளது ! ஓ , என்ன ஒரு சந்தோஷம் ! நான் ஒரு எல்லையற்ற ஒன்று, இந்த உடலல்ல , அதனை உணர்ந்து நீங்கள் சுதந்திரமானவன் என்பதை உணருங்கள். இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல, கற்பனையான பேச்சும் அல்ல, இதுவே சத்தியமான உண்மை. இந்த சத்தியமான உண்மையை உணருங்கள், உண்மையான சக்தியை உணருங்கள். அதுவே நீங்கள். எல்லையற்ற நீங்கள். அனைத்து விதமான ஆபத்து மற்றும் சிரமங்களுக்கும் இடையே நீங்கள் உடனடியாக எழுவீர்கள்.
இந்த உலகில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் உள்ளன. ஒரு கண்ணாடி கருப்பு, இன்னொன்று வெள்ளை, மற்றொன்று சிகப்பு, இன்னொன்று மஞ்சள், மற்றொன்று பச்சை, ஒன்று குவிஆடி, இன்னொன்று குழிஆடி, இன்னொன்று முப்பட்டகம், ஒரு கண்ணாடி லென்ஸ். ஒருவேளை அனைத்து வகையான கண்ணாடிகளின் முன்பும் ஒருவன் நிற்கிறான் என வைத்துக்கொள்வோம். அவன் சுற்றிலும் பார்க்கிறானெனில் ஒருபுறம் அவன் சிகப்பாகவும் இன்னொரு இடத்தில் அவன் வெள்ளையாகவும், மற்றொரு இடத்தில் மஞ்சளாகவும் காட்சியளிப்பான். குவி மற்றும் குழி ஆடியில் அவன் உருவம் மாறுபட்டதாகவும், சிதைந்தும் காணப்படும். அவன் தன்னை பலவிதமான வடிவத்திலும், உருவத்திலும் காண்பான் ஆனால் வெளிப்படையாக இவையனைத்தும் ஒரே பிரிக்க இயலாதவையின் பல்வேறு வடிவங்களேயாகும் என்பதே நித்தியமான, அடிப்படையான உண்மையாகும். நீங்கள் சுதந்திரமானவன் என்பதை உணருங்கள். அதுவே உங்கள் அனைத்து கவலைகளையும் அசைத்துவிடும். இந்த அனைத்து உருவசிதைவும், உருவமாற்றமும் உண்மையான எல்லையற்றதை எதுவும் செய்வதில்லை. இந்த எல்லையற்றதன்மையே கடவுள்தன்மை. இதுவே வெவ்வேறு கண்ணாடிகள் காட்டும் உண்மையின் வடிவம். உடலும், மனமும் வெவ்வேறு விதமான கண்ணாடிகளைப் போன்றவை, அது பல்வேறு விதமாக சிகப்பு, வெள்ளை, குவி, குழி எனக் காட்டினாலும், உடல்கள் மாறுபட்டாலும் , நீங்கள் உடல்கள் மட்டுமல்ல. நீங்கள் எல்லையற்ற சக்தி, இறைதன்மை, நிலையான, மாறாத, மாற்ற முடியாத ஒன்றாகும். அதுவே நீங்கள். நீங்களே இந்த உலகத்தில் வசிப்பவர், நீங்களே இந்த மொத்த பிரபஞ்சத்தில் வசிப்பவர்.
இந்தியாவில் சிலரிடம் கண்ணாடி வீடுகள் உண்டு. அந்த கண்ணாடி வீடுகளில் கூரை , சுவர் அனைத்தும் கண்ணாடியால் ஆனது. அதில் பல விதமான கண்ணாடிகளும் உண்டு. அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் அறைக்குள் வந்து தன்னை அனைத்து பக்கங்களிலும் பார்த்தார்.
ஒருமுறை அந்த கண்ணாடிகளின் முன் ஒரு நாய் வந்து நின்றது. அதன்முன் நாய்களின் படையே வந்து நின்றதைப்போல் தோற்றமளித்தது. நாய்கள் மிகவும் பொறாமை கொண்டவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவைகள் தன் அருகே இன்னொரு எதிரி நாய் இருப்பதை விரும்பாது. அதன் பொறாமையானது மேலும் அதிகமாகிவிடும். இந்த நாய் ஆயிரக்கணக்கில் நாய்கள் தனது வலப்பக்கத்திலிருந்து நெருங்குவதைக் கண்டு , அவைகள் படைகளாய் திரண்டு தன்னை துண்டுத்துண்டாக கிழிக்க போவதாக உணர்ந்தது. அங்கிருக்கும் இன்னொரு சுவருக்கு நகர்ந்தது. அங்கும் நாய்கள் கூட்டம் தொடர்வதைக் கண்டு, இன்னொரு சுவருக்கு நகர்ந்த போதும் அங்கும் இதுவே தொடர்ந்தது. உடலானது இரண்டாக பிரிந்தாலும் உள்ளிருக்கும் ஆற்றல், உண்மையான ஆன்மா, சக்தி அல்லது வேறேதேனும் பெயர் வைத்து அதனை உண்மையில் உள்ளிருக்கும் கடவுள் என்றும் அழைக்கலாம். ஆனாலும் உள்ளிருக்கும் இறைதன்மை பெருகுவதில்லை அது ஒரே விதமாகவே இருக்கும். அந்த நாய் பயந்து குரைக்கத்துவங்கியது , அந்த குரைப்பு நான்கு சுவற்றிலும் பட்டு எதிரொலித்தது அது மேலும் பயந்து அங்குமிங்கும் அலைந்து நான்கு சுவர்களுக்குள் மிகுந்த களைப்படைந்து சோர்ந்து அந்த இடத்திலேயே விழுந்து இறந்தும் போனது.
வேதாந்தம் சொல்கிறது, இந்த உலகம் என்பது கண்ணாடி வீடு போன்றது, அனைத்து உடல்களும் வெவ்வேறு கண்ணாடிகளைப் போன்றது. உங்களுடைய உண்மையான ஆத்மனே அல்லது உண்மையான சுயமே அனைத்து பகுதிகளிலும் எதிரொளிக்கிறது. எப்படி நாயானது தனது உருவமானது நான்கு சுவரிலும் எதிரொளிப்பதை பார்க்கிறதோ அதேபோல் எல்லையற்ற ஆத்மன், எல்லையற்ற தெய்வீகத்தன்மை, எல்லையற்ற சக்தி தன்னை வெவ்வேறு கண்ணாடிகளில் எதிரொளிக்கிறது. இந்த எல்லையற்ற ராமாவும் அனைத்து உடல்களிலும் எதிரொளிக்கிறான். இந்த உலகில் நாயைப்போன்ற அறியாமையில் இருப்பவர்கள் கூறுகையில், “ அந்த மனிதன் என்னைத் தின்றுவிடுவான். அந்த மனிதன் என்னை துண்டுதுண்டாக கிழித்து விடுவான். அவன் என்னை அழித்து விடுவான். “ ஓ, எவ்வளவு பொறாமை , பயம் இந்த உலகத்தில் ! எதனால் பயமும் , பொறாமையும் ? நாயின் அறியாமை , நாயைப்போன்ற அறியாமையில் இருப்பவர்கள் பொறாமையையும், பயத்தையும் இந்த உலகத்தில் கொண்டிருப்பர். நீங்கள் சற்றே திரும்பி குரு நிலையில் இருப்பவர் இந்த கண்ணாடியை எவ்விதம் பார்ப்பார் என்று பாருங்கள். அவர் காணும் உலகம் நாய் ( DOG ) போலிருக்காது அது கடவுள் ( GOD ) ஆக இருக்கும். நீங்களே இந்த மொத்த பிரபஞ்சத்திற்கும் உரிமையாளர்.இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு இன்பத்தையே தருகிறது. நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகளை முன்கூட்டியே அறிவதனாலேயே இன்பம் ஏற்படுகிறது. நீங்கள் சந்தோஷத்தையும், மகிமையையும் எங்கும் காணலாம். நீங்கள் சொர்க்கத்தையே இந்த உலகில் உருவாக்கலாம்.
நாம் இப்பொழுது மனிதர்களுக்கு வருவோம். நீங்கள் விதையாக வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்றதன்மையை கண்டீர்கள். அது தாவர ராஜ்ஜியத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட விளக்கமாகும். மோனாட்களின் மூலம் விலங்கு ராஜ்ஜியத்திலிருக்கும் வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்றதன்மையும் விளக்கப்பட்டது. கண்ணாடிகளைக் கொண்டும் அது விளக்கப்பட்டது அது தாது ராஜ்ஜியத்திலிருந்து எடுக்கப்பட்டது. நாம் இப்பொழுது மனிதனுக்கு வருவோம்.
மூல விதையானது மரித்து பல ஆயிரக்கணக்கில் விதைகளை உருவாக்கிறது, உண்மையில் உண்மையான விதை பெருகுவதுமில்லை, குறைவதுமில்லை. ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இதுபோலவே மூல மோனாட்கள் இறந்தாலும், பல்லாயிரக்கணக்கான மோனாட்களை உருவாக்குகின்றன. ஆனாலும் உண்மையான மோனாட் -ல் எந்த மாறுபாடும் இல்லை. கண்ணாடி உடைகிறதே தவிர, உண்மையில் குழந்தை அங்கே பெருகவில்லை. ஒரு மனிதன் இறந்தால் அவனது மகன் வருவான், ஒரு மனிதனுக்கு இரண்டு அல்லது சிலசமயம் பன்னிரண்டு மகன்களும் பிறக்கலாம். சில ஆங்கிலேயர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஹிந்துஸ்தானில் பல பிள்ளைகளைப் பெறுகின்றனர். பெற்றோர்கள் இறந்தாலும் அங்கே டஜன் ( பன்னிரண்டு ) கணக்கில் பல பிள்ளைகள் அவருடைய இடத்திற்கு வருகின்றனர். அவர்கள் மறையும் போது அடுத்த தலைமுறையை விட்டுச் செல்கின்றனர். இங்கும் அதே விஷயம்தான்.
இங்கே இந்த விரிவுரையில் விவரமாக சொல்ல நேரமில்லை , ஒரு விரிவுரையில் ஒரளவு கோடிட்டு மட்டுமே காட்ட இயலுமே தவிர முழுமையாக விளக்க இயலாது.
வேதாந்தமானது விதை, மோனாட், மற்றும் கண்ணாடிகள் மூலம் கூறுவதும் இதைத்தான். ஒரு ஜோடி ஆண், பெண் மறைந்து பல லட்சக்கணக்கானோர் தோன்றுவார்கள். இதையே கிறிஸ்தவர்களின் பைபிளானது ஆதாம் – ஏவாள்களின் வழித்தோன்றல்கள் உலகமெங்கும் பரவினார்கள் என்கிறது.
மனிதன் ஒரு எல்லையற்ற தனித்தன்மை, நீங்கள் அனைவரும் உலகில் மறைந்தாலும் ஒரு ஜோடி மனிதர்கள் இருப்பின், அந்த ஆண் – பெண் ஜோடிகளைக் கொண்டு பல லட்சக்கணக்கான மக்களை காலப்போக்கில் உருவாக்கலாம். எல்லையற்ற திறன் , எல்லையற்ற சக்தி , எல்லையற்ற சாத்தியங்களை உள்ளடக்கியது இந்த ஜோடி. அந்த எல்லையற்றதன்மை நீங்கள்தான். அது எல்லா உடல்களிலும் எல்லையற்ற தன்மையோடேயே இருக்கிறது. அது பகுக்க இயலாதது. அது நேற்றும், இன்றும், நாளையும் ஒரே விதமாகவே இருக்கும். இதனை ஒரு புகழ்பெற்ற விளக்கம் மேலும் தெளிவாக்கும்.
தாங்கள் யார் ஐயா ?
நான் திருவாளர். இன்னாரின் இன்னார்.
ஆம். நீங்கள் மனிதன் இல்லையா ?
ஓ , நான் ஆண்.
அது சரி நீங்கள் யார் ?
நான் திருமதி. இன்னாரின் இன்னார்.
நீங்கள் மனிதரில்லையா ?
மனிதன்.
தத்துவார்த்தமற்ற எந்த ஒரு மனிதரிடமும் நீங்கள் இதனைக் கேட்டால் அவர் ஒருபோதும் தான் மனிதன் என்பதைக் கூற மாட்டார். அவர் எப்போதும் தான் திருவாளர் அல்லது திருமதி அல்லது வேறேதேனும் ஒன்றை அல்லது பெயரினைச் சொல்வார். ஆனால் நீங்கள் மனிதரில்லையா என்று வினவினால் மட்டுமே தான் மனிதன் என்பதை ஒப்புக்கொள்வார்.
இப்பொழுது நாம் கேட்டபது , நீங்கள் எப்பொழுதாவது மனிதர்களை பார்த்ததுண்டா ? கலப்படமற்ற, குறிப்பிட்டுக் கொள்ளாத, பகுதியற்ற மனிதனை நீங்கள் எப்போதேனும் பார்த்ததுண்டா ? எங்கேனும் நாம் அவர்களை சந்திக்க நேர்ந்தாலும் அவர் திருவாளர் அல்லது திருமதியாகவே இருப்பார் , அவர் ஆண் அல்லது பெண்ணாக இருப்பாரேயன்றி உண்மையான மனிதனாக இருப்பதில்லை. எங்கும் நீங்கள் உறுதியான மனிதர்களை பார்க்க இயலாது. அத்தகைய உறுதியான மனிதன் நம் அனைவரிலும் உள்ள உயரிய ஒன்றாகும். அவனது குணநலன்கள் பல வகையில் பிரிந்துள்ளன. இருப்பினும் அந்த மனிதன் நம் அனைவரின் உடலிலும் இருக்கிறான். அவனை உங்களது திருவாளர் மற்றும் திருமதி போன்றவைகளை பின்தள்ளி முன்னே கொண்டுவாருங்கள். பகுதியான மனிதன், குறையுள்ள மனிதன், உறுதியான மனிதன் போன்றவற்றை எடுத்தப்பின் என்ன மீதமிருக்கும் ? ஒன்றுமில்லை. அனைத்தும் போய்விடும். நீங்கள் இந்த திருவாளர். திருமதி, இன்னார் என்பதை எடுத்துவிட்டாலே அவன் உண்மையான மனிதன். ஆனால் இதை நீக்கியப்பின் நீங்கள் வேறு எதையும் அடையாளம் காண இயலாது ஆனால் உண்மையான மனிதனைக் காணலாம். ராமா கூறுவது யாதெனில் நீங்கள் வார்த்தைகளால் தவறாக வழிநடத்தப்படாமல் உங்களுக்குள் இருக்கும் எல்லையற்ற சக்தியை உணருங்கள், அதனை நீங்கள் காண இயலாது, கேட்க இயலாது, சுவைக்க இயலாது, ஆனால் அதுவே நீங்கள் காணும் அனைத்தின் தலைமை அதுவே. உங்கள் பார்வைக்கு காரணமும் அதுவே, அதுவே உண்மை, அதுவே இறைதன்மை, அதுவே நீங்கள் உணரும் அனைத்து புலன்களின் சக்தி. அது இருப்பினும் விவரிக்க இயலாத ஒன்று. எனவே நாம் வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்ற தன்மையை காணவோ, கேட்கவோ, கற்பனை செய்யவோ முடியாமல் இருக்கிறோம். நீங்கள் கேட்பது, காண்பது, உணர்வது அனைத்தும் அதன் மூலமாகவே ஆனாலும் அது விவரிக்க இயலாத தலையாய ஒன்று அதுவே இதுவரை விவரித்தவைகளின் சாரம்.
இறுதியாக , ராமா எளிமையான ஒன்றை தனக்கும், உங்களுக்காகவும் தயவு செய்து செய்யுமாறு கோருகிறான். மனிதனாக இரு ! அனைத்து உடல்களும் பனித்துளிகளைப் போன்றவை, உண்மையான மனிதனோ அனைத்து பனித்துளிகளின் வாயிலாகவும் பாயும் சூரிய ஒளியைப் போன்றவன். அனைத்து உடல்களும் ஜெபமாலையில் இருக்கும் மணிகளைப் போன்றது, ஆனால் உண்மையான மனிதன் அவையனைத்தையும் ஊடுறுவிச் செல்லும் நூலைப் போன்றவன். ஒரு விநாடி நீங்கள் அமர்ந்து இதனை உணர்ந்தீர்களெனில் நீங்கள் ஒரு பிரபஞ்ச மனிதன் என்பதை உணர்வீர்கள், உங்களுக்கு எல்லையற்ற சக்தி உண்டு, நீங்களே அனைத்திலும் உள்ளவர் என்பதை உணர்வீர்கள். மனிதனாக இருந்தாலும் நானே சகலமும், நானே வரையறுக்க இயலாதவன். நானே சகலமும். நீங்கள் அனைவரும் ஒன்றே. உங்கள் திருவாளர் மற்றும் திருமதி போன்றவற்றில் இருந்து மேலே உயருங்கள் , நீங்கள் அனைவரோடும் இயைந்த ஒன்றாவீர்கள். என்னவொரு பெரும் யோசனை! நீங்கள் அனைவரும் ஒன்றாவீர்கள். அதன்பின்னர் நீங்கள் மொத்த பிரபஞ்சத்தோடும் ஒன்றாவீர்கள்.
இது ஒரு உபநிஷத பாடலின் மொழிபெயர்ப்பு ஆனால் இது மிகவும் சரியான மொழிபெயர்ப்பு என்று கூற இயலாது.
காண இயலாத எனது ஆன்மா கூறுவது
அனைத்தின் நுட்பமான சாரம் ! நானே நெருப்பின் சூடாகிறேன்,
நானே நிலவிலும், சூரியனிலும் , கிரகம் மற்றும் நட்சத்திரங்களிலும் ஒளிர்கிறேன்!
நானே காற்றோடு வீசுகிறேன், அலைகளோடும் உருளுகிறேன்!
நானே ஆணும், பெண்ணும், இளைஞனும், பணிப்பெண்ணும் !
புதிதாய் பிறந்த குழந்தை, பண்டைய
பணியாள் ! நான் எதுவாக இருந்தாலும் –
கருந்தேனீ, புலி மற்றும் மீன்
சிகப்பு கண்களைக் கொண்ட பச்சை பறவை, மரம், புற்கள்,
மின்னலை தங்கள் கருப்பையில் கொண்டிருக்கும் மேகங்கள்,
பருவங்கள் மற்றும் கடல்கள் ! என்னுள் இவையனைத்தும்,
என்னுள் தொடங்கி என்னுள்ளே முடியும்.
- உபநிஷத் ( சர். எட்வின் அர்னால்டின் மொழியாக்கம் )
எல்லையற்றவர்களே நீங்கள், அந்த எல்லையற்ற முடிவிலியே எங்கும் உள்ளது. இவைகளே இந்த கற்பனையான, பொய்யான மாய உடலை தோற்றுவிக்கிறது. நீங்கள் இந்த உலகத்தை ஒரு கண்ணாடியால் கட்டப்பட்ட வீட்டைப்போல் உருவாக்கி உள்ளீர்கள். எல்லையற்றதன்மையை கவனியுங்கள், பிரபஞ்சக்கடவுள் அதுவே நீங்கள்.அதுவே வாழ்கிறது இந்த உலகில் எங்கும் ஊடுருவியுள்ளது.
ஓம் ! ஓம் !! ஓம் !!!
ஆழமான விஷயம்
ReplyDeleteபுரிதலுக்கு சந்தோஷமும், நன்றியும்.
Delete