இறையுணர்தலின் வனங்களில் - 4 - மனதின் சுவரில் சுயத்தின் சூரியன்
உ
யோகி ராம்சுரத்குமார்
சுவாமி ராமதீர்த்தரின் ஆங்கில கட்டுரைகள் கொண்ட 7 தொகுதி நூல்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பு
இறையுணர்தலின் வனங்களில்
By
சரஸ்வதி சுவாமிநாதன்
மனதின் சுவரில் சுயத்தின் சூரியன்
சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் ஹால் – ல் ஜனவரி 12, 1903 ல் ஆற்றப்பட்ட விரிவுரை.
மாறாததின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே,
இன்றைய இரவின் சொற்பொழிவின் தலைப்பு மாறக்கூடியதிலிருக்கும் மாறாதது.
துவங்கும் முன், ராமாவிடம் தொடர்ந்து முன் வைக்கப்படும் சில கேள்விகளுக்கான விடையைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசுவோம்.
நீங்கள் அணிந்திருக்கும் உடையின் வண்ணத்தின் முக்கியத்துவம் என்ன ?
ஏன் பௌத்தர்கள் மஞ்சள் நிற ஆடைகளை உடுத்துகின்றனர் ?
வேதாந்த சாதுக்கள் அல்லது சுவாமிகள் செந்நிற உடைகளை ஏன் அணிந்திருக்கின்றனர் ?
ஒவ்வொரு மதத்திற்கும் மூன்று அம்சங்கள் உண்டு. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தத்துவம், ஒரு புராணம் மற்றும் அதன் சடங்கு போன்றவை உண்டு. தத்துவங்கள் இல்லாமல் எந்த மதமும் நிற்க இயலாது. அப்போதுதான் அது கற்ற, அறிவார்ந்த, பகுத்தறிவு கொண்ட மக்களிடம் சென்று சேரும், எனவே அதற்கு கட்டாயமாக தத்துவம் என்ற ஒன்று தேவை. இத்துடன் அது மக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அதற்கு கட்டாயம் ஒரு புராணம் தேவை. அது பொதுவான நாட்டுப்புற மக்களிடம் சென்று சேருவதற்கு அதற்கு சடங்குகள் தேவை.
வேதாந்த மதத்தின் சடங்குகளுக்கும் உடைகளின் வண்ணங்களுக்கும் சில தொடர்புகள் உண்டு. கிறிஸ்துவர்கள் ஏன் சிலுவையை அணிகிறார்கள் ? அதுவொரு சடங்கு. ஏன் கிறிஸ்துவர்கள் தங்களின் தேவாலயங்களின் மேலே சிலுவையை நடுகிறார்கள் ? அதுவொரு சடங்கு. ரோமன் கத்தோலிக்கர்கள் மிகுந்த விரிவான சடங்குகளை மேற்கொள்வார்கள். பிராட்டஸ்டன்ட்கள் மிக குறைந்த அளவே சடங்கினை செய்வார்கள். இருப்பினும் அவர்களுக்கும் சடங்குகள் உண்டு. ஹிந்துக்களின் தீப்பிழம்பைப் போன்ற செந்நிற வண்ணத்திற்கும் கிறிஸ்துவர்களின் சிலுவைக்கும் ஒரு அர்த்தமுண்டு. சிலுவை எதை குறிப்பிடுகிறது ? அது இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவூட்டுகிறது, அவரின் அன்பை, மக்களுக்காக தனது உடலை சிலுவையில் இட்டு பட்ட துன்பப்பட்டதை உணர்த்துகிறது. அதுவே கிறிஸ்துவர்கள் அணியும் சிலுவையின் பொருளாகும். நீங்கள் ஒரு ஹிந்துவிடம் சிலுவையின் பொருளைப்பற்றி வினவினால் அவன் வேறுவிதமான அர்த்தத்தையே கூறுவான். கிறிஸ்துவின் போதனையில் அவர், “ உங்கள் சிலுவையை சுமந்து என்னை பின் தொடருங்கள்” என்று கூறினார் என்பான். “ எனது சிலுவையை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறவில்லை. பைபிளின் புதிய ஏற்பாட்டில், செயின்ட் பால் அல்லது இயேசு கிறிஸ்து உங்களை கிறிஸ்துவின் சிலுவையை எடுத்துக்கொள்ளச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் “ உங்கள் சிலுவையை எடுத்துக்கொள்ளுங்கள்” என கூறுகின்றனர். அதன் பொருள் உங்கள் மாம்சத்தை சிலுவையிலிடுங்கள், உங்கள் காமத்தை, உங்கள் சிறிய சுயத்தை, உங்கள் அகங்காரத்தை சிலுவையிலிடுங்கள். இதுவே அதன் அர்த்தமாகும். எனவே சிலுவை என்பது கட்டாயமாக நமது சுயநல ஆசைகள், நமது அகங்காரம் போன்றவற்றை சிலுவையில் இடவேண்டும் என்பதையே குறிப்பிடுவதாகும். இதுவே சிலுவை அணிவதின் பொருளாகும். இதனை நீங்கள் ஏற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் வேதாந்தம் எப்போதும் உங்களை இந்த உணர்வில் இவைகளை எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இத்தகைய உணர்விலேயே பௌத்தர்கள் மஞ்சள் உடைகளை உடுத்துகிறார்கள்.
இந்தியாவில் மஞ்சள் என்பது மரணத்தின் வண்ணம். இறந்த பிணம் மஞ்சள் வண்ணத்தை அடையும். மஞ்சள் அங்கி அல்லது மஞ்சள் உடையை அணிந்த மனிதன் தனது உடலை சிலுவையில் அறைந்தவனாக அறியப்படுகிறான். அவன் தனது மாம்சம் , காமம், சுயநல எண்ணம் போன்ற அனைத்தையும் அழித்தவனாகிறான். அதாவது ரோமன் கத்தோலிக்கர்கள் எப்படி ஒரு துறவியை நியமனம் செய்கிறார்களா அப்படி, அதாவது துறவியாக மாற இருப்பவரை ஒரு சவப்பெட்டியில் வைத்து அவரது தலையின் அருகே நின்று சில பாடல்களை பாடி, எவ்விதம் ஒரு மரண சடங்கினை மேற்கொள்வார்களோ அவ்விதமாகவே செய்வார்கள். அவன் தன்னை மரித்தவனாக உணரச் செய்வார்கள். அனைத்து உணர்ச்சிகள், ஆசைகள், கனவுகள் மற்றும் உலகியலான ஆசைகள் அனைத்தும் மரித்துப் போகுமாறு செய்வார்கள். பௌத்தர்கள் மஞ்சள் ஆடைகள் அணிந்து கொண்டார்கள் எனில் இனி அவர்கள் இந்த உலகியலான ஆசைகளில் செய்வதற்கேதுமில்லை என்பதே அதன் அர்த்தம். அவரது சுயநலமான எண்ணம் இவ்வுலகில் மரித்துப்போனது என்பதே பொருள். அதேபோல் தீப்பிழம்பைப்போன்ற செந்நிறத்தை உடுத்தும் வேதாந்திகள் ( ராமா தனது உடையை சுட்டிக்காட்டி பேசினார் ) இது தீயின் சரியான வண்ணமல்ல ஆனாலும் அதற்கு ஓரளவு நெருங்கிய வண்ணம் , இது அமெரிக்காவில் காணக்கிடைக்கும் தீயின் வண்ணம், இந்தியாவில் எங்களிடம் மிகச்சரியான தீயின் வண்ணத்தில் உடைகள் உண்டு. இந்தியாவில் எங்கேனும் சற்றுத்தொலைவில் அமர்ந்திருக்கும் துறவியைக் கண்டால் நீங்கள் அவரை ஒரு மனிதரா அல்லது நெருப்புக்குவியலா என அடையாளம் காண முடியாது. இந்த நிறம் நெருப்பின் வண்ணத்தைக் குறிப்பிடுகிறது. அதாவது இந்த வண்ணத்தை அணிந்திருக்கும் நபர் தனது உடலை எரித்துவிட்டார் என்று பொருள். இந்தியாவில் பெரும்பாலும் இறந்தவர்களை புதைக்காமல் எரிக்கவே செய்வார்கள். இந்த வண்ணத்தை அணியும் மனிதன் தனது உடலை தியாகம் செய்துவிட்டான் என்பதே பொருள். அவர் தனது உடலை சத்தியத்தின் பலிபீடத்தில் வைத்தவர், அனைத்து உலகியல் ஆசைகள், உலகியலான குறிக்கோள்கள், உலகியலான பசி மற்றும் வேட்டையாடல் அனைத்தும் தீயில் இடப்பட்டுவிட்டது என்பதே அர்த்தம்.
சிலுவையின் நிறம் சிகப்பு. இயேசு கிறிஸ்துவின் நிறமும் சிகப்பு. கிறிஸ்துவர்களும் சிலவற்றை சிகப்பு வண்ணத்தில் விரும்புகிறார்கள். சிகப்பு என்பது இரட்டை பொருளைக் கொண்டது ஒன்று அது தீயின் வண்ணம், இன்னொன்று இயேசுவின் ரத்தம். ஆனால் இதற்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. மஞ்சள் நிறம் உடலின் மரணத்தையும், காமத்தின் மரணத்தை குறிப்பிட்டாலும் வேதாந்திகள் மஞ்சள் அங்கிகளை அணிவதில்லை, அவர்கள் தீயின் வண்ணத்தில் இருக்கும் சிகப்பு அங்கிகளையே அணிகிறார்கள். அப்படியெனில் இது ஒரு பார்வையில் மரணத்தை குறிப்பிட்டாலும் இன்னொரு பார்வையில் வாழ்க்கையையும் குறிப்பிடுகிறது. நெருப்பிற்கு வாழ்க்கையுண்டு, அது வாழ்வை நீடிக்கிறது , அதற்கு ஆற்றல் உண்டு, அதற்கு சக்தி உண்டு. சிவப்பு அங்கி என்பது அனைத்துவிதமான தாழ்வான எண்ணங்கள், சுயநலம், காமம் போன்றவற்றை நெருப்பில் இட்டதை குறிப்பிடும். இன்னொரு புறம் அது வாழ்வில் இருந்து நெருப்பு, ஆற்றல், சக்தி போன்றவைகள் முளைப்பதை காட்டும். சிகப்பு அங்கிக்கு இரண்டுவிதமான பொருளுகளுண்டு. சிகப்பு அங்கி காமத்தின் மரணத்தை மட்டுமன்றி வாழ்க்கையின் ஆன்மாவையும் குறிப்பிடும். பயம் வேண்டாம். பயம் வேண்டாம். வேதாந்தம் அக்னியால் ஞானஸ்நானம் செய்வதை ஓதுகிறது, நீரால் ஞானஸ்நானம் செய்வதையல்ல. வேதாந்தம் நெருப்பினால் , சக்தியினால், ஆற்றலினால் ஞானஸ்நானம் செய்வதைப்பற்றி கூறுகிறது. இந்த தீ நம்மை விழுங்கிவிடும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை. பைபிளிலும் நீங்கள் படிக்கலாம், “ யார் உயிரை காப்பாற்றிக்கொள்கிறாரோ , அவர் அதனை இழக்கவும் வேண்டும்.” நீங்கள் இந்த தாழ்மையான வாழ்வை இழந்தால், நீங்கள் உண்மையான வாழ்வை காக்க இயலும். இதுதான் வாழ்வின் கொள்கை. ஓ , மக்களே இந்த உலகத்தில் என்னவிதமான அழிவை வாழ்க்கைக்கு ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவர்களின் உலகியல் வாழ்வே அவர்களுக்கு சிறை, மரணம், நரகமாக இருக்கிறது. நீங்கள் ராமாவை மன்னியுங்கள் இதுவே உண்மை. அனைவருக்கும் துக்கமும், கவலையும் ஹிமாலாயம் போல் இருக்கிறது. அவர்கள் ஒரு பெண்டுலம் போல் கண்ணீருக்கும், புன்னகைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர். கோபங்கள் மற்றும் உதவிகளுக்கு இடையே தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் கற்பனையால் அவர்கள் தங்களைச்சுற்றி ஒரு சிறை, இருண்ட நிலவறை மற்றும் நரகத்தை உருவாக்கி கொள்கிறார்கள்.
வேதாந்தம் உங்களின் இந்த அறியாமையை விரட்ட வேண்டும் என்றே கேட்கிறது. இந்த அறியாமையை எரியுங்கள், இந்த தாழ்ந்த அகங்காரத்தை எரியுங்கள், இந்த தாழ்ந்த சுயநலம் உங்கள் உடலை நரகமாக்கி, உங்கள் அறிவை எரிக்கிறது. அறிவு என்பது எப்போதும் ஹிந்துக்களால் நெருப்பாகவே குறிப்பிடப்படும். இந்த நெருப்பானது அறிவு அல்லது ஞானத்தின் மீதுள்ள அழுக்கை எரிக்கவல்லது. அனைத்தையும் எரித்து வெளியே வாருங்கள் என்பதே இந்த நிறத்தின் பொருளாகும்.
சிலர் ராமாவிடம் , “ நீங்கள் ஏன் எங்களின் கவனத்தை ஈர்க்கிறீர்கள் ? “ என கேட்கிறார்கள். நன்று, ராமா அவரிடம், “ சகோதரரே, சகோதரரே, உங்களுக்கு இந்த உடைகளால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா ? “ அவர் அதற்கு பதிலளிக்கையில் தனக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை, ஆனால் பிறர் பாதிப்புகளை தருகிறார்கள் என்றார். ராமா அவரிடம் நீங்கள் அடுத்தவர்களின் அறியாமைக்கு பொறுப்பாக இயலாது அல்லவா ? நீங்கள் உங்களின் சொந்த மூளை மற்றும் அறிவின் மீது கவனம் கொள்ளுங்கள். நீங்கள் இந்த உடைகளில் ஏதேனும் குறையை கண்டறிய இயலுமெனில் காணுங்கள், பிறர் அதில் குறைகள் கண்டால் அதற்கு நீங்கள் பொறுப்பானவர் அல்ல.
இந்த உலகின் பெரும் சாது, பெரும் துறவி, பெரும் சுவாமி, சூரியனே, உதிக்கின்ற சூரியன். தினமும் வேதாந்த துறவிகளின் வண்ண உடையை உடுத்திதானே வெளிவருகிறது. இன்றைய இரவின் சொற்பொழிவில் இந்த சூரியன் மாறுகின்ற உடலுக்கு, மாறாத ஒன்றை குறிப்பிடுவதாக அமையும். சூரியன், சுவாமி, சாது, செவ்வாடை உடுத்திய சூரியன் போன்றவைகள் உண்மையான ஆத்மனின் குறியீடாக இருக்கும். அதாவது உண்மையான சுயம், அது மாறாத ஒன்று. அது நேற்று, இன்று மற்றும் எப்போதும் இருக்கக்கூடியது. சூரியனை குறிப்பாக கொண்டு நாம் மாறக்கூடியதையும், மாறக்கூடிய பொருட்களையும் பற்றி குறிப்பிடலாம். மனிதனுக்குள் மாறக்கூடியவைகள் உண்டு, அதே மனிதனுக்குள் மாறாதவைகளும் உண்டு அதாவது நித்திய உண்மையான ஆத்மன். இது சூரியனைப்போன்றது. மாறக்கூடியவைகள் மூன்று அங்கங்களைக் கொண்டது. பரு உடல், நுட்பமான உடல் மற்றும் விதை உடல். இவைகள் எல்லாம் இந்த உடல்களுக்கு ராமா வழங்கிய பெயர்கள். சமஸ்கிருதத்தில், ஸ்தூல, சூட்சும மற்றும் காரண சரீரம் என்பதே அதன் பெயர்கள். இந்த மூன்று உடல்களும் மாறக்கூடியவைகள். இவைகள் சுயம் அல்ல, ஆனால் சுயமற்றவை. இவைகள் மாறுபவை, சிக்கலானவை, ஆனால் இவைகள் சுயமல்ல. உங்கள் சுயம் என்பது மாறாதது என்பது உங்களுக்கு இந்த விரிவுரையில் காட்டப்பட வேண்டும்.
இந்த மூன்று உடல்கள் மற்றும் உண்மையான ஆத்மன் குறித்த ஒரு தெளிவான எண்ணத்தை தர நாம் ஒரு விளக்கத்தை தர வேண்டும். இதனை நீங்கள் கவனத்தோடு கேளுங்கள். இன்றைய இரவு நடக்க இருக்கும் பேச்சில் எந்தவிதமான தர்க்கமோ, விவாதமோ இருக்காது. இன்றிரவு ஹிந்துக்களால் நிறுவப்பட்ட மனிதனின் கூறுகள் பேசப்படும், உங்களுக்கு அவை தெளிவாக்கப்படும். இதனை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டப்பின், நேரம் இருப்பின் நாம் அனைத்து கேள்விகளின் தத்துவம் மற்றும் அதன் காரணங்களுக்குள் நுழைவோம். தர்க்கத்தை மேற்கொள்ளும்முன் நாம் அதன் கூறுகளை கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும். இன்றிரவு இவைகள் குறித்த தெளிவிற்கு நாம் செல்வோம்.
போப் கூறுவதைப்போல்,
நல்லொழுக்கம் என்பது ஒரு அழகிய தேவதையின் முகத்தோற்றம்,
நேசிக்கப்படுபவர்கள் மட்டுமே அதனை பார்க்க இயலும்.
எனவே உண்மை என்பது ஒரு பேரழகு அது உங்கள் இதயத்தில் ஆழ ஊடுருவினால் மட்டுமே அதனை நீங்கள் தெளிவாக காண இயலும். சூரியனின் இருப்பிற்கு எந்த சாட்சியமும் தேவையில்லை. சூரியனைப் பார்ப்பதே சூரியனை நிரூபிப்பதாகும். புறத்தே இருக்கும் அனைத்தையும் பார்க்க ஒரு புறவொளி தேவை, ஆனால் அந்த ஒளியானது பார்க்கும்படியே இருக்கும் அதற்கு எந்த வெளிச்சமும் தேவையில்லை. எனவே இன்றிரவு சில கூறுகள் உங்கள் முன் வைக்கப்படும், எந்த தர்க்கம், விவாதம் போன்றவைகள் அதற்கு தேவையில்லை. நாம் இப்பொழுது விளக்கத்திற்குள் வந்துவிட்டோம்.
நீங்கள் தயவு செய்து இந்த ராமா உடன் ஹிமாயலயத்தின் பனிப்பாறைகளுக்கு வாருங்கள். அங்கே நாம் அனைத்து திகைப்பூட்டும் காட்சிகளையும் காண இயலும். அங்கே வெண்ணிற கடல் போல் பனிப்பாறைகள் இருக்கும். அங்கே நாம் எந்த தாவரங்களையோ, விலங்குகளின் வாழ்க்கைகளையோ, மனிதர்களையோ காண இயலாது. இந்தப்பனிப்பாறை பகுதிகளில் நீங்கள் காணும் ஒரே காட்சி சூரியன் மேகங்களிடையே பயணிக்கும். சூரிய ஒளியின் காவி நிறம் அவ்விடத்தையே சாதுக்கள் மற்றும் சுவாமிகள் இருக்குமிடத்தைப்போல் தோற்றமளிக்க வைக்கும். சிறிது நேரம் கழித்து அவ்விடம் மஞ்சளாக மாறும். ஆனால் இந்தக்காட்சி மாற்றத்தில் இருக்கும் மாறாத ஒன்று சூரியன் மட்டுமே.
இந்தப்பனிப்பாறைகளே இந்தியாவின் பெரும் நதிகளாக மாறி ஓடுகின்றன. இந்தப்பனிப்பாறைகளே இந்திய நதிகளின் விதைகளாகும். நீங்கள் தயவு செய்து ராமாவுடன் நதிகளின் வாழ்வின் இரண்டாவது நிலைக்கு இறங்கி வாருங்கள்.
இப்போது நாம் நிலப்பரப்பின் இன்னொரு நிலைக்கு வந்துள்ளோம். நாம் இன்னமும் மலைகளிலேயே இருக்கிறோம், இங்கே பலவிதமான ரோஜாக்கள் மலர்ந்து காற்றை மணமாக்குகின்றன. பலவிதமான பாடும் பறவைகள் மகிழ்வோடு பாடி திரிகின்றன. மலைகளின் ஊடே கங்கையும், பலவிதமான சிற்றோடைகளும் முன்னும், பின்னுமாக ஓடி அழகு சேர்க்கின்றன. ஆற்றங்கரைகளில் பெருமரங்களின் நிழல்கள் விழுந்து எதிரொளிக்கின்றன.
என்ன இது ? இதுவே நதிகளின் வாழ்க்கையின் இரண்டாம் நிலையாகும். அருவிகளும், சிற்றோடைகளும் நதியின் சூட்சமமான உடலாகும். இந்த சூட்சமமான உடலாது , நதியின் விதை வடிவிலிருந்து வெளியானதேயாகும். இந்த சூட்சம உடல் மிகவும் சிக்கலான , தெளிவற்ற உடலாகும். இவைகள் மேலிருந்து கீழே குதித்து வருகின்றன. பின்னர் இது ஒரு ஏரியாகி அமைதியாகிறது. அதுவும் தெளிவற்று பின்னர் ஒரு மாறுதலுக்கு ஆட்படும்.
இப்பொழுது நாம் சிறிய சமவெளியில் இறங்குவோம். சமவெளியில் நாம் பல காட்சிகளை காண இயலும். அதே தண்ணீர், அதே நதி, இப்பொழுது விதையாக இருந்த பனிப்பாறை மிகுந்த கவித்துவமான உடலாக மாறி சமவெளியில் புழுதிகளுடன் நகர்கிறது. சமவெளியில் கங்கையெனும் ஆறு ஒரு ஓடையாக ஓடுகிறது. அது தனது தோற்றம், உடை, வண்ணம் போன்றவற்றை மாற்றிக்கொண்டு கலங்கலாக ஓடுகிறது. அதன் வேகமும் மாறிவிடுகிறது. அதன் குறைந்த வேகம் பலருக்கு பயனுள்ளதாகிறது. அதில் பல படகு பயணங்கள் நடக்கின்றன. மக்கள் அதில் நீராடுகின்றனர். அது பல கால்வாய்களின் மூலம் நிலத்தின் பயிர்விளைச்சலுக்கு தேவைப்படும் நீர் பாசனத்திற்கு பயன்படுகிறது.
இந்த நதியின் மூன்றாம் நிலை நதியின் பரு உடலாகும். நதியின் வாழ்க்கை என்பது என்ன ? நதியின் உண்மையான நோக்க சக்தி என்பது என்ன ? நதியின் நோக்க சக்தி என்பது சூரியனும், அதன் புகழ்பெற்ற வடிவமான உருண்டையுமாகும். இப்பொழுது இதே விளக்கத்தை மனிதனுக்கு பொருத்திப் பார்ப்போம்.
உங்களது மூன்று உடல்கள் எங்குள்ளது ? அவைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவையா ? உண்மையான சுயம் அல்லது ஆத்மனோடு தொடர்புடையவையா ?
உங்கள் ஆழ் உறக்க நிலையில் நீங்கள் உணர்வற்ற நிலையில் உங்களின் உண்மையான நிலை என்ன ? அங்கே நீங்கள் இந்த உலகம் பற்றி ஏதும் அறிய மாட்டீர்கள் ? அங்கே தந்தைக்கு தந்தை, அன்னைக்கு அன்னை, வீட்டிற்கு வீடு, இந்த உலகத்திற்கு உலகம் போன்ற ஏதுமில்லை, அங்கே அறியாமை, துக்கம், மரணம், நிர்மூலமான நிலை என்பதும் இல்லை. உண்மையாக கூறுவதெனில் அது ஒன்றுமில்லாத நிலை ?
வேதாந்தம் இந்நிலை குறித்து கூறுகையில் , இந்த நிலை ஒருபோதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை, இந்தநிலையில் மனிதனின் விதை உடல் இருக்கும். அதாவது உண்மையான சுயம் அல்லது மனிதனின் ஆத்மன். அங்கே பனிப்பாறைகளின் மேல் பிரகாசிக்கும் சூரியனைப்போல் சுயமானது இருக்கும், இனி மனிதனது வாழ்க்கையானது நதியின் வாழ்க்கையோடு ஒப்பிடப்படும்.
இங்கே சூட்சமமான விஷயங்கள் பேசப்பட இருப்பதால் நீங்கள் மிகுந்த கவனத்தோடு இதில் பங்குபெற வேண்டுமென கோருகிறேன். இதனை முன்பே ஒருநாளில் கூறியிருப்பினும் , தேவை ஏற்படுகையில் மீண்டும் கூறப்படுவது அவசியமாகிறது.
உங்களுடைய ஆழ்நிலை உறக்கத்தில் இந்த உலகம் இருப்பதில்லை. அது கனவுலகில் மட்டுமே இருக்கும். ஆழ்நிலை உறக்கம் என்பது கனவற்ற நிலை. நீங்கள் எழுகையில் ஆழ்நிலை உறக்கத்தில் ஒன்றுமில்லை என்பதை கூறுவீர்கள். வேதாந்தத்தில் , ஆழ்நிலை உறக்கத்தில் ஒன்றுமில்லை. ஆனால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவியலாளரான ஹெகல் இந்த ஒன்றுமில்லாதநிலையே ஏதோவொன்று என நிரூபித்திருக்கிறார். இந்த ஒன்றுமில்லாத நிலையே விதை உடல். இந்த விதை உடலே உங்கள் வாழ்வின் பனிப்பாறை. பைபிளில், கடவுள் ஒன்றுமில்லாத நிலையிலிருந்தே ஏதோவொன்றை உருவாக்கினார் என்கிறது. ஹிந்து மதமும் இந்த ஒன்றுமில்லாத நிலையிலிருந்தே மொத்த உலகமும் தோன்றுகிறது என்கிறது. தத்துவவியலாளர்கள் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து ஏதோவொன்று ஒருபோதும் தோன்றாது என்று கூறினாலும், வேதாந்தம் ஒன்றுமில்லாத நிலை என்பது உண்மையில் ஒன்றுமில்லாத நிலையல்ல என்றும் கூறுகிறது. அது ஒன்றுமில்லாத நிலை என்று நீங்கள் விழித்தப்பின் கூறுகிறீர்கள். சில வார்த்தைகளுக்கு நாம் சில சமயம் எப்படி வேண்டுமானாலும் நாம் விரும்பும் வகையில் பொருள் கூறலாம். இது உண்மையான ஒன்றுமில்லாத நிலையல்ல. இது பனிப்பாறைகளைப் போன்ற விதை உடல். எப்படி ஆழ்நிலை தூக்கத்தில் ஒன்றுமில்லாத ஒன்றில் ஏதோவொன்று வெளிப்படுகிறதோ, அத்தகைய விதை உடலில் சூரியன், கடவுள், ஆத்மன் போன்றவை உள்ளிருப்பதை உணருங்கள். இந்த விதை உடலே இந்த முழு பிரபஞ்சத்திற்கும் உரியது. சூரியன் அல்லது கடவுள் அல்லது ஆத்மன் இவைகளின் பொருளென்ன என நீங்கள் வினவலாம். தயை கூர்ந்து கேளுங்கள்.
நீங்கள் தூங்கி எழுந்தப்பின் கூறுகையில், “ நான் மிகுந்த அமைதியாக தூங்கினேன், நான் கனவுகள் ஏதும் காணவில்லை” . இங்கே நாம், நீங்கள் கூறியதை ஒரு வெள்ளைத்தாளில் எழுதுமாறு கூறுகிறோம். பின்னர் வேதாந்தமானது வந்து இந்த மனிதனின் எழுதிய அறிக்கையின் படி அந்த இரவில் அவர் இறந்துவிட்டார் அந்த இடத்தில் வேறு எவரும் இல்லை என்கிறது. இந்த நிலையை ஆய்வுக்கு உட்படுத்திய நீதிபதி அந்த மனிதனிடம் நீ எழுதிய அறிக்கை உண்மையா என வினவினார். அவன் ‘ஆம்' என்றான். இதற்கான சாட்சியம் யார் என்று வினவியபோது, தானே அதற்கான சாட்சியம் என்றான். நீதிபதியும், நீயே சாட்சியம் என்றால் , உனது அறிக்கையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனில், அங்கே யாரும் இல்லை என்ற உனது அறிக்கை சரியெனில் , நீயாவது அந்தக் காட்சியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் நீ அங்கே இருந்திருந்தால் இந்த அறிக்கை முற்றிலும் தவறானது. மேலும் அது முரண்பாடான ஒன்று. ஏனெனில் ஒரு மனிதனாவது இந்தக் காட்சியில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருப்பின் நீ எழுதியது தவறான அறிக்கையாகும்.
இதேபோல் நீங்கள் எழுந்த உடன் ஒரு அறிக்கையை தருகிறீர்கள் அதில், “ ஓ , ஐயா நான் மிகுந்த அமைதியாக தூங்கினேன், நான் அத்தகைய ஆழ்ந்த உறக்கத்தை மகிழ்வோடு அனுபவித்தேன் அந்த காட்சியில் ஒன்றுமில்லை” என்று கூறுவீர்கள். ராமா கூறுகிறான், “ஐயா, நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் உங்கள் உண்மையான சுயம், உண்மையான ஆத்மன், உண்மையான சூரியன், உண்மையான கடவுளும் தூங்கிவிடும். பின்னர் யார் ஒன்றுமில்லாதை பார்க்க இயலும். எனவே ஆழ்ந்த தூக்கத்திலும், குழப்பமான கனவிலும் கூட நீங்கள் இருக்கிறீர்கள். எனவே உங்களின் ஆழ்ந்த தூக்கநிலை குறித்து, வேதாந்தம் கூறுகையில் இரண்டு விஷயங்களை நாம் பார்க்க இயலும், ஒன்றுமில்லாத நிலை என்பது பனிப்பாறை அல்லது விதை உடலைப் போன்றது. எனவே சூரியன், உண்மையான ஆத்மன், பிரகாசிக்கும் சுயம் அல்லது கடவுள் ஆழ்ந்த தூக்கத்திலும் அனைத்தையும் பார்க்கும். இது ஏன் சிக்கலானது மற்றும் மாறாதது ? ஏனெனில் நீங்கள் கனவுலகிற்கு வருகையில் அல்லது கனவு நிலைக்குள் விழுகையில் அந்த ஒன்றுமில்லாத தன்மை சென்றுவிடும். அது மேலும் இருக்காது. இந்த குழப்பம் அல்லது ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் ஒன்றுமில்லாத தன்மை உங்கள் உண்மையான சுயமெனில் அது ஒருபோதும் மறைவதில்லை. கனவுலகில் உங்கள் விதை உடல் உண்மையல்ல. நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் இந்த தனித்துவமான உலகமானது ஒன்றுமில்லாததிலிருந்தே வெளிப்படும். இது ஒரு உண்மை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நீங்கள் வேறுவிதமாக சிந்திக்கிறீர்கள். நீங்கள் அனைத்தையும் தலைகீழாக பார்க்கிறீர்கள். ராமாவை நம்புங்கள், இந்த உண்மை ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் ஊடுருவ வேண்டும், அது இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் விரைவாகவோ அல்லது பின்னரோ நுழைய வேண்டும்.
இங்கே மக்கள் அனைத்தையும் கீழிருந்து மேலே கொண்டு செல்ல நினைக்கிறார்கள். அவர்கள் நதியானது மலையேற வேண்டும் என நினைக்கிறார்கள். இது இயற்கைக்கு எதிரான ஒன்றாகும். இந்த ராமா ஆழ்நிலை தூக்கம், கனவுலகம் பற்றி கூறியவைகள் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஆனால் நீங்கள் இயற்கையின் திட்டங்களை ஆய்வு செய்கையில், எங்கிருந்து உங்கள் உலகம் வந்தது ? உங்களின் இந்த உலகம் ஒருகாலத்தில் நெபுலர் நிலையில் ( Nebular State ) இருந்தது. இவையனைத்தும் வடிவமற்ற ஒரு நிலையிலிருந்து வந்தவையே, அவைகள் உங்கள் ஆழ்நிலை தூக்கத்தோடு தொடர்புடையவையே. அவைகள் குழப்பமான நிலையை கொண்டவையே. அதிலிருந்தே இவையனைத்தும் தோன்றின. உங்களின் தாவர, விலங்கு, மனித சாம்ராஜ்ஜியங்கள் அனைத்தும் அங்கிருந்தே வந்தன. வேதாந்தம் கூறுவது யாதெனில் நீங்கள் இயற்கையில் காணும் அனைத்தும், உங்கள் உடலியலான பார்வைகள் மூலம் காணும் உண்மைகளே. இந்த மொத்த உலகும் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து தோன்றியிருக்குமெனில் உங்களின் விழிப்பு மற்றும் கனவுநிலையும் அதிலிருந்தே தோன்றியிருக்கும். அதுவே ஒவ்வொரு மனிதனிலும் காணப்படுகிறது. ஒரு குழந்தையானது ஒன்றுமில்லாத நிலையிலிருந்து மெல்ல அடுத்த நிலைக்கு வருகையில் அதனை நீங்கள் உயர்வாக அழைக்கலாம். ஒப்பீட்டளவில் அது உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலையாகவும் இருக்கலாம்.
இந்த பிரபஞ்சத்திற்கு எது விதியோ அதுவே சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கும் விதி. ஆழ்ந்த உறக்கநிலையிலிருந்தே கனவுநிலை தோன்றுகிறது. மக்கள் தங்களின் கனவுநிலையை தங்களின் விழிப்புநிலையை சார்ந்தது என விளக்க முயல்கிறார்கள். வேதாந்தம் தனது உண்மையான வெளிச்சத்தை பாய்ச்சுகையில் நீங்கள் மிகுந்த ஆச்சரியப்படுவீர்கள். ஐரோப்பிய தத்துவவியலாளர்களான ஹெகல் மற்றும் கண்ட் ( Hegel and Kant ) போன்றோர்களாலும் கனவுகளின் நிகழ்வுகளை தெளிவாக விளக்க இயலாது. இதில் இன்றிரவு வாசம் செய்ய நமக்கு நேரமானது இல்லை. ஆனால் இதனை தனித்த ஒரு விரிவுரையின் மூலமோ அல்லது ஒரு நூலின் வடிவத்திலோ நிச்சயமாக நிரூபிக்க இயலும்.
கனவுநிலை குறித்து மேலும் நாம் பேசுவோம். இங்கே சூட்சும உடல், கனவு காணும் சுயம் ஒரு அழகிய உலகத்தை காணும், இந்த கவித்துவமான நிலையில் கனவு காணும் சுயமானது பறவை மற்றும் அரசனைப் போன்றது. அது உடனடியாக ஒரு பிச்சைக்காரனைப் போலவும் மாறும். ஹிமாலய மலைகளில் வழிதவறிய ஒருவன், லண்டன் போன்ற பெரு நகரத்தில் குடிமகனாவான். இப்போது இந்த நகரம், பின்னர் வேறொரு நகரம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறது ! மலைகளில் இருந்து வரும் ஓடைகள் மாறுகிறதே அதைப்போலவே இந்த மாற்றங்கள், அவ்வப்பொழுது சிக்கலான, குழப்பமான வழிகளை தேர்ந்தெடுக்கும். ஏனெனில் நீங்கள் கனவுலகத்தில் வாழ்ந்து வருகிறீர்கள். அந்த கனவுலகில் வாழ்கிறவர்கள் மரித்தவர்களாகவும், மரித்தவர்கள் வாழ்பவர்களாகவும் காட்சியளிப்பார்கள். இந்த கனவுலக நிலம் என்பது கற்பனையும், கவித்துவமும் கொண்ட நிலமாகும். கனவு எனும் அனுபவத்திற்கு பின்பே அடுத்த நிலையான இரண்டாம் நிலை, இதில் நீங்கள் மலையிலிருந்து சமதளத்திற்கு இறங்கும் நதியை போல் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள். சமதளத்தில் நதியானது பரு உடலை எடுத்துக்கொள்ளும், ஆயினும் நதியின் சூட்சும உடல் அதேபோலவே இருக்கும். மண், களிமண், சேறு போன்றவற்றில் ஆறானது கலந்து சிகப்பாகவோ, கலங்கலாகவும் சமதளத்தில் நதியானது ஓடினாலும் மலைகளில் இருந்து வரும் நதி நீரைப் போல் புதியதாகவே இருக்கும். நதி மலைகளில் இருந்து சமதளத்திற்கு வருகையில் புதிய ஆடைகளை அணிகிறதேயன்றி அதன் சூட்சும உடல் அவ்விதமாகவே தொடர்கிறது.
உங்களின் விழிப்பு நிலையில் செயல்படும் உங்களது மனம், அறிவு போன்றவை கனவுலகில் காணாமல் போவதில்லை அது அவ்விதமாகவே இருக்கும். ஆனால் இவைகள் நீங்கள் ஆழ்நிலை தூக்கத்திற்கு போகும்போது அவைகளே ஒப்பனைகளாகும். இந்த சூட்சம உடல், உங்களின் பரு உடலில் இருந்து பிரிக்கப்பட்டது.
நீங்கள் படுக்கைக்கு போகும் முன் உங்கள் உடைகளை கழற்றுவதைப்போல் உங்கள் சூட்சும உடல் உங்கள் கனவில் வேலை செய்கிறது. எது சூட்சும உடல் ? அதுவும் ஒரு பொருள். பரு உடலுடன் தொடர்பு கொண்ட சூட்சும உடலை குறிப்பிட்டு காட்டலாம். தினமும் நீங்கள் உறங்க செல்லும் முன் உங்கள் பரு உடலை விட்டுவிட்டு உங்களின் சூட்சும உடலை மட்டுமே வைத்திருக்கிறீர்கள்.
உண்மையான ஆத்மன் அல்லது உண்மையான சுயம் என்பது உங்களின் ஆழ்நிலை தூக்கத்தில் பிரகாசிக்கும், அது மாறாதது அதுவே உண்மையான தெய்வீகம் ஆத்மன் அல்லது கடவுள். அதே கடவுள் நீங்கள் ஆழ்நிலை தூக்கத்தில் இருக்கும் போதும் இருக்கிறார். அவர் உங்கள் விதை உடலில் பிரகாசிக்கிறார். நாம் ஆய்வு செய்கையில் ஆழ்நிலை உறக்கத்தில் எந்த அகங்காரமும் இல்லை, ‘ நான் உறங்குகிறேன்,’ என்ற எண்ணமும் இல்லை. ,’நான் வளர்கிறேன்', ,’ நான் உணவை செரிக்கிறேன்', ‘ நான் இதை செய்கிறேன், அதனை செய்கிறேன், என்கிற எந்த அகங்காரமும் இல்லை, உண்மையான சுயம் மட்டுமே அங்கே இருக்கிறது. அங்கே தன்முனைப்பு எனும் அகங்காரம் இல்லை. வெளிப்படையாகத் தோன்றும் அகங்காரமே சுயம் என மக்களால் அறிந்து கொள்ளப்படுகிறது.
விழிப்பு நிலையில் அகங்காரமானது வெளிப்படையாகவே தோன்றும். கனவு நிலையில் உண்மையான ஆத்மனின் எதிரொளிப்பாகவோ, நிழலாகவோ இந்த அகங்காரம் தோன்றும். உங்கள் விழிப்பு நிலையில் அகங்காரம் என்பது நிரந்தரமானது, அது மெல்லிய ஓடையைப் போன்றது, சமதளத்தில் மெதுவாக நகரும் நதியைப்போன்றது.
உங்களின் விழிப்புநிலை அனுபவம் என்பது நேரம், இடம் மற்றும் அவசரம் இவைகளைப் பொருத்தது. இந்த மூன்றும் இல்லாமல் எதையும் நீங்கள் கருத இயலாது. இம்மூன்றினால் நெசவு செய்யப்பட்ட வலையிலேயே உங்கள் உலகம் உள்ளது. இது உங்களின் கனவு உலகம் மற்றும் விழிப்புநிலை உலகிலும் உண்டு. மாக்ஸ்முல்லர் தனது மொழிப்பெயர்ப்பான , ‘ கண்ட்'ஸ் கிரிட்டிக் ஆஃப் ப்யூர் ரீசன்' ( Kant’s Critique of Pure Reason ) என்பதன் முன்னுரையில் கண்ட் அவர்கள் வேதாந்தத்தைப் போன்ற தத்துவத்தையே பேசுகிறேன் என்கிறார். மாக்ஸ்முல்லர் ஹிந்து வேதாந்தம் நேரம், இடம் மற்றும் அவசரம் போன்றவற்றை அதிகம் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார். ராமா உங்களிடம் ஒன்றை கூற விரும்புகிறான், மாக்ஸ்முல்லர் ஹிந்து வேதங்களை அதிகம் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துக்கள் நேரம், இடம் மற்றும் அவசரத்தை நிரூபித்தே விட்டார்கள். நீங்கள் கனவுலக அனுபவங்களை பொறுமையாக கேட்க வேண்டும். உங்கள் ஆழ்நிலை தூக்கத்தில் நேரம், இடம் மற்றும் அவசரம் குறித்த பிரக்ஞை ஏதுமில்லை. கனவுலகில் இருந்து நீங்கள் வெளிவரும் போதே இம்மூன்றின் இருப்பும் வெளிப்படுகிறது. உங்கள் ஆழ்நிலை உறக்க நிலையில் முளைவிட காத்திருக்கும் இம்மூன்றும், உங்களின் விழிப்பு நிலையில் வளர்ந்து பெருமரமாக நிற்கிறது. கனவுலகில் சாத்தியமாகும் பலவித மாற்றங்கள் விழிப்பு நிலையில் சாத்தியப்படுவதில்லை.
கனவுலகில் மிகப்பெரிய கணித புதிர்களை விடுவிக்கும் ஒருவனால் விழிப்பு நிலையில் அந்த கணித புதிர்களை தீர்க்க இயலாமல் தடுமாறுவதை இந்த ராமா அறிந்திருக்கிறான். ராமா கனவில் பாடல்கள் பல எழுதியிருப்பான் ஆனால் அவன் எழுந்தப்பின் அவனால் அதன் தொடர்ச்சியை , சில வரிகளைக்கூட தொட இயலாது. நீங்கள் கனவுலகில் சிலசமயம் ஒரே மாதிரியான கனவுகள் தோன்றுகின்றனவே என வினவலாம். நமது கனவுகள் என்பவை நமது விழிப்பு நிலையின் நினைவுகளின் பழைய நினைவுகள் அல்லது நினைவூட்டல் எனலாம். விதையில் விருட்சம் இருப்பது நிஜம். விருட்சமானது விதையிலிருந்து வரவில்லை என்று வாதம் செய்யலாமா ? அது தவறான வாதமாகும்.
வேதாந்தம் ஸூஷூப்தி என்பதை ராமா உங்களின் விதை நிலை என்கிறார். ஆழ்நிலை உறக்க நிலை என்பது விதையைப் போன்றது. இதிலிருந்து விழிப்பும் , பரு உடலும் உருவாகிறது. உங்கள் விழிப்புநிலை அனுபவம் மீண்டும் தூக்கத்திற்கு திரும்புவது இயல்பானது. உங்கள் விழிப்புநிலை கட்டாயப்படுத்தப்பட்டு கனவு உலகிற்கு செலுத்தப்பட்டால் அது முரண்பாடானது என்பது ராமாவின் அறிக்கை அது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு மொத்த மரமும் சுருக்கப்பட்டு விதையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அது தானே மரம் என்று எந்த உரிமையையும் கோருவதில்லை.
வேதாந்தம் கனவுலகம் மற்றும் விழிப்புநிலை அனுபவங்கள் உங்கள் ஆழ்நிலை தூக்கத்திலிருந்தே வெளிப்படுகின்றன என்கிறது. ஹிந்துக்கள் இந்த உலகம் ஒன்றுமில்லை எனும் போதோ அல்லது இந்த உலகம் அறியாமையின் விளைவு எனும் போதோ அவர்கள் கூற விழைவது ஆழ்நிலை உறக்கநிலையில் உங்களுக்குள் தோன்றும் ஒன்றுமில்லாத நிலையையே இந்த நிலையே அறியாமை நிலையாகும். அறியாமை என்பது மாற்றத்திற்குரியது. உங்கள் கனவுலகில் இரண்டு பொருட்கள் உண்டு, அது பார்ப்பவர், பார்க்கப்படும் பொருள் என்ற இரண்டாகும். வேதாந்தத்தின்படி பார்ப்பவரும் , பார்க்கப்படும் பொருளும் தங்கள் தோற்றத்தை ஒரே சமயத்தில் வெளிப்படுத்துகின்றன. உங்கள் கனவில் நீங்கள் ஒருபுறம் ஒரு துறவியாக காட்சியளிப்பீர்கள், மறுபுறம் அதனை பார்ப்பவராகவும் இருப்பீர்கள். நீங்கள் ஒரு குதிரையையும் அதனை ஓட்டுபவரையும் கனவில் பார்ப்பீர்கள் எனில் இரண்டின் தோற்றமும் ஒரே சமயத்திலே வெளிப்படும். நீங்கள் ஒரு மலையை கனவில் பார்ப்பீர்களெனில் அந்த மலை பார்க்கப்படும் பொருள், துறவியோ பார்ப்பவர். கனவில் இறந்தகாலமும், எதிர்காலமும் பார்க்கப்படும் பொருளோடு ஒரே சமயத்தில் தோன்றும்.
கனவில் நீங்களே நண்பராகவும், மறுபுறத்தில் எதிரியாகவும் தோற்றமளிப்பீர்கள். நீங்களே அனைத்துமாக இருப்பீர்கள். ஆயினும் உண்மையான ஆத்மன் சூரியனைப்போன்றது அது மாறாதது. ஆத்மனே பிரகாசிக்கும் சுயம். அந்த உண்மையான சுயமே உங்கள் நண்பன். இந்த உண்மையான சுயம் உங்கள் விழிப்புநிலை, ஆழ்நிலை தூக்கம் மற்றும் அனைத்து மாற்றம் தரும் சூழலிலும் உங்களுடனேயே இருக்கிறது.
உண்மையான சுயம் அனைத்து கவலை, பயம் மற்றும் சோதனை , தொல்லைகளைக் கடந்தும் நிற்கும் என்பதை உணருங்கள். யாரும் உங்களுக்கு தீங்கோ, காயமோ ஏற்படுத்த இயலாது.
உடையுங்கள், உடையுங்கள், உடையுங்கள் அந்த நண்டுகளின் கால்களை , ஓ கடலே,
உடையுங்கள், உடையுங்கள், உடையுங்கள் எனது உலகத்தின் கால்களை
ஓ சூரியனே, புயல்களே , பூகம்பமே , போர்களே
போற்றி , நல்வரவு , வருக , உங்கள் பலங்களை என் மீது முயற்சியுங்கள் !
அழகிய எறிகுண்டே எனது விளையாட்டு பொருள், வெடியுங்கள் !
எரியும் நட்சத்திரமே எனது அம்புகள் பறக்கட்டும் !
உங்கள் எரியும் தீயை நீங்கள் உட்கொள்வீரா ?
ஓ அச்சமூட்டும் ஒன்று , நீங்கள் என்னிடமிருந்த சுடர்,
நீங்கள் வாள், நீங்கள் பீரங்கியின் குண்டு,
எனது ஆற்றல் தலைகீழாக உன்னை விரட்டுகிறது !
காற்று வீசும் திசையில் உடல் கரைகிறது ;
முடிவிலியான என்னை புனிதமான இடத்தில் வை !
அனைத்து செவியும் என் செவிகள், அனைத்து கண்களும் என் கண்கள்,
அனைத்து கரங்களும் எனது கரங்கள், அனைத்து மனமும் எனது மனம் !
நான் மரணத்தை விழுங்கியவன் , அனைத்து கண்களும் என் கண்கள்,
நான் கண்டறிந்த உணவு எவ்வளவு இனிப்பு மற்றும் உறுதி
பயமில்லை, கவலையில்லை, வேட்டையாடும் வலியில்லை;
அனைத்தும் மகிழ்ச்சி , அல்லது சூரியன் அல்லது மழை !
அறியாமை, இருள், அதிர்வுகள் மற்றும் நடுக்கம் ,
அனைத்தும் என்றென்றும் அழிந்தது
எனது திகைப்பூட்டும் வெளிச்சத்தின் வெப்பம் தரும் காயம்
மகிழ்ச்சி சொல்லில் அடங்காதது ! ஜே !! ஜே !!!
ஓம் ! ஓம் !! ஓம் !!!
Excellent sir. Giving me more more insight. Yogi will bless you with full energy to complete this translation work. Thank you so much sir
ReplyDeleteஉண்மையான சுயம் அனைத்து கவலை, பயம் மற்றும் சோதனை , தொல்லைகளைக் கடந்தும் நிற்கும்
ReplyDeleteஇனியான கவிதை.. ஆனால் மஞ்சள் இந்தியாவில் மரணத்தின் நிறமாக பார்க்கப்படுவதாக குறிப்பிடுகிறார்... எந்தப் பகுதியில்..? தென்னிந்தியாவை பொறுத்தவரை மஞ்சள் நிறம் மங்கலத்தின் குறியீடு அல்லவா...
ReplyDelete